(புனித செசிலியா - நினைவு)
பொதுக் காலம் 33ஆம் வாரம்
22.11.2024 - வெள்ளிக் கிழமை
சிறுவயது முதலே மாசற்ற வாழ்க்கை வாழ்ந்த செசிலியா தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இசைக்கருவிகளை ஆர்வத்தோடு இசைத்தார். இசையின் வாயிலாக இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.
வாழ்வு தருகின்ற, ஞானத்தைத் தரக்கூடிய விவிலியத்தை எங்கு சென்றாலும் தம் கரங்களில் ஏந்திச் சென்றார். தன்னை கிறிஸ்துவின் மணவாட்டி என்று அறிவித்தார்.
இவருடைய விருப்பம் இல்லாமல் வலேரியன் என்ற இளைஞனுக்கு இவரை மணம் முடித்துக் கொடுத்தார்கள்.
நான் என்னுடைய உடலை எனது மணவாளனாகிய இயேசுவுக்கு ஒப்புக் கொடுத்து விட்டேன். ஆகையால் நானாக எந்த விதத்திலும் என்னுடைய உடலை உனக்குத் தர மாட்டேன். என்னுடைய கற்பை வானதூதர் ஒருவர் பாதுகாத்து வருகிறார் என்று வலேரியானிடம் செசிலியா சொன்னார். இதை கேட்ட வலேரியான் திகைப்புற்று உன்னுடைய கற்பை வானதூதர் காத்து வருகிறாரா? என்னால் நம்பமுடியவில்லை என்றார்.
அதற்கு புனிதையோ, இதெல்லாம் திருமுழுக்கு பெற்றோரின் கண்களுக்கு தான் தெரியும் என்று சொல்ல, வலேரியான் திருமுழுக்கு பெற்றார்.
புனித செசிலியா இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்க, அவருடைய பக்கத்தில் வானதூதர் நிற்க கண்டு வலேரியான் வியந்து, இன்னும் இறைவனில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்.
இவரை தொடர்ந்து இவருடைய சகோதரர் திபெர்தியுஸ் ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொள்ள தொடங்கினார். இச்செய்தி ஆளுநர் காதை எட்ட, அவன் வலேரியனையும் அவருடைய சகோதரையும் தலை வெட்டி கொல்ல செய்தான்.
இறுதியாக, இயேசுவை மறுதலிக்க செசிலியா வற்புறுத்தப்பட்டார். கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்ததால் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட கட்டளையிட்டான் ஆளுநர். கழுத்து வெட்டப்பட்ட நிலையிலும் 3 நாட்கள் வரை கடவுளை போற்றி புகழ்ந்து கொண்டே இருந்தார் புனித செசிலியா.
தன்னை முழுவதும் கொடுத்தவர், தன் வாழ்நாள் முழுவதும் கடவுளை போற்றி புகழ்ந்தார் புனித செசிலியா.
நாமும் அவருக்கே சொந்தம். நாமும் நம்மை படைத்தவரிடம் நம்மை அர்ப்பணிப்போம்.
No comments:
Post a Comment