02.11.2024 - சனிக் கிழமை
"தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது; பணம் கொடுத்தும் தப்ப முடியாது" - சபை உரையாளர் 8:8
இந்நாள் வரை விலை பேசப்படாத ஒன்று இறப்பு.
இறப்பும் விலைபேசப்பட்டால் இங்கு கல்லறை நிரம்பாது, கல்லறையில் சாதிய பிளவு இருக்காது, இறந்தவர்களின் கல்லறையை உடைக்க வேண்டி இருக்காது(பகை உணர்வில்), பளிங்கு கல்லில் செதுக்கப்பட்ட தேவையில்லை, அனைத்து ஆன்மாக்கள் தினமும் இல்லை.
இறப்பு ஒன்று தான் மனிதனின் இயலாமையை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதரின் இறப்பும் நமக்கு நினைவுறுத்துவது, "இன்று நான் - நாளை நீ".
கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை தான் நமக்கான கைம்மாறை நிர்ணயிக்கும்.
ஆடிய அனைத்து ஆட்டமும் கல்லறையில் அடங்கி விடும்.
திருப்பாடல்கள் 31:12 சொல்வது போல நம் நிலை மாறும், "இறந்தோர் போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்; உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்."
உடைந்து போனதால் பயன் இல்லாதது போல இறந்தபின் நம் உடல் பார்க்கப்படும், பின்னர் மண்ணில் புதைக்கப்படும்.
கல்லறையிலும் சாதிய பிளவுகள், உயர்ந்த கல்லறைகள், பெருமைக்குரிய சடங்குகள் ஆகியவை இன்றும் தொடர்கிறது. இறப்பிலும் சாதியம் பார்க்கும் அழிவுக்குரிய கிறித்தவர்கள் நாம். மண்ணுக்குள் போகும் உடலிலும் தீட்டுப்பட்டு விடுமோ என்று அச்சப்படுகிறோம். தீட்டு கல்லறைத் தோட்டத்தில் அல்ல நம் கல்நெஞ்சங்களில் இருக்கிறது.
இருக்கும் போது கண்டுக் கொள்ளப்படாமல் இருக்கும் நபர்கள் இறந்தபின் கொண்டாடப்படுகிறார்கள்.
நான் செய்வது போலவே எனக்கும் செய்யப்படும் என்பதை அறியாத உயிருள்ள சடலங்கள் நாம்.
ஆண்டுக்கொரு முறை அனைத்து ஆன்மாக்கள் திருவிழாவை கொண்டாடுவதில் நாம் பெருமைக் கொள்கிறோம். ஆனால் நம் ஆன்ம அற்பக் காரியங்களை தேடி அலைந்து/அழிந்துக் கொண்டிருக்கிறது.
பணக் குவியல், பதவி வெறி, அடிமைத்தனம், தற்பெருமை, கொலைவெறி இவையெல்லாம் நம் ஆன்மாவை அழிக்கும் கொலைக் கருவிகள்.
கல்லறை செல்லும் முன் படைத்தவரை உள்ளத்தில் நினைப்போம்.
(சபை உரையாளர் 12:7
மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்புமுன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.)
ஆன்மா அழியாது இருக்க அழிவுக்குரியதை தேடாது இருப்போம்.
No comments:
Post a Comment