24_11

பிறர் அன்பில் இறையன்பு வெளிப்படட்டும்...


பொதுக் காலம் 31ஆம் வாரம்

03.11.2024 - ஞாயிற்றுக் கிழமை 

"அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக" - எபிரேயர் 10:24

அன்பு செலுத்துவது எளிதானதா? கடினமானதா? என்ற கேள்வியை கேட்டால் இரண்டு பதிலும் நமக்கு விடையாக வரும். அன்பு அது கொடுக்கப்படும் அல்லது உள்வாங்கப்படும் இடத்தை பொறுத்து அது எளிதானதாக அல்லது கடினமானதாக இருக்கும்.

கட்டாயப்படுத்தி திணிக்கப்படும் எல்லாமே கடைசியில் ஏமாற்றத்தை தரும். அது சட்டமாக இருந்தாலும் சரி அன்பாக இருந்தாலும் சரி.

இந்த உலகில் அதிகம் நம்பப்படுவது போலியான உறவுகளே! போலிகள் தான் நிஜங்களாக நடமாடுக்கின்றன. நல்லவர்களின் அன்பு உதாசினப்படுத்தப்படுவதும் பொல்லாரின் போலித்தனம் மதிக்கப்படுவதும் அவலம் தான்.

உலகம் ஒரு வட்டம், எங்கு தொடங்கப்பட்டதோ அங்கே திரும்ப நாம் வர வேண்டி இருக்கும். யாருடைய உண்மையான அன்பை, தொடக்கத்தில் நாம் தூக்கி எறிந்தோமா அதே அன்பை கடைசியில் பிச்சைக் கேட்டுக் கொண்டிருப்போம். 

நான் அன்பு செய்பவர்கள் என்னை திரும்ப அன்பு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெறுப்பு, நிராகரிப்பு, அவமரியாதை, அவதூறு இவையெல்லாம் உண்மையான அன்பை விதைப்போருக்கு கொடுக்கப்படும் வெகுமதி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:28-34) இயேசு இரண்டு அன்பு கட்டளையை போதிக்கிறார். 

1. படைத்தவரை அன்பு செய்

2. படைக்கப்பட்டவர்களை அன்பு செய்

கடவுளை அன்பு செய்வது எளிது என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் பிறர் அன்பு இல்லாமல் இறையன்பு சாத்தியமில்லை. 

யோவான் எழுதிய முதல் திருமுகம் 4:20 இவ்வாறு சொல்கிறது, "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது."

சில வேளைகளில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டுள்ளார்கள். ஆனால் கடவுளின் கட்டளை 'அடுத்தவரை அன்பு செய்ய' சொன்னபோதிலும் கூட நாம் செவிமடுக்க/செயல்படுத்த மறுக்கிறோம்.

அல்லேலூயா என்று உச்சரிக்கும் உதடுகள் அடுத்தவரை கண்டுக் கொள்ளவில்லை என்றால் ஆண்டவர் போற்றப்படமாட்டார்... (அல்லேலூயா என்ற எபிரேயச் சொல்லுக்கு "ஆண்டவரைப் போற்றுங்கள்" என்பது பொருள்)

(மத்தேயு நற்செய்தி 7:21, என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.) ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வை இழந்தோர் பார்வை பெற உதவுவது தான் இயேசு காட்டிய தந்தையின் திருவுளம்.

முதல் வாசகத்திலும் (இணைச் சட்டம் 6:2-6) ஆண்டவருக்கு அஞ்சி அவர் நமக்கு கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். முழு இதயத்தோடும் உள்ளத்தோடும் ஆற்றலோடும் அன்டவரிடம் அன்புக் கூற முதல் வாசகம் அழைக்கிறது.

அன்பில் கள்ளத்தனத்திற்கு இடம் இருக்க கூடாது. அன்பின் பெயரில் யாரையும் ஏமாற்ற கூடாது. அழிந்து போகும் செல்வத்திற்காக யாரையும் காட்டிக் கொடுக்க கூடாது. 

இயலுமானால் இறுதிவரை உண்மையான அன்பில் நிலைத்திருக்க வேண்டும். இல்லையெனில் விலகிக் கொள்ள வேண்டும். (அன்பு செய்வதாக பாசாங்கு செய்ய கூடாது).

எப்படியெல்லாம் பிறரை அன்பு செய்யலாம்?

- துன்ப வேளையில் உடனிருப்பதன் வாயிலாக

- தோல்விகளில் தட்டிக் கொடுப்பதன் வழியாக

- ஆறுதல் சொல்வதன் வழியாக 

- தொடுதல் வழியாக

- மகிழ்ச்சிப்படுத்துவதன் வழியாக

- நான் இருக்கிறேன் என்று சொல்வதன் வழியாக...

விதைக்கபடுவது அன்பு என்னும் விதையானால் விளைவதும் அன்பாக தான் இருக்கும்.

இறையன்பை அடைய பிறர் அன்பே ஆயுதம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...