24_11

நன்றியுணர்வு தேவை...


பொதுக் காலம் 32ஆம் வாரம்

13.11.2024 - புதன் கிழமை 

"அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்" - கொலோசையர் 2:7

நல்லது நடக்காதா என்று ஏங்குவோர் பலர்? நல்லது நடந்தபின் நன்றி உணர்வோடு வாழ்பவர்கள் சிலர் மட்டும் தான். 

செய்த நன்மைக்கு பிரதிபலன் ஒன்று உண்டு என்றால் அது நன்றிக் கடனே. யார் என்று தெரியாத நிலையிலும் விபத்துக்குள்ளாகி சாகும் தருவாயில் இருக்கும் நபரை சரியான நேரத்தில் மருத்துவமனை கொண்டு சேர்க்கும் நபர் நன்றிக்குரியவரே. 

படிக்கும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கொடுத்து நல்வழிகாட்டும் அன்பர் நன்றிக்குரியவரே. இப்படி நன்மை செய்தோர் பலர் நன்றிக்குரியவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் நன்றியுணர்வு தான் இச்சமூகத்தில் இருப்பதில்லை. ஆபத்து காலத்தில் தேவைப்படும்/தேடப்படும் கடவுள் நல்லது நடந்தபின் தேடப்படுவதில்லை. கிடைக்கும் வரை தான் மரியாதை, எல்லாம் கிடைத்த பின் தலைக்கணம் தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 17: 11-19) 10 பேரின் தொழுநோய் நீங்க ஒருவர் மட்டும் நன்றி செலுத்த திரும்பி வருகிறார். நலம் கேட்டு வந்தவர்கள் 9 பேர் புற நலம் பெற்றார்கள், அகநலம் பெறவில்லை. ஒருவர் மட்டும் அக, புற நலம் பெற்றார். உள்ளம் நலமானதால் நன்றி சொல்ல வாய் திறந்தது.

நலம் பெற்றவர் தன் வழியே செல்லவில்லை, திரும்பி வந்து நன்றி சொல்கிறார். இயேசு அவர்களை குருவிடம் காட்ட சொன்னார், காரணம், லேவியர் 13:17 இல் சொல்லப்பட்டுள்ளது போல குரு செய்வார். "குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். நோய்த்தழும்பு வெண்மையாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்; அவர் தீட்டற்றவர்"). அதன் பின்னர் தான் அவர்கள் ஊருக்குள் நுழைய முடியும்.

ஆனால் அந்த சாமாரியரோ குருவை விட மேலான குரு இயேசு என்பதை கண்டுக் கொண்டார்.

சமாரியரின் நன்றி உணர்வு கடவுளைப் போற்றிப் புகழ்வதிலும், இயேசுவின் காலில் முகங்குப்புற விழுவதிலும் வெளிப்பட்டது.

நலன்களை பெறுகிற நாம் இன்று நன்றிக்குரியவர்களாய் இருப்பதில்லை. 

படைத்தவருக்கே நன்றி உள்ளவர்களாய் இல்லை என்றால் படைக்கப்பட்டவைகளுக்கும்/படைக்கப்பட்டவர்களுக்கும் நாம் எப்படி நன்றி உள்ளவர்களாய் இருப்போம்.

நன்றி உணர்வு இல்லாத மனிதர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள்.

நம் நன்றி உணர்வு நாம் பெற்றுக் கொண்ட நன்மையை மற்றவரோடு பகிர்வதிலும், மற்றவருக்கு நன்மை செய்வதிலும் வெளிப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...