24_11

உள்ளத்தில் கோயில் கட்டுவோம்...


இலாத்தரன் பெருங்கோயில் நேர்ந்தளிப்பு

பொதுக் காலம் 31ஆம் வாரம்

09.11.2024 - சனிக் கிழமை 

"தொடக்கத்திலிருந்தே நீர் ஏற்பாடு செய்திருந்த தூய கூடாரத்ததை மாதிரியாகக் கொண்டு உம் தூய மலைமேல் கோவில் கட்டவும், உமது உறைவிடமான நகரில் பலிபீடம் எழுப்பவும் நீர் எனக்கு ஆணையிட்டீர்" - சாலமோனின் ஞானம் 9:8

'கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று சொல்வார்கள். 

இறைவாக்கினர் ஆகாய் நூலின் தொடக்கத்தில் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆண்டவர் கட்டளையிடுவதை நாம் காண்கிறோம். ("இந்த கோவில் பாழடைந்துக் கிடக்கும் இந்நேரத்தில் நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?" ஆகாய் 2:4)

இறைவன் எல்லா இடத்திலும் உறைபவர், எங்கும் நிறைந்திருப்பவர். ஆனாலும் கூட கடவுளின் பிரசன்னத்தை முழுமையாக வெளிக்காட்டும் இடமாக கோயில் இருக்கிறது.

கடவுளின் பிரசன்னத்தை வெளிக்காட்டுவதால் கோயிலுக்குள் நுழையும் போது தனிப்பட்ட அமைதியை/மனநிறைவை பெற முடிகிறது. 

எந்த அளவுக்கு இதை திருப்பாடல்கள் நூலின் ஆசிரியர் உணர்ந்திருந்தால் திருப்பாடல்கள் 84:10 இல் இவ்வாறு சொல்லியிருப்பார், "வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது."

ஆனால் சிலர் கோயிலுக்கு வருகின்ற போது கவலை, கண்ணீர், பிரச்சினை என்னும் மூட்டையை சுமந்து வருகிறார்கள். கோயில் வாயிலில் அவற்றை இறக்கி வைத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்து அமைதியை பெறுகிறார்கள். அதன் பின்னர் தாங்கள் இறக்கி வைத்த மூட்டையை திரும்ப வீட்டிற்கே எடுத்துச் செல்கிறார்கள். 

இறைவன் தரும் அமைதி இல்லத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் அவரின் இல்லத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு செல்ல வேண்டும்.

இறைவன் கற்களால் கட்டப்பட்ட கோயிலில் மட்டுமல்ல சதையால் சூழப்பட்ட நம் உள்ளத்திலும் குடிக் கொண்டு இருக்கிறார். 

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 6:19 இவ்வாறு சொல்கிறது, "உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல."

இன்று இலாத்தரன் பெருங்கோயில் விழா 

மறைமாவட்டத்தின் உள்ள அனைத்து முதன்மைக் கோயிலுக்கெல்லாம் முதன்மையான கோயிலாக இருப்பது தான் இக்கோவில்.

தொடக்கக் கால திருஅவையில் கிறித்தவர்கள் இல்லங்களில் தான் கூடி செபித்தார்கள். கிறித்தவர்களுக்கு எதிராக அடிக்கடி சமயத்தின் பெயரால் துன்புறுத்தல் நடைபெற்றது. அதனால் கிறித்தவர்கள் தங்களுக்கென்று கோயில் கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது.

4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உரோமை அரசன் கான்ஸ்டான்டிநோப்பிள் தனது அரண்மனையை திருஅவைக்கு வழங்கினான். கிறித்தவ மதத்தை உரோமையின் அரச மதமாக அறிவித்தான். 

313ஆம் ஆண்டு கோயிலாக மாற்றி வழங்கப்பட்ட அரண்மனையானது 324ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தையாக இருந்த முதலாம் சில்வெஸ்டர் அவர்கள், கோயிலை நேர்ந்தளித்து உலக மீட்பரின் பாதுகாவலில் ஒப்படைத்தார். சிறிது காலத்திற்கு பிறகு புனித திருமுழுக்கு யோவானின் பாதுகாவலிலும் அதன் பின்னர் நற்செய்தியாளர் யோவானின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குத் திருத்தந்தை அங்கு தான் இருந்தார். அதன் பின்னர் இறுதியாக வத்திக்கானுக்கு மாற்றப்பட்டது திருத்தந்தையின் வசிப்பிடம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...