15.11.2024 - வெள்ளிக் கிழமை
"நீர், தீ, இரும்பு, உப்பு, கோதுமை மாவு, பால், தேன், திராட்சை இரசம், எண்ணெய், உடை ஆகியவை மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாகும்" - சீராக்கின் ஞானம் 39:26
நெருப்பும் தண்ணீரும் அதிகமானால் அழிவு அதிகம் தான். தண்ணீரும் நெருப்பும் எதிரெதிர் துருவங்கள். ஆனால் இரண்டும் அதிகமானால் துயரம் தான். இவ்வுலகில் பல துயரங்கள் உண்டு.
இருவர் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்க ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவது தான் துயரத்திலும் துயரம்.
மற்றொரு துயரம் என்னவென்றால் நிலையில்லாத உலகில் நிலையற்ற பொருளுக்காக, பெயருக்காக கலவரம் உண்டாகிறது.
இந்த உலகில் தண்ணீருக்காக சண்டை, அணு ஆயுதங்களை கொண்டு சண்டை, வாழ்வாதாரத்திற்காக சண்டை, தன்னிலையை உறுதிப்படுத்த சண்டை என்று சண்டையின் பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது.
எவ்வளவு தான் சண்டை போட்டு ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் கடைசியில் எல்லோருக்கும் இவ்வுலகில் அழிவு உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 17: 26-37) நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு எல்லோரையும் அழித்தது, லோத்து சோதோமை விட்டு வெளியேறிய பின்னர் நெருப்பும் கந்தகமும் நகரை அழித்தது என்று வாசிக்கிறோம்.
எதனால் இந்த அழிவுகள்? தவறான வாழ்க்கை, அடுத்தவரை அழிக்கும் நோக்கம் ஆகியவை தான் அழிவை பெற்றுக் கொடுத்தது.
இதே அழிவு மானிட மகன் வெளிப்படும் நாளிலும் உண்டாகும் என்று எச்சரிக்கிறது இன்றைய நற்செய்தி.
யாரெல்லாம் இவ்வுலக வாழ்வுக்காக தங்கள் அற்ப வாழ்வை கையளிக்கிறார்களோ அவர்கள் வாழ்வு இவ்வுலகிலே முடிந்து விடும். மாறாக யாரெல்லாம் விண்ணக கைம்மாறை பெற இவ்வுலக வாழ்வை தியாகம் செய்கிறார்களோ அவர்கள் வாழ்வு மேலும் நீடிக்கும்.
இவ்வுலக வாழ்வை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் ஆனந்தத்தை பெற்றுக் கொள்கிறார்கள். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த ஆனந்தத்தை பெற மற்றொருவர் தன் மகிழ்ச்சியை பறி கொடுக்க வேண்டி இருக்கிறது.
அடுத்தவர் வாழ்வை அழித்து அதன் வழியாக மகிழ்ச்சி காண்பது கிறித்தவ வாழ்வு ஆகாது. மாறாக நன்மைக்காக தீமையை இழப்பதும் ஒளியை ஏற்ற இருளை விரட்டுவதும் தான் கிறித்தவ வாழ்வு காட்டும் விழுமியம்.
கிறிஸ்துவின் இரத்தமும் தண்ணீரும் மற்றும் கிறிஸ்துவில் நாம் பெற்றுக் கொண்ட நெருப்பு வடிவிலான திருமுழுக்கும் நமக்கு நிலைவாழ்வை பெற்றுக் கொடுக்கும்.
பழைய ஏற்பாட்டு தண்ணீர் அழிவை கொணர்ந்தது, புதிய ஏற்பாட்டு தண்ணீர்/இரத்தம் நம்மை புதிய வாழ்வுக்கு அழைத்தது.
பழைய ஏற்பாட்டு நெருப்பு நகரையே அழித்தது, புதிய ஏற்பாட்டு நெருப்பு புதிய பணி செய்ய உத்வேகம் கொடுத்தது.
இயேசுவின் சீடர்கள் நல்லவற்றிற்காக தேவையில்லாத ஒன்றை இழப்பது தவறல்ல...
No comments:
Post a Comment