பொதுக் காலம் 33ஆம் வாரம்
20.11.2024 - புதன் கிழமை
"நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை; சிந்தனை செய்வதுமில்லை; அறிவு பெறுவதுமில்லை; அங்கே ஞானமுமில்லை" - சபை உரையாளர் 9:10
கைகள் இரண்டு காரியங்களுக்காக நீளும், ஒன்று கொடுப்பதற்காக மற்றொன்று எடுப்பதற்காக. தனக்குரியதை பகிர்ந்து கொடுப்போரும் உண்டு. தனக்கு சம்பந்தமில்லாத ஒன்றை மற்றவரிடமிருந்து எடுப்போரும் உண்டு.
கொடுத்து சிவந்த கைகளும், இருப்பதை கொடுத்து கொடுத்து இழந்து வாடிய உள்ளங்களும் நமக்கு முன் உதாரணங்களாய் இருக்க தான் செய்கிறார்கள்.
எடுக்க எடுக்க கேணி ஊரும் என்பார்கள். அதே போல கொடுக்க கொடுக்க பெற்றுக் கொண்டோரும் உண்டு. (நடைமுறை வாழ்க்கையில் இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை)
கொடுக்கின்ற உள்ளம் தனக்குரியதை ஒருநாள் பெற்றுக் கொள்ளும். இதுவும் உண்மை. அது நேரமாக, உழைப்பாக, அன்பாக, பணமாக, பொருளாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 19:11-28) உயர் குடிமகன் ஒருவர் பத்து பேரை அழைத்து 10 மினாக்களை கொடுத்து வாணிபம் செய்ய சொல்கிறார்.
(பழைய ஏற்பாட்டு புரிதலில் மினா என்பது 60 அல்லது 50 செக்கெல் வெள்ளியைக் குறிக்கும்.
புதிய ஏற்பாட்டு புரிதலில் மினா என்பது 100 தெனாரியத்தைக் (திராக்மாவை) குறிக்கும். 1 தெனாரியம் (திராக்மா) என்பது ஒரு நாள் கூலி, அப்படியென்றால் 1 மினா என்பது 100 நாள் வேலை செய்தால் கிடைக்கும் கூலி.)
ஆட்சியுரிமை பெற்று வர தொலைத் தூர பயணம் மேற்கொள்கிறார். திரும்பி வந்ததும் தம்மிடம் பணம் வாங்கியிருந்த ஒவ்வொருவரையும் அழைக்கிறார்.
முதலாவது நபர் ஒரு மினாவை கொண்டு 10 மினாவை ஈட்டியுள்ளார். இரண்டாவது நபர் ஒரு மினாவை கொண்டு 5 மினாவை ஈட்டியுள்ளார். வேறொருவரோ கொடுக்கப்பட்ட மினாவை கைக் குட்டையில் முடிந்து வைத்து விடுகிறார். கொடுத்ததை திருப்பிக் கொடுத்து விடுகிறார்.
இந்த மினா என்பது நமக்கு கொடுக்கப்பட்ட ஆற்றல், திறமை, வாய்ப்பு ஆகியவற்றை குறிக்கிறது.
கடவுள் வர காலம் தாழ்த்துவார் என்ற மனநிலையும் கடவுள் எப்படியும் மன்னித்து விடுவார் என்ற மனநிலையும் நம்மை தேக்க நிலையில் வைத்து விடுகிறது.
எல்லாவற்றையும் கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை வாழ்வு பயனளிக்காது.
இன்றைய நற்செய்தி வாசகமானது, "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்கிறது. இருப்பதை பயன்படுத்துகின்ற போது இன்னும் அதிகம் வந்து சேரும்.
நம்மிடம் இருக்கும் ஆற்றலை சரியான விதத்தில் பயன்படுத்துவோம். அது தான் நம் ஆற்றலை இன்னும் அதிகப்படுத்தும்.
எல்லோருக்கும் ஒரே திறமை/ஆற்றல் இருப்பதில்லை. அவரவர் தகுதிக்கேற்ப அது அதிகமாகவும் குறைவாகவும் இருக்கும். இருப்பதையாவது சரியாக பயன்படுத்த வேண்டும். இருப்பதை பயன்படுத்தவில்லை என்றால் இருப்பதும் எடுக்கப்படும்.
தேங்கி நிற்கும் தண்ணீர் நாளடைவில் துர்நாற்றம் வீசும். ஓடும் தண்ணி போல நமக்குள் இருக்கும் ஆற்றல்/திறமை இயங்கிக் கொண்டிருக்கட்டும்.
No comments:
Post a Comment