10.11.2024 - ஞாயிற்றுக் கிழமை
ஒவ்வொரு மனிதருடைய நம்பிக்கையும் மாறுபட்டது அல்லது ஒவ்வொருவரும் மற்றவரை நம்பும் விதம் மாறுபட்டது என்று சொல்லலாம். இடத்திற்கு ஏற்றார் போல, ஆளுக்கு ஏற்றார் போல, சூழலுக்கு ஏற்றவாறு நம்பிக்கை மாறுபடுகிறதே அன்றி அது ஒருபோதும் குறைவுபடுவதில்லை.
நம்பிக்கை நிறைந்த மனிதரின் வாழ்வு மற்றொரு மனிதருக்கு நம்பிக்கை கொடுக்கிறது. உதாரணமாக, கால்களை இழந்த மனிதர் கால்களை இழந்த போதிலும் சுய தொழில் செய்து குடும்பத்தை நடத்துவது கால்கள் உடையோருக்கு நம்பிக்கை கொடுப்பதிலையா? வாய் பேச முடியாத/கண் பார்வை இல்லாத மனிதர்கள் பல துறைகளில் சாதனை படைப்பது நமக்கு நம்பிக்கை ஊட்டவில்லையா?
எதையும் நாம் உருவாக்கவில்லை. உறவானாலும் சரி பொருளானாலும் சரி எல்லாம் கொடுக்கப்பட்டதே தான்.
யோபுவின் நம்பிக்கை நம் வாழ்வுக்கு உரம் சேர்ப்பது என்று சொல்லலாம். எல்லாம் இருக்கும் போது நம்பினால் அது நம்பிக்கை அல்ல. இழந்த போதும் கொண்டிருப்பதே நம்பிக்கை.
"ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக" - யோபு 1:21 என்பது தான் நம்பிக்கையின் உச்சக் கட்டம்.
கணவன் சரியில்லை, குழந்தைகள் சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பதால் எல்லாம் சரியாகி விடாது. (நம்மால் யாரையும் திருத்தவோ/ மாற்றவோ முடியாது. அவர்கள் மாறுவதற்கு உதவி செய்ய முடியும்). நாம் அடுத்த நிலைக்கு கடந்து வர வேண்டும். நம்மை விட கீழ் நிலையில் இருப்பவர்கள் வாழ்வு நமக்கு உணர்த்தும் பாடத்தை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கைம்பெண்களின் வாழ்வை விட நம் வாழ்வு ஒன்றும் குறைவுபட்டு போகவில்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் முதல் வாசகத்திலும் கைவிடப்பட்ட கைம்பெண்கள் இருப்பதை இழக்க முன்வந்தனர் என்பதை வாசிக்கிறோம்.
முதல் வாசகத்தில் (1அரசர்கள் 17:10-16), எலியா இறைவாக்கினரின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து, அப்பம் சுட்டுக் கொடுக்கிறார். அவர் கொண்டிருந்த நம்பிக்கையினால் பானையிலுள்ள மாவும் தீரவில்லை; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையவில்லை.
இந்த அம்மாவுக்கு எவ்வளவு தைரியம். இருப்பதை உண்ட பிறகு தானும் தன் மகனும் சாக வேண்டும் என்றவர், துணிந்தார்; துணிந்து மாவை இழந்தார். நம்பிக்கையினால் இழக்க இருந்த வாழ்வையும் மாவையும் பெற்றுக் கொண்டார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:38-44) இரண்டு வகையான மனிதர்களை சுட்டிக் காட்டுகிறார் இயேசு.
1. பெருமை ஏற்கும் மனிதர்கள்
2. இருப்பதை இழக்கும் மனிதர்கள்.
- மறைநூல் அறிஞர்களை போல பெருமை பாராட்டுதலை விரும்பும் அற்ப மனிதர்கள் கூட்டத்தில் நாமும் இருக்கிறோம்.
- முதன்மையான இருக்கை/ இடம் இவை தான் தலைமைத்துவத்தை இன்று முன்னிருத்துகிறது. சேவை செய்வோம் என்று சொல்பவரெல்லாம் ஒருபோதும் சேவை செய்வதில்லை.
- சேவை செய்ய எந்தவொரு முதன்மை நாற்காலியும் தேவையில்லை. தொடக்கத்தில் கொடுப்பது போல கொடுத்து பின்னர் எல்லாம் பிடுங்கப்படும்.
- பெருமை தேடும் மனிதர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் படம் பிடித்துக் காட்டப்படும் ஏழைக் கைம்பெண்ணோ இழக்க துணிந்தார் இருப்பதையும்.
அவரிடம் இருந்ததோ ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகள்.
(ஒரு கொதிராந்ந்து என்பது ஒரு தெனாரியத்தை 64 பங்காக வைத்தால் அதில் ஒரு பகுதி. ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி)
அந்த பெண்ணிடம் இருந்தது ஒரு நாள் கூலி கூட இல்லை. இருந்த இரண்டு காசுகளை அப்படியே போட்டு விட்டார்.
இருக்கும் அனைத்தையும் இழந்ததால் மிகுதியாக போட்டிருக்கிறார் என்று பாராட்டப்பட்டார்.
தன் பிழைப்புக்காக என்ன செய்வார் என்பது நம் கேள்வி?
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து என்ன செய்ய போகிறோம் என்பது அந்த கைம்பெண்ணின் பதில்.
கணவரை இழந்த அந்த கைம்பெண்கள் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.
இன்று தம்மையே கடவுளாக பாவித்துக் கொள்ளும் கயவர்கள் உள்ள கூட்டத்தில் தான் நாம் நீந்திக் கொண்டிருக்கிறோம்.
காசை கடவுளாக பார்க்கும் பழக்கத்தால் இன்று பல கொடுமைகள் அரங்கேறுகிறது.
சுரண்டுபவர்கள் ஒருபக்கம், சிக்கவைப்பவர்கள் மறுபக்கம் இருக்க நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
தப்பிக்க முடியாது என்று எதுவும் இல்லை; துணிந்தால் யாரையும் வீழ்த்தி விடலாம். நம்பிக்கை கொண்டிருக்கும் மனம் எதையும் கடந்து வரும்.
முடியாது என்று சுருண்டு படுத்தால் சிலந்தி கூட சிறைப்பிடிக்கும்.
இருப்பதை இழக்கவும் இல்லாதவரோடு பகிர்ந்து வாழவும் முன் வருவோம்.
எல்லாம் பெற்றிருந்தும் நம்பிக்கை குறைவில் நிலைத்திருக்கும் நாம் எப்போது முழு நம்பிக்கை பெற போகிறோம்?
சிந்தனை தொடரட்டும்... நம்பிக்கை மலரட்டும்...
No comments:
Post a Comment