பொதுக் காலம் 34ஆம் வாரம்
25.11.2024 - திங்கட் கிழமை
நான் உங்களோடு இருந்தபோது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை. எனினும் நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள். நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை; இனி இருக்கவும் மாட்டேன்" - 2 கொரிந்தியர் 11:9
இந்த உலகில் பற்றாக்குறையில் இருப்பவர்கள் அதிகம் தான். ஆனால் பற்றாக்குறையில் இருப்பவர்கள் பற்றாக்குறையில் நீடித்து இருப்பதற்கு முக்கிய காரணம், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளாதது தான். (பற்றாக்குறைக்கு அதிக காரணம் பகிராக் குறை தான் காரணம்).
ஒருபுறம் உணவு வீணடிக்கப்படுகின்றன, தேவையற்ற வழிகளில் உணர்வுகள் (காதல், கூடா நட்பு) சிதறடிக்கப்படுகின்றன. மறுபுறம் உணவு தேவைப்படுவோரும் அன்பு இல்லாமல் அனாதையாக வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒருபுறம் பணம் மலிந்து கிடக்கிறது, மறுபுறம் வறுமை தலைவிரித்தாடுகிறது. பண வீக்கம் கல் மனதை உருவாக்குகிறது. ஏழ்மை இளகிய மனதை உருவாக்குகிறது.
செல்வம் அதிகம் கொண்டோர் அதிக செலவு செய்வர். அந்த செலவில் அவர்களுக்கான இலாபம் கிடைத்து விடும். ஏழைகள் தன்னிடம் இருப்பது குறைவாக இருந்தாலும் தன்னைவிட வறுமையில் வாடுவோருக்கு உதவ மறுக்க மாட்டார்கள். வலியை பெற்றவருக்கு தான் அந்த வலியின் வேதனை தெரியும்.
அதிகம் கொண்டவர்கள் இங்கு இழப்பதில்லை... இழந்தவர்கள் தான் இங்கு அதிகம் இழக்கிறார்கள்/கொடுக்கிறார்கள்.
உதாரணமாக, பெற்றோர் பிள்ளைகளுக்காக இழப்பது தியாகமாக இருக்கிறது. அந்த இழத்தல் என்னும் தியாகம் இறுதிவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்கிறது. தங்களையே பெற்றோர் பகிர்ந்து கொடுத்து விடுகிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 21:1-4) எல்லாரையும் விட குறைவாக கானிக்கைப் போட்டவர், மிகுதியாக காணிக்கை போட்டதாக இயேசுவால் பாராட்டப்படுகிறார்.
இருப்பதை கொடுப்பதும் இருப்பதை பிறருக்காக இழப்பதும் சிலருக்கு மகிழ்வை கொடுக்கும்.
இந்த ஏழைக் கைம்பெண் இருப்பதை இழக்க துணிந்தார். தன்னிடம் இருப்பதை பகிர்ந்துக் கொடுத்து விட்டார். கொடுத்ததோ சிறிய தொகை, ஆனால் பாராட்டுதற்குரிய செயல்.
‘மற்றவர்களை வரவேற்பதிலும் மற்றவர்களுக்கு உணவு அளிப்பதிலும் மற்றவர்களை ஆதரிப்பதிலும் நாம் தாராளமாக இருந்தோம் என்றால், ஒருபோதும் நாம் ஏழையாவதில்லை, மாறாக நமது வாழ்வு வளம்பெறும்’ என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்
பதுக்கல்கள் மறைய வேண்டும், பகிர்வுகள் பெறுக வேண்டும். அப்போது தான் நாம் இயேசுவோடு இணைந்து இறையாட்சியை கட்டியெழுப்ப கைக்கோர்க்க முடியும்.
No comments:
Post a Comment