பொதுக் காலம் 34ஆம் வாரம்
26.11.2024 - செவ்வாய்க் கிழமை
"இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்; “நம் வாழ்வு குறுகியது; துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை" - சாலமோனின் ஞானம் 2:1
அழகானதாக காட்சிளியக்கும் அனைத்தும் அழகானதல்ல, அசிங்கமாக தோன்றும் அனைத்தும் அசிங்கமானதும் அல்ல.
உண்மை, நேர்மை சிலருக்கு அருவருப்பாக தோன்றும். ஏமாற்றுதல், கொள்ளையிடுதல், கொலை செய்தல் இவையெல்லாம் சிலருக்கு அழகானதாக தோன்றும்.
நாம் பார்க்கும் கோணத்தை பொறுத்தது தான் அழகு நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவருக்கு அழகானதாக தோன்றுவது மற்றொருவருக்கு அருவருப்பாக தோன்றலாம்.
அழகு என்பது நாம் வாழும் வாழ்க்கை முறையில் உள்ளது. நேர்த்தியான/உண்மையான வாழ்க்கை முறை சிலருக்கு அருவருப்பாக தோன்றலாம், ஆனால் அது தான் நம்மை தலை நிமிர்த்தும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 21:5-11) கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருக்க, இயேசுவோ, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்று சொல்கிறார்.
சில உலக நிகழ்வுகள்/ மனிதர்களின் செயல்கள் நம்மை ஏமாற்றுகிறது. உண்மையில்லாதை உண்மையென உலகம் படம்பிடித்துக் காட்டுகிறது.
தவறான ஒன்றை சரியென்று ஒருவர் அதட்டி சொல்லும் போது அது எல்லோராலும் சரி என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
குழப்பம், தெளிவற்ற நிலை, தயக்கம், நம்பிக்கையின்மை இவற்றிற்கு இடையில் தான் நமது வாழ்க்கை பயணம் இயங்குகிறது.
யார் எதை சொன்னாலும் அது சரியானதா என்று ஆராயாமல் ஏற்றுக் கொள்ள கூடாது. ஏனெனில் யாரும் நம் நிலையில் இருந்து நமக்காக யோசிக்க மாட்டார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடவுளின் வருகைக்கு முன் நடக்க இருப்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் லூக்கா நற்செய்தியாளர். பல தடைகளை நாம் கடக்க வேண்டியிருக்கும், பல இடர்பாடுகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
எது நடந்தாலும் நாம் நேரிய வாழ்வு வாழ்ந்தால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இந்த உலக அழகு என்று எதை சொல்கிறதோ அது உண்மையில் அழகானதா, நம் வாழ்வுக்கு ஏற்றதா என்பதை ஆய்ந்து அறிந்து இறைத் திருவுளத்தை ஏற்று நடப்போம்.
ஆச்சரியமூட்டும் வாழ்வுக்காக நம்மை ஆயத்தப்படுத்துவோம். கடவுளின் கையில் அழகிய மணிமுடியாக திகழ்வோம்...
No comments:
Post a Comment