இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நாள்
02.11.2024 - சனிக் கிழமை
இறந்தோருக்கு பலி ஒப்புக் கொடுக்க வேண்டுமா? இறந்தோருக்காக பலி செலுத்துவதால் என்ன பயன்? இறந்தோர் கடவுளை மாட்சிப் படுத்த முடியுமா? மண்ணில் புதைக்கப்பட்ட உடல் என்னவாகும்? இவ்வுலகை கடந்த வாழ்வு உண்டா? என்று பல கேள்விகள் இவ்வுலகில் கேட்கப்பட்டு கொண்டிருக்கிறது.
இறந்தோர் மீண்டும் உலகிற்கு வருவதில்லை, இறந்தோரால் ஒரு பயனும் இல்லை. இறந்தோர் கடவுளை போற்றுவதில்லை என்ற விவிலிய வசனங்கள் விவிலியத்தில் இருந்தாலும் நம்பிக்கையும் ஆறுதலும் தரும் வார்த்தைகளும் விவிலியத்தில் உள்ளன.
எசாயா 26:19இல் இவ்வாறு காண்கிறோம், "இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர்."
சாலமோனின் ஞானம் 3:1,2 இவ்வாறு சொல்கிறது, "நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது."
இறப்பிற்கு பிறகும் வாழ்வு உண்டு. அங்கு நாம் செய்த செயயல்களுக்கான கைம்மாறும் உண்டு.
மண்ணில் புதைக்கப்படும் உடல் நிச்சயம் அழிந்து போகும். இது மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் மாற்றுரு பெறுவோம் என்பதை திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:52,53 இவ்வாறு சொல்கிறது, "இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாகமாட்டோம்; ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம். ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்றுரு பெறுவோம்.
கிறிஸ்து நம் பாவங்களுக்கு கழுவாயாக தன்னை கொடுத்ததனால் இறந்தோரும் வாழ்வோரும் உயிர்த்தெழுகின்றனர் (ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல ஒரு மனிதர் வழியாய் இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர் - 1 கொரிந்தியர் 15:21) கிறிஸ்து இறந்தோர் உயிர்த்தெழ தன்னையே பலியாக கொடுத்துள்ளார் என்பதனால் திருப்பலி ஒப்புக் கொடுப்பது ஒன்றும் தவறில்லை. மக்கபேயர் நூலில் யூதா இறந்தோருக்காக பணம் திரட்டி பலி ஒப்புக் கொடுத்தார் என்று வாசிக்கிறோம்.
ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரெனில், அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்" - 2 மக்கபேயர் 12:45
இறந்தோர் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும், இறந்தோருக்காக செபிக்க வேண்டும், இறந்தோரின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்...
No comments:
Post a Comment