பொதுக் காலம் 31ஆம் வாரம்
04.11.2024 - திங்கட் கிழமை
"இறைப்பற்றுள்ளோருக்கு நன்மை செய்; உனக்குக் கைம்மாறு கிடைக்கும். அவர்களால் இயலாவிடினும் உன்னத இறைவன் கைம்மாறு செய்வார்” - சீராக் 12:2
எனக்குரியது நிச்சயம் என்னிடம் வரும். அது நான் செய்த நன்மைக்கான கைம்மாறாக இருக்கலாம் அல்லது நான் செய்த தீமைக்கான தண்டனையாக இருக்கலாம்.
(“நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்” - சபை உரையாளர் 12:14)
எந்த நன்மையை யாருக்கும் செய்யாமல் ஆதாயம் தேடுவோரும் உண்டு, மற்றவர்கள் செய்யக்கூடிய நன்மையில் குறுக்கிட்டு, சுரண்டல் செய்து அதன் வாயிலாக பலன்பெறுவோரும் உண்டு.
இவையெல்லாம் சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே. (நிலையற்ற உலகில் நிலையில்லா மனித அன்புக்காக, பொருளுக்காக ஏங்குகிறது மனித உள்ளம்)
இந்த உலகம் யாருக்கும் நிரந்தரம் அல்ல, நாம் இந்த உலகத்தில் தற்காலிகமாக குடியிருக்கிறோம். நாம் வாழக்கூடிய வாழ்க்கை தான் நமக்கான கைம்மாறை பெற்றுக் கொடுக்கும். நாம் செய்யக் கூடிய நன்மைகளுக்கான பலனை இவ்வுலகிலே எதிர்பார்த்தால் நாம் மறுஉலக வாழ்வில் கைம்மாறை பெற முடியாது.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு. திருக்குறள் - 211
மழை பொழியும் மேகம் எந்த கைம்மாறையும் எதிர்பார்ப்பதில்லை; மழை போன்று உதவுவோர் கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை.
கடமையை செய்து பலனை எதிர்பாராத வாழ்க்கையாக நம் வாழ்க்கை மாற வேண்டும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5: 12-14) தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் நீர் விருந்து அளிக்கும் போது உம் உறவினரை அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும். திரும்ப விருந்துக்கு அழைக்க இயலாதவரை விருந்துக்கு அழையும் என்கிறார் இயேசு.
தெரிந்தவர்களுக்கும் அன்புக்குரியோருக்குமே நாம் உதவிகள் அல்லது நன்மைகள் செய்கிறோம் என்றால் நமக்கான கைம்மாறு இந்த உலகிலே கிடைத்துவிடும். (“விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” - மத்தேயு 6:20) நமக்கு திரும்ப உதவி செய்ய இயலாதவருக்கே நாம் உதவ முன்வர வேண்டும்.
திரும்ப கிடைக்கும் என்று எதிர்பாராமல் உதவினால், விண்ணகத்தில் நாம் நிறைவான கைம்மாறை பெறுவோம். எதிர்பாராமல் செய்யும் உதவிகள் ஒருபோதும் ஏமாற்றத்தை தராது. எதிர்பார்ப்போடு செய்யப்படும் உதவிகள் ஏமாற்றத்தை தரும்.
திரும்ப செய்ய இயலாதவருக்கே திரும்ப திரும்ப உதவி செய்வோம்.
No comments:
Post a Comment