24_11

துன்புறும் அரசர் இயேசு...


கிறிஸ்து அரசர் பெருவிழா

24.11.2024 - ஞாயிற்றுக் கிழமை 

"கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்" திருப்பாடல்கள் 74:12

கடவுளை தவிர வேறு அரசர் இல்லை. 

பழைய ஏற்பாட்டில் எப்போது இந்த அரசர் முறை வந்தது? எதனால் வந்தது என்பதை சாமுவேல் முதல் நூல் அதிகாரம் 8 தெளிவாக எடுத்துச் சொல்கிறது. இஸ்ரயேல் பெரியவர்கள் சாமுவேலை அணுகி, "அனைத்து வேற்றினங்களில் இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்" என்று கேட்டுக் கொண்டனர்.

இதன் வழியாக தான் அரசர் முறை இஸ்ரயேல் இனத்தின் உள்ளே வர ஆரம்பித்தது. தங்களை வழிநடத்தி வந்த கடவுள் தங்களை ஆளாதபடி அவர்கள் அவரை புறக்கணித்து விட்டனர்.

சவுல் அரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதன் பின்னர் தாவீது அரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்ட இந்த அரசர்கள் பாதை மாறினார்கள். தங்களை தேர்ந்தெடுத்த கடவுளை மறந்தார்கள்.

தலைவனும் சரியில்லை மக்களும் சரியில்லை என்ற நிலையில் தான் இஸ்ரயேல் மக்கள் நாடு கடத்தப்படுவதையும், அடிமைத்தனத்தில் இருந்து கடவுளை நோக்கி மன்றாடுவதையும் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம். 

இப்படிப்பட்ட மக்களை மீட்க மானிட மகன் வருவார் என்று முன்னறிவிக்கப்படுகிறது. (எசாயா 7:14 - "இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்").

அரசர் என்றாலே ஆடம்பரம், கம்பீரம், ஆள் பலம், அதிகாரம், பகட்டான வாழ்க்கை, அடிமைகள், பணியாளர்கள், செல்வாக்கு, செல்வம்,புகழ் என்று பலவற்றை சொல்லி போகலாம்.

ஒரு நாட்டு அரசனுக்கும் வேறொரு நாட்டு அரசனுக்கும் போர் நடந்தாலும் இழப்பு என்பதோ குடிமக்களுக்கு தான். 

நாட்டின் செல்வமும் அரசின் எல்கையும் விரிவடைந்தாலும் முன்னேற்றம் என்பது அரசருக்கும் அரசரை சார்ந்தோருக்கும் தான்.

இது தான் அரசாட்சியின் நிலவரம்.

ஆனால் இந்த அரசோடு இயேசுவின் அரசை ஒப்பிட முடியாது. இயேசுவின் அரசு இந்த அரசு முறைகளில் இருந்து மாறுபட்டது.

எசாயா 9:6இல் உள்ள வார்த்தைகள் இயேசுவுக்கு பொருந்தி செல்கிறது, "ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும்."

இயேசு துன்புறும் அரசர், ஊழியர். 

இவர் ஆடம்பரத்தை விரும்பாதவர் - எளிய மாட்டுக் கொட்டகையில் பிறந்தவர்.

இவர் அடக்கி ஆளும் அதிகாரத்தை கொண்டிராதவர் - அன்பின் அதிகாரத்தை கொண்டவர்.

பணிவிடை பெற வந்தவர் அல்ல - பணிவிடை புரிய வந்தவர்.

சிலுவைகளை மற்றவர் மேல் சுமத்த வந்தவர் அல்ல - மற்றவர்களின் சுமைகளை தன் தோளில் போட்டுக் கொண்டவர்.

இப்படிப்பட்ட அரசர் தான் மற்றவரின் உண்மை காவலர்.

மற்றவர்கள் முன்னிலையில் பாராட்டு பெறுதல் என்பது அதிகாரத்தினாலோ ஆணவத்தினாலோ வர கூடாது. மாறாக உண்மையான தொண்டு செய்யும் போது அது கொடுக்கப்பட வேண்டும்.

இயேசு என்னும் துன்புறும் அரசரை பற்றிக் கொள்வோம். நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்/ நம்மை பகிர்ந்துக் கொடுக்கும்  இளவரசராக/இளவரசியாக மாற முயற்சி செய்வோம், நம்மை கையளிப்போம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...