பொதுக் காலம் 34ஆம் வாரம்
30.11.2024 - சனிக் கிழமை
வரலாறு
புனித அந்திரேயா அல்லது புனித பெலவேந்திரர், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர் ஆவார். அந்திரேயா என்பதற்கு துணிச்சல் மிக்கவர் என்பது பொருள்
கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்த இவர், புனிதர் பேதுருவின் மூத்த சகோதரர் ஆவார். மீன்பிடி தொழில் செய்துவந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்த இவர், பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு, திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவான் 1:29-39).
அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே (யோவான் 6:8). கோவிலின் அழிவை முன்னறிவித்தபோது அழிவு எப்போது வரும்?" என கேட்டவரும் இவரே.
ஆண்டவரின் இறுதி இராவுணவின்போது இவருமிருந்தார். இறுதிகால இயேசுவின் இரண்டாம் வருகையின் அறிகுறி என்னவென்று இயேசுவிடம் கேட்பதற்காக ஒலிவ மலைக்கு வந்த நான்கு சீடர்களுள் இவரும் ஒருவராவார்.
அந்திரேயா "அச்சேயா" (Achaea) எனுமிடத்திலுள்ள "பட்ராஸ்" (Patras) நகரில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். இயேசு கிறிஸ்து அறையப்பட்ட அதேவிதமான சிலுவையில் தாமும் அறையப்பட தாம் தகுதியானவனில்லை என்ற காரணத்தால், அவரே "X" வடிவ சிலுவையில் தம்மை அறையுமாறு வேண்டினார் என்றும் கூறப்படுகிறது. அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார்.
நற்செய்தி அறிவிப்பதில் இறப்பை ஏற்பதில் துணிச்சல் மிக்கவராக புனித அந்திரேயா திகழ்ந்தார்.
No comments:
Post a Comment