21.11.2024 – வியாழக் கிழமை
“தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்: இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை” என்றார். – விடுதலைப் பயணம் 13:2
யாருக்கு நம்மைக் கொடுக்கிறோம்? எதற்கு நம்மை கொடுக்க வேண்டும்?
நமக்கு பிடித்தவர்களுக்கு நமது நேரத்தை கொடுப்போம், நமது அன்பை கொடுப்போம். நம் உணர்வுகளை புரிந்துக் கொண்டவர்களுக்கு நம்மிடம் உள்ளதையெல்லாம் கொடுப்போம். நம்மிடம் இருப்பவையெல்லாம் நமக்கானவர்களுக்கானது தான்.
தன்னை தருதல் என்பது இன்று சாதாரணமாகிவிட்டது. போலியான அன்புக்கும் பொழுதுபோக்கிற்கும் நம்மை தந்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஏமாறிக் கொண்டு இருக்கிறோம் என்பது அறியாமலேயே நம்மை இழந்துக் கொண்டு இருக்கிறோம்.
சிறிய வயதில் நாம் விளையாடுகின்ற போது இது உனக்கு! இது எனக்கு! என்று நம்மிடம் இருப்பதை கொடுத்தும் அடுத்தவரிடமிருந்ததை பெற்றுக் கொண்டும் இருந்தோம். இந்த கொடுத்தல் வாங்குதல் இன்றும் தொடர்கிறது. ஆனால் அதன் அர்த்தம் தான் மாறிவிட்டது. இன்று கொடுப்பது போல பல காரியங்கள் பிடுங்கப்படுகின்றன.
(எகா. எதையெடுத்தாலும் இலவசம்! இலவசம்! ஆனால் வீண் செலவு நமக்கு தான். இன்றைய திருமணக் காரியங்களில் மாப்பிள்ளையை கொடுத்து பெண்ணையும் நகையையும் பிடுங்கிக் கொள்கிறார்கள்.)
கொடுத்தலின் அர்த்தம் இன்று சீர்குலைந்து இருக்கிறது.
இன்றைக்கு அன்னை மரியா காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாளை நினைவுக் கூறுகிறோம். இஸ்ரயேலில் பிறந்த ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம், அதை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதைப் போன்று, பெண்தலைப்பேறு ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற எந்தவொரு விதிமுறையும் இல்லை. ஆனாலும் மரியாவின் பெற்றோரான சுவக்கினும் அன்னாவும் அவரை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்றனர்.
கடவுளுக்கு காணிக்கையாதல் என்பது ஒருவர் தன்னை முழுவதும் கடவுளுக்கு கையளிப்பதை குறிக்கிறது. அன்னை மரியா குழந்தையாக இருந்தபோது அவரின் பெற்றோர் அவரை கடவுளுக்கு காணிக்கையாக்கினர். கடவுளின் தூதர் தனக்கு காட்சியளித்தபோது “நான் ஆண்டவரின் அடிமை” என்று சொல்லி, அன்னை மரியா தன்னை கடவுளுக்கு காணிக்கையாக்கினார்.
அன்னை மரியாவின் பெற்றோர் தங்களிடமிருப்பதை/தங்களது மகளை கடவுளுக்கு கொடுத்தார்கள், அன்னை மரியா தன்னை கடவுளுக்கு கொடுத்தார்.
(543 ஆம் ஆண்டு ஜஸ்டினியன் என்ற மன்னன் மரியாவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததை நினைவு கூரும் வகையில், எருசலேமில் அன்னை மரியாவுக்கென்று ஒரு கோயிலைக் கட்டி எழுப்பினான். இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து மரியா கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது ஒரு விழாவாக கொண்டாடப்பட்டது.
1585ஆம் ஆண்டு திருத்தந்தை 5ஆம் சிக்ஸ்துஸ் என்பவரால் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது.)
நல்லவற்றை செய்யும் போது நாம் கடவுள் விரும்புவதை செய்பவர் ஆகிறோம். அதன் வழியாக நம்மை படைத்தவருக்கு நம்மை முழுமையாக தருவோம். ஏமாற்று தந்திரங்களுக்கு நம்மை கையளிக்காமல், ஏமாற்றுவேரிடமிருந்து தள்ளியிருப்போம்.
அவரிடமிருந்து வந்தது அவரிடம் தான் திரும்பும். அதற்கு முன்னதாகவே அவருக்குரியதை எந்தவொரு சிதைவுமின்றி அவரிடம் கொடுப்போம்
No comments:
Post a Comment