24_11

காணாமல் போனவற்றின் மீது அதிக அக்கறை...


பொதுக் காலம் 31ஆம் வாரம்

07.11.2024 - வியாழக் கிழமை 

"காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்" - எசேக்கியேல் 34:16

ஒரு வீட்டில் கீழ்ப்படிதலோடு வளரும் குழந்தையும், பொறுப்பற்றத் தன்மையோடு வளரும் குழந்தையும் இருக்கிறது என்றால் அக்கறையும் பாதுகாப்பும் பொறுப்பற்ற குழந்தைக்கு தான் அதிகம் கொடுக்கப்படும். சரியாக வளரும் குழந்தைக்கு தேவைப்படும் அக்கறையை விட வழிமாறிய குழந்தைக்கு தான் அதிக அக்கறை தேவைப்படும்.

வழி மாறியது மீண்டும் நல்வழிப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் இதற்கு காரணம். எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான். அவர்கள் தீயவர்களாக மாறுவது பெற்றோர் வளர்ப்பில் மட்டுமல்ல; சமூகத்தின் கையிலும் இருக்கிறது. 

ஒரு குழந்தை அதிக பாதுகாப்போடு, நல்வழியில் ஒரு குடும்பத்தால் வளர்க்கப்படலாம். ஆனால் சமூகம் அந்த குழந்தையை மாற்றிவிடும்.

இன்று பல குழந்தைகள் பெற்றோரிடமிருந்து காணாமல் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சமூகம் தீமையை நன்மையென்று போதிக்கிறது. மாய கவர்ச்சிக்குள் சிக்க வைக்கிறது (அலைபேசி, இணையம், தொலைக்காட்சி என்னும் வடிவில் பலர் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்). நாமும் விதி விலக்கு அல்ல.

இன்று குழந்தைகள் பெற்றோரிடமிருந்து திருடப்படுகிறார்கள். தொலைந்து போய் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே குழந்தைகள் வாழ்கிறார்கள். தனிமை, பிரச்சினை, கையாலாகாத தன்மை வருகின்ற போது தான் உண்மை நிலவரம் புரிகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் லூக்கா (15:1-10) காணாமல் போன ஆடு, காணாமல் போன திராக்மா ஆகியவற்றை பற்றி வாசிக்கிறோம். ஆயனுக்கு வழிதவறாத 99 ஆடுகளை விட, வழிதவறிய அந்த ஒரு ஆடு தான் மிக மிக முக்கியம். தொலைந்து போனது/வழிதவறியது மீண்டும் வர இயலாத நிலையில் இருந்தால் தேடிச் சென்று அதை மந்தையில் இணைப்பதே ஆயனின் பொறுப்பு.

இது இன்றைய நம் உறவுகளுக்கும் பொருந்தும்.

ஒன்று இருக்கும் வரை அதன் மதிப்பு புரியாது. அது மனித உறவுகளாக இருக்கலாம் அல்லது பொருளாக இருக்கலாம். 

இழந்தது இழந்ததாகவே இருந்தால் இறுதிவரை கவலை தான். தொலைந்ததை கண்டுப் பிடிக்கும் போது உச்சக் கட்ட மகிழ்ச்சி உண்டாகிறது.

ஒருவகையில் சொல்லப்போனால், நம்மவர்களை வழிதவற செய்தவர்கள் நாம் தான். நம் குழந்தைகள் விரும்புகிறவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்கிற போதும் நாம் குழந்தைகளை தொலைத்து விடுகிறோம். எது தேவை, எது சரி என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தாதவரை நாம் ஒவ்வொன்றாக இழக்கிறோம்.

இழந்துப் போனதை தேடி மீட்க மானிட மகன் வந்தது போல நாமும் தொலைந்து போன நம் உறவுகளை தேடிச் செல்வோம். அவர்கள் இழந்த வாழ்வை அவர்களுக்கு திரும்ப பெற்றுக் கொடுப்போம். சரியான பாதையை சுட்டிக் காட்டுவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...