25_03

பாவ மன்னிப்பு நலவாழ்வு கொடுக்கிறது...

தவக்காலம் நான்காம் வாரம் 

01.04.2025 - செவ்வாய்க் கிழமை 

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர் - திருப்பாடல்கள் 32:1

சில மனிதர்கள் தரும் காயம், ஏமாற்றம் பலரை நோயாளியாக்கி விடுகிறது. சிலரின் வறட்டு கவுரவம் அவர்களின் நல வாழ்வுக்கே தடையாக இருக்கிறது.

மருந்துகளை கொடுப்பவர் மருத்துவர் என்றாலும் நலம் அளிப்பவர் கடவுள். சில நோய்களுக்கு மருந்து தீர்வு, சில நோய்களுக்கு மன்னிப்பு (பாவமன்னிப்பு) தான் தீர்வு. சிலர் இவ்வாறு சொல்ல கேள்விப்பட்டிருப்போம், ‘எத்தனையோ மருத்துவரை பார்த்துவிட்டேன் இன்னும் உடல் சரியாகவில்லை’. சிலர் செய்த பாவங்கள் சிலரை பின்தொடர்வது தான் உடல்நலம் பெறாததற்கு காரணம். 

பாவமன்னிப்பு கடவுளிடம் கேட்க வேண்டும். யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அவர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். சக்கேயு செய்தது போல “சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்”. இது தான் பரிகாரம்.

தாமஸ் மேன்சன் சொல்வார், ‘பழி சுமத்துவது காயங்களை பெரிதுப்படுத்துகிறது, ஆனால் மன்னிப்பு குணமாக்குகிறது’.

கடவுள் மன்னிப்பவர் தான், அதற்காக பாவத்தில் திளைத்திற்க கூடாது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 6:1,2இல் இவ்வாறு சொல்வார், “…அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா? ஒருபோதும் கூடாது. பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம் எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்? 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5:1-3,5-16) இயேசு 38 ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரை குணமாக்குகிறார். இயேசு அவரிடம் பேசியதாக மூன்று வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1. நலம்பெற விரும்புகிறீரா?

2. எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்.

3. இதோ பாரும் நீர் நலமடைந்தள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்.

முழு நலம்பெற வேண்டும் என்றால் பாவம் மன்னிக்கப்பட வேண்டும். இயேசு அதை செய்தார். இனிமேல் பாவம் செய்யாதீர் என்றும் சொன்னார்.

நாம் நம்முடைய வாழ்வில் நாம் முழு நலம்பெறமுடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் நம்முடைய பாவங்களுக்கு மனம்வருந்தாததும், மன்னிப்பு கேட்காததும், பிறருடைய குற்றங்களை மன்னிக்காததும் தான் காரணம்.

மருந்து வேலை செய்யாத இடத்தில் கூட மன்னிப்பு வேலை செய்கிறது.

மன்னிப்பு கேட்போம்… மன்னிப்போம்… நலம் பெறுவோம்!

நம்பிக்கை அதிகாரத்தைவிட ஆற்றல் மிக்கது...


தவக்காலம் நான்காம் வாரம் 

31.03.2025 - திங்கட்கிழமை 

மனிதர்கள் அதிகார போக்கிலே அலைந்து திரிகிறார்கள். தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்களின் வாழ்வு உயர பயன்படுத்துவதை காட்டிலும் தன் குடும்பம் உயர பயன்படுத்துபவர்களே அதிகம். 

நம் நிலை உயர்ந்தால் மட்டும் போதும் என்பது தான் நமது மனநிலை. தற்காலிகமாக மற்றவர்களை உயர்த்தினால் போதும் என்பதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலை.

அதிகாரம், பணம், புகழ் இவற்றைப் பற்றி பேசுகின்ற போது எனக்குள் எழக்கூடிய கேள்வி, எதையும் கொண்டு செல்ல முடியாத நிலையிலேயே மனிதர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்றால், நாம் சேர்த்து வைத்தது எல்லாவற்றையும் நம்மோடு எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை வந்தால் நாம் என்னவெல்லாம் செய்வோம்? என்பதுதான்.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 4: 43-54) இந்த அதிகாரப் போக்கு இல்லாத தலைவரை நாம் பார்க்கிறோம். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.

தன் மகனுக்காக தனது அதிகாரத்தை குறைத்து தன் நம்பிக்கையை மிகைப்படுத்துகிறார். 

இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் இரண்டு. 1. நம்முடைய நிலையிலிருந்து இறங்கி வருதல், 2. நம்பிக்கையை அறிக்கையிடுதல்.

அவர் கொண்டிருந்த அதிகாரத்தை, அவரின் நம்பிக்கை பணிய வைத்துவிட்டது. பணிந்து நின்ற காரணத்தினால் அவர் தாழ்ந்து போகவில்லை. மாறாக மகனின் உயிர் காப்பற்றப்படுகிறது.

தலைமைத்துவம் என்பது அதிகாரத்தில் நிறைவு பெறுவது அல்ல பணிவில், பகிர்வில், பரிவில் முழுமை பெறுவது.

தன்னை முன்னிலைப்படுத்துவது தலைமைத்துவம் ஆகாது. தன்னோடு இருக்கும் மனிதர்களின் மாண்பை காப்பாற்றுவதும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை தட்டிக் கழிக்காமல் சரிவர செய்வதுதான் உண்மையான தலைமைத்துவம். 

அதிகாரமிக்க உலகில் அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவோம். நம்பிக்கையை அதிகப்படுத்துவோம்.

இழந்ததை தேடிய தந்தை...


தவக்காலம் நான்காம் வாரம்

30.03.2025 - ஞாயிற்றுக் கிழமை 

இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார் - லூக்கா 19:10

எல்லா மனிதரின் வாழ்விலும் இழப்பு உண்டு. சில நேரங்களில் இழப்புகள் கூட நல்லது தான். வரிசையாக நிற்க வைக்கப்பட்ட தீக்குச்சிகள், ஒரு குச்சியின் மீது நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது, நெருப்பு மற்ற குச்சிகளிலும் பரவுகிறது. இந்த வேளையில் ஒரு குச்சி பின் வாங்குவது நல்லது. இங்கு உறவை இழந்ததினால் நெருப்பு பரவாமல் தடுக்கப்படுகிறது. பிற உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.

இதே போல தான் மனித உறவுகளும் இருக்க வேண்டும். சில இடங்களில் விலகி இருக்க வேண்டும், சில இடங்களில் தனித்திருக்க வேண்டும். தன் வழியாக யாரும் அழிந்து விட கூடாது. பிறருடைய அழிவுக்கு நான் ஒரு போதும் காரணமாக இருந்துவிட கூடாது. என் தவறான சேர்க்கையால் அழிவு வரும் என்றால் அத்தகைய உறவுகளை இழத்தல் சாலச் சிறந்தது 

இறுதிவரை இழப்பு நிரந்தரமாகவும் இருக்க கூடாது. 

ஒருவர் வாழ்வு பெற தன்னை இழக்க துணிதலும் நல்லது தான். சிலர் இருக்கும் போதே இருப்பதை இழக்கிறார்கள் (இரத்த தானம், உறுப்பு தானம்...) சிலர் இறந்த பின்னர் இழக்கிறார்கள் (உடல் தானம்/உறுப்பு தானம்).

சிலரின் இழப்பு சிலருக்கு வாழ்வு. 

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 15: 1-3, 11-32) வித்தியாசமான இழப்பை நாம் சந்திக்கிறோம். எல்லாம் நிறைவான இல்லத்தை இளைய மகன் இழக்க துணிகிறார், அன்பின் பரிவின் இருப்பிடமாய் இருக்கும் தந்தையை இளைய மகன் இழக்க எண்ணுகிறார்.

தந்தை இறப்பதற்கு முன்பே தனக்குரியதை பெற்றுக் கொண்டு தொலை தூர பயணம் மேற்கொள்கிறார் அந்த மகன்.

ஆடம்பர வாழ்க்கை ஆபத்தில் முடியும் என்பதற்கு ஏற்ப அனைத்தையும் இழந்து நிற்கிறார் இளைய மகன்.

சென்ற இடத்தில் சொத்துக்களை இழக்கிறார், உறவுகளை இழக்கிறார், உணர்வுகளை இழக்கிறார் அந்த மகன். எல்லாம் இழந்த பின் தான் புத்தி தெளிய ஆரம்பிக்கிறது.

தந்தையை நோக்கி திரும்பி வருகிறார். மகனை இழந்த தந்தை மகிழ்ச்சியோடு இல்லை. மகனின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். 

அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக் கொண்ட அந்த மகன் தந்தையின் உபசரிப்பை கண்ட பின், கடைசி வாக்கியத்தை விட்டுவிடுகிறார் (உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்).

இழப்பு நிரந்தரம் இல்லை என்பதை இவர்கள் இருவரும் புரிந்துக் கொண்டார்கள். இழந்தவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டார்கள். அதற்கு அடிப்படை காரணம் தந்தையின் பரிவு.

இப்படி நல்லது கொண்டிருக்க வீட்டிற்கு வெளியே ஒருவர் (மூத்த மகன்) நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறார்.

இருப்பதும் போய் விடுமோ என்ற பயம், இன்னும் என்னவெல்லாம் இழக்க வேண்டுமோ என்ற கவலை, தம்பியின் மீதும் தந்தையின் மீதும் கோபம் இவையெல்லாம் மூத்த மகனை வெளியே நிற்க வைத்து விட்டது.

நம்மில் பலர் இந்த மூன்று கதாபாத்திரத்துக்குள் ஒளிந்து கிடக்கிறோம். 

1. இருப்பதையெல்லாம் சுருட்டி கொண்டு போய் வெளியில் தொலைத்த இளைய மகனாக

2. இருப்பதும் போய் விடுமோ என்று அச்சம் கொள்ளும், கோபம் கொள்ளும் மூத்த மகனாக 

3. எது போனாலும்/ எதை இழந்தாலும் பரவாயில்லை எனக்கு உறவும் உணர்வும் தான் முக்கியம் என்று கருதும் தந்தையாக.

இந்த மூன்றில் பெரும்பாலும் நாம் முதல் இரண்டு நிலைகளிலே தேங்கி விடுகிறோம்.

கடைசி நிலை தான் இழந்ததை தேடும் நிலை. போனது போகட்டும் அல்லது இருப்பதும் போகட்டும் எனக்கு உறவுகள் தான் முக்கியம் என்று எண்ணும் நிலை வருமென்றால் அது நல்லது.

இழந்ததை தேடுவோம். பரிவு காட்டுவோம்.

இறைவேண்டலில் ஒப்பீடு தேவையில்லை...

தவக்காலம் மூன்றாம் வாரம் 

29.03.2025 - சனிக் கிழமை 

அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது - திருத்தூதர் பணிகள் 2:42

இறைவேண்டல் (செபம்) என்பது கடவுளுக்கும் நமக்கும் இடையேயான உறவு பரிமாற்றம். அந்த இறைவேண்டல் தன் பெருமையை எடுத்துரைப்பதற்கான இடம் அல்ல.

இறைவன் இல்லம் ஒருவர் தன்னை குறித்து பெருமை பாராட்டுதலுக்கான இடமல்ல. (பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும் - 2 கொரிந்தியர் 10:17). 

செபிக்கும் உதடுகள் நடிக்கும் உதடுகளாக மாறி விட்டன. கூட்டம் கூடும் நாட்கள் பார்த்து இன்று பலர் தங்களை ஆலயங்களில் முதன்மைப்படுத்தி கொள்கிறார்கள். ஆரம்பக் காலங்களில் நல்லவர்கள் போல நடித்து சில நாட்களிலேயே தங்கள் சுய உருவத்தை காட்டி விடுகிறார்கள் சில நயவஞ்சகர்கள்.

கோயில் என்பது தன்னலம் தேடுகிற இடம் அல்ல, இறைவனை தொடுகிற இடம். என்னுடைய இறைவேண்டல் கடவுளை தொடுதலும் கடவுள் தன் அருளால் என்னை தொடுதலும் நடைபெறுகின்ற இடம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 18:9-14) இருவரின் இறைவேண்டல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் பரிசேயர், மற்றொருவர் வரிதண்டுபவர். பரிசேயரின் இறைவேண்டல் மற்றவர்களை இழிப்படுத்தி தன்னை பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது இறைஒன்றிப்பிற்கான அடையாளம் அல்ல. ஆனால் வரிதண்டுபவர் தன்நிலை உணர்ந்து தன்னை தாழ்த்திக் கொள்கிறார், தன் பாவங்களுக்காக மனம் வருந்துகிறார். 

நல்லது செய்தாலும் அதில் பெருமை நாடி அதன் வழியாக பாவம் செய்த பரிசேயர் கடவுளுக்கு ஏற்புடைய நிலைக்கு தகுதியாகவில்லை. பாவி என்னும் நிலையிலிருந்து இறங்கி வந்து, மன்னிப்பு கேட்டவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார்.

கடவுளை மாற்றுவது அல்ல கடவுளை போல மாறுவதே நம் வேண்டலாக இருக்க வேண்டும். நல்லவராக தன்னை காட்டிக் கொள்வதல்ல, நல்லவராக வாழ்வதே இறை விருப்பம். இறை இல்லத்தில் தற்பெருமை கொள்ளாது நம் நிலை உணர்ந்து வாழ்வோம்.

அன்பே பலிகளை விட சிறந்தது...


தவக்காலம் மூன்றாம் வாரம்

27.03.2025 - வியாழக்கிழமை 

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்; ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள் - செக்கரியா 7:9

இறைவன் முதல் இயற்கை வரை நடைபெறும் உறவு பரிமாற்றம் அன்பில் தான் நடைபெறுகிறது. மேகம் பொழியும் மழைத்துளி பூமியோடு அன்பின் சங்கமம். பூவுக்குள் இருக்கும் தேனும் அதை குடிக்க வரும் தேனீயும் அன்பினால் சங்கமம், அலையும் கரையும் அன்பினால் சங்கமம், விதையும் மண்ணும் அன்பினால் சங்கமம்...

அன்பின்றி உலகு இயங்காது. ஏமாற்றப்படுவோம் என்று தெரிந்தும் கூட இங்கு பொய் அன்பு நம்பப்படுகிறது. தெரிந்தே குழியில் விழுபவர்களும் நேர போக்கிற்காக அன்பு வலையில் விழுபவர்களும் இங்கு உண்டு.

ஆனால் உண்மையான அன்பும் இவ்வுலகில் இருக்க தான் செய்கிறது. அழகை பார்த்து நேசிப்பவர்கள் மத்தியில் இங்கு மனதை பார்த்து அன்பு செய்வோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இத்தகையோராலயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

சிலர் கோவிலுக்கு செல்வதில்லை, ஆனால் நல்லவர்களாக இருக்கிறார்கள், பலர் கோவிலுக்கு செல்கிறார்கள் ஆனால் எல்லா அயோக்கியத்தனமும் அவர்களால் தான் செய்யப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:28-34) இயேசு இரண்டு அன்பு கட்டளையை போதிக்கிறார். 

1. படைத்தவரை அன்பு செய்

2. படைக்கப்பட்டவர்களை அன்பு செய்

கடவுளை அன்பு செய்வது எளிது என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் பிறர் அன்பு இல்லாமல் இறையன்பு சாத்தியமில்லை. 

யோவான் எழுதிய முதல் திருமுகம் 4:20 இவ்வாறு சொல்கிறது, "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது."

சில வேளைகளில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டுள்ளார்கள். ஆனால் கடவுளின் கட்டளை 'அடுத்தவரை அன்பு செய்ய' சொன்னபோதிலும் கூட நாம் செவிமடுக்க/செயல்படுத்த மறுக்கிறோம்.

பல பலிகளை, காணிக்கை படையல்களை கடவுளுக்கு கொடுத்து கடவுளை திருப்திப்படுத்த எண்ணுகிறோம். கடவுள் நம் பலிகளில் அல்ல நம் அன்பு செயல்களில் தான் உளம் மகிழ்வார். மனிதர்களை மறந்து மாயையை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.

பணம், புகழ், பெருமை, பொருள் ஆகியவை இங்கு அன்பு செய்யப்படுகிறது. உண்மையான அன்பு ஒருபோதும் விலைப் பேசப்படுவதில்லை. அதனாலேயே உண்மையானவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். நாம் விலைபோகாமல் இருப்பதே நல்லது. 

நம் அன்பு எளிமையிலிருந்து இறைமையை நோக்கி கடந்து செல்லட்டும். மனிதம் நேசிக்கப்படும் இடத்தில் இறைமை மாட்சி அடையும்.

செய்பவற்றை எல்லாம் பெருமைக்காக செய்யாமல், உள்ளார்ந்த அன்பினால் தூண்டப் பெற்று செய்வோம். அன்பே கடவுள்.

தடையை உடை...


தவக்காலம் மூன்றாம் வாரம் 

27.03.2025 - வியாழக்கிழமை 

என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்; ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய்கின்றனர்; சினமுற்று என்னைப் பகைக்கின்றனர் - திருப்பாடல்கள் 55:3

நடை பயிலும் குழந்தைக்கு முன் இருக்கும் அனைத்தும் தடைகள் தான். அதற்காக அந்த குழந்தை தடையை கண்டு தடைபட்டு நிற்காது. கீழே விழும், அழும் ஆனாலும் பின்வாங்காது.

தடையை கண்டு துவண்டு போனால் நடக்க பழகுவதை மறந்து விட வேண்டி இருக்கும்.

இன்று நம்முடைய வாழ்க்கையில் மற்ற மனிதர்கள் நமக்கு இரண்டு வழிகளில் தடைகளை வைக்கிறார்கள். 1. நம்மை பற்றி அவதூறுகளை மற்ற மனிதர்களிடம் பரப்பி விடுதல் வழியாக

2. நாம் செய்கிற நல்ல காரியத்தை தவறாக நம்மிடமே சித்தரித்து பேசி நம்மை இயங்க விடுவதில்லை.

இந்த இரண்டு தடைகள் எல்லா நல்ல மனிதரின் வாழ்விலும் வரும். தடைகளை மட்டுமே அசைபோட ஆரம்பித்தால் வளர்ச்சியை காண முடியாது. 

சிலரை சொல்லி திருத்தி விடலாம், சிலர் பட்டால் தான் திருந்துவார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:14-23) இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டியதை கூட தவறாக சித்தரித்தது ஒரு கூட்டம். யார் மீது பொறாமை, பேச்சற்றவர் மீதா? நன்மை நடப்பதாலா? இயேசு மீதா? நிச்சயம் இயேசு மீது தான்.

பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் என்றது கூட்டம். இயேசு தெளிவு கொடுக்கிறார், சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? "நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?" என்பது இயேசு கொடுக்கும் பதிலடி

புரிந்து கொள்ளாதவர்களை புரிந்துக் கொள்ள வைத்து விடலாம். புரிந்து கொள்ள மறுப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

இவர்கள் நம் வாழ்வின் தடைகள் என்பதை உணர்ந்து நாம் தான் கடந்து செல்ல வேண்டும்.

இன்று பலர் நம்மோடு இருப்பதில்லை, நமக்கு எதிராக, தடையாக தான் இருக்கிறார்கள்.

தடைகளை உடைக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. ஆற்றலை சரிவர பயன்படுத்தி தடைகளை தாண்டுவோம். யாருக்கும் தடையாக இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்...

அர்த்தமுணர்ந்து நடப்போம்...


தவக்காலம் மூன்றாம் வாரம் 

26.03.2025 - புதன் கிழமை 

இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே. இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு. அப்பொழுது தான் நீ செல்லும் இடம் எல்லாம் நலம் பெறுவாய்; வெற்றி காண்பாய்” - யோசுவா 1:8

எது திருச்சட்டம்? மக்களுடைய வாழ்க்கை இறைவனுக்குரியதாய் மாற உதவிய, பத்துக் கட்டளைகள், தோரா நூல்கள், திருப்பாடல்கள், இறைவாக்குகள் ஆகியவையே திருச்சட்டம். சுருங்கச் சொல்லின் திருச்சட்டம் என்பது ஆண்டவரின் வார்த்தை\கடவுளின் கட்டளை. (“நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது” - திருப்பாடல்கள் 119:72)

சாதாரண சட்டம், இறைவன் கொடுத்ததால் திருச்சட்டமாக மாறுகிறது, சாதாரண வார்த்தை, இறைவன் மொழிந்ததால் இறைவாக்காக மாறுகிறது. மனிதர் அழிந்து போகலாம். ஆனால் இறைவாக்கும் திருச்சட்டமும் ஒருநாளும் அழியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:17-19), “திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என் நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” என்று இயேசு சொல்கிறார். 

இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் கட்டளைகளையும் நியமங்களையும் தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொண்டனர். ஆகவே, கடவுள் வெளிப்படுத்திய வார்த்தைகளை தவறாக கையாண்ட நபர்களை கண்டித்து, அதன் பொருளை விளங்கச் செய்வதே இயேசுவின் நோக்கமாக இருந்தது. ‘சட்டம் சொல்கிற வார்த்தைகளை விட அதனுடைய சாராம்சமே முக்கியம்’ என்பது இயேசுவின் கருத்து. 

திருச்சட்டத்தை பின்பற்றுவதற்கு முன் அதன் அர்த்தத்தை புரிந்துக் கொண்டு பின்பற்ற அழைப்பு விடுக்கிறார் இயேசு. அர்த்தமற்ற செயல்கள் ஆபத்தில் போய் முடியும் என்பது இங்கு தெளிவாகிறது. இயேசு திருச்சட்டத்தை எளிமைப்படுத்துகிறார். அதன் வழியாக கடவுளுக்கு உகந்த வழியில் நடக்க உதவுகிறார்.

கற்றுக் கொண்டதை பின்பற்றவும் கற்பிக்கவும் வேண்டும். திருச்சட்டம் காட்டும் பாதையில், ஒளியில் பயணிக்க வேண்டும். அப்போது விண்ணரசில் நாம் பெரியவராய் இருப்போம்.

திருச்சட்டம் நம் உள்ளத்தில் பதிய வேண்டும். உண்மை பொருளை உணர்ந்து கற்பித்தால், செயல்படுத்தினால் எதுவும் அழியாது…

இறைவன் மனிதனாக...


கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா

25.03.2025 - செவ்வாய்க் கிழமை 

கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:6-8

இன்றைய நாள் மங்கள வார்த்தை நாள் என்றும் அழைக்கப்படுகிறது. தவக்காலமாக இருந்தாலும் இவ்விழா பெருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.

ஏன் மார்ச் 25 ஆம் தேதி கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது? மார்ச் 25 முதல் டிசம்பர் 25 வரை 9 மாதங்கள். ஒரு குழந்தையின் பிறப்பு சராசரியாக 9இலிருந்து 10 மாதங்கள் வரை இருக்கும்.

இறைவன் மனிதராக ஒரு பெண் வழியாக உருவாக போகிறார் என்று கபிரியேல் தூதர் வழியாக முன்னுரைக்கப்பட்ட நாள் தான் இன்று. 

இயற்கைக்கு அப்பாற்பட்டு ஒரு கன்னிப் பெண் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது வியப்புக்குரிய செயலே. கபிரியேல் தூதர் கன்னி மரியாவிடம் நடந்த உரையாடலில் சந்தேகங்களுக்கு தெளிவும், தெளிவு கிடைத்த பின் அன்னை மரியாவின் தாழ்ச்சியும் வெளிப்படுகின்றது. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியா பதிலிறுப்பு செய்கிறார்.

இறைவனின் தாயாக மாற போகிறேன் என்ற அகங்காரம் இங்கில்லை, மாறாக இறைத்திருவுளத்தை நிறைவேற்ற போகிறேன் என்ற மனநிறைவு இங்கு புலப்படுகிறது. தனக்கு எல்லோரும் பணிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கில்லை, மாறாக தன் உறவினருக்கு பணிவிடை செய்ய புறப்படுகிறார்.

இறைவனின் தாயாக இம்மண்ணில் உருவாகும் முன்னே அவர் இறைவனின் எண்ணத்தில் தாயாக உருவாகி விட்டார். தொடக்க நூல் 3:15 (“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்”) இதற்கு அடையாளம்.

இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் அன்னை மரியாவோடு இணைந்து மகிழ்வோம்.

வத்திக்கான் செய்திகளில் இருந்து பெறப்பட்ட வரலாற்று தகவல்

அருள் நிறைந்த மரியே வாழ்க என்று கபிரியேல் வானதூதர் அன்னை மரியாளுக்கு வாழ்த்து செய்தி கூறிய நாளே கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா என்றழைக்கப்படுகின்றது. திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ் (492-496) காலத்து திருவழிபாட்டு நூலில், ஆண்டவரின் திருவருகை அறிவிப்பு பற்றிய குறிப்பு உள்ளது. 

6ஆம் நூற்றாண்டில் இதே பெயரிலேயே சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவானது 7ஆம் நூற்றாண்டில் மங்கள வார்த்தை விழா என்று பெயர் மாற்றம் பெற்றது. அதன் பின் திருத்தந்தை புனித பெரிய கிரகோரி (590-604) அவர்களின் திருவழிபாட்டு நூலிலும் இடம் பெற்றது

656ஆம் ஆண்டில் நடைபெற்ற தொலெடோ சங்கம், 692ஆம் ஆண்டு கூடிய துருல்லோ சங்கம் ஆகியவற்றின் விதிகளில் காணப்படும் மங்கள வார்த்தை விழா குறித்த பதிவுகள் இதனை உறுதிசெய்கின்றன. 799ல் நடைபெற்ற சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதி குறிப்பிடும் மரியாளின் நான்கு திருநாட்களில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா மார்ச் 25ந்தேதி இடம் பிடித்து 10ஆம் நூற்றாண்டளவில், கடன் திருநாளாக சிறப்பிக்கும் வழக்கமும் உருவானது. 

1895 ஏப்ரல் 23ஆம் நாள், இத்திருநாளை முதல் தர விழாவாக உயர்த்தி திருவழிபாட்டு பேராயம் ஆணையிட்டது. 1969ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ஆம் பவுல் அவர்கள் சீரமைத்த திருஅவை நாள்காட்டியில், பெருவிழாக்களின் பட்டியலில் இவ்விழா சேர்க்கப்பட்டது. 

1969 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த திருவழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், மங்கள வார்த்தை திருவிழா என்பது கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது. 

புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்படும் இவ்விழாவானது புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட வேண்டும் எனவும், தவக்காலத்தில் சிறப்பிக்கப்பட்டாலும் பெருவிழாவாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் திருஅவை வலியுறுத்துகின்றது.

நல்லதை ஏற்றுக் கொள்ளலாமே!


தவக்காலம் மூன்றாம் வாரம் 

24.03.2025 - திங்கட்கிழமை 

நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல் முறையை என்னுள் காண்கிறேன் - உரோமையர் 7:20,21

சிலருக்கு சிலரை பிடிக்காது, சிலருக்கு சிலர் செய்வது பிடிக்காது. காரணம் அவர் நான் செய்வதற்கு எல்லாம் அசைந்து போகவில்லை என்பது தான்.

யார் சொன்னார்கள் என்பது முக்கியமல்ல! என்ன சொல்லப்பட்டது என்பது தான் முக்கியம். யாருக்கு சொன்னார்கள் என்பது முக்கியமல்ல! என்னுடைய வாழ்க்கைக்கு அது பொருந்துகிறதா என்பது தான் முக்கியம். 

நம்முடைய வாழ்க்கை மேம்பட வேண்டும் என்றால் நல்லது எங்கு சொல்லப்பட்டாலும், நல்லது எந்த இடத்தில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நன்மைத்தனத்தை அல்லது நல்லவற்றை மற்றவரிடம் இருந்து பெறுவதற்கு நமக்குள் கர்வம் இருக்கக் கூடாது. 

நடைமுறை வாழ்க்கையில், சொந்த ஊரை சார்ந்த நல்லவர்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள். எங்கோ இருப்பவர்கள் உயர்ந்தவர்களாக, நல்லவர்களாக தெரிவார்கள். முகநூல் நண்பர்கள், இன்ஸ்ட்ராகிராமில் பின்பற்றுபவர்கள், பேருந்து பயணத்தில் பழக்கமானவர்கள் நல்லவர்களாக தெரிவார்கள். அதற்கு ஒரு காரணம் அவர்கள் நம் ஒருபுறத்தை (வெளித்தோற்றத்தை) மட்டும் பார்த்து நம்மை புகழ்பவர்கள், நம் மறுபக்கத்தை (தாறுமாறான வாழ்க்கை) பற்றி கவலைப்படாதவர்கள், கண்டுக் கொள்ளாதவர்கள். அவர்களுக்கு அது தேவையும் இல்லை. ஆனால் நம்மோடு உடன் இருக்கின்ற நல்லவர்கள் நம்மீது அக்கறை கொண்டவர்களாய் இருப்பதால் நம் வாழ்க்கை மாறும் போது தட்டி கேட்பார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 4: 24-30) இயேசுவை ஏற்றுக் கொள்ள ஒரு கூட்டம் தயக்கம் காட்டுகிறது. சொந்த ஊரில் இறைவாக்கினர்கள் மதிக்கப்படுவதில்லை என்பதை இயேசு அன்றே சொல்லிவிட்டார். பல்வேறு வல்லசெயல்கள் செய்தும் மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை, இவர் நம் அசைவுக்கு உடன்படவில்லை என்பது தான் இயேசு வெறுக்கப்பட்டதற்கு காரணம்.

ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள் பற்றி இயேசு கவலை கொள்ளவில்லை, ஆனால் கடவுளை ஏற்றுக் கொண்டவர்கள் அடைந்த நன்மையை இயேசு நற்செய்தியில் எடுத்து சொல்கிறார் (இஸ்ரயேலுக்கு வெளியே நடந்த கடவுளின் ஆற்றல் - சாரிபாத்தின் கைம்பெண் நிகழ்வு, சிரியாவை சார்ந்த நாமான் நிகழ்வு). 

புனித அகுஸ்தினார் சொல்வார், ‘கடவுள் எப்போதும் நமக்கு நல்லதையே கொடுக்கிறார், கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நம்முடைய கைகள் நிரம்பி இருப்பதால் அதை பெற முடிவதில்லை’. 

நல்லதை ஏற்றுக்கொள்பவர்கள் நன்மையை பெறுவார்கள் என்பது உண்மையிலும் உண்மை. நல்லதை ஏற்போம்… நல்லவர்களாய் மாறுவோம்…

இந்த ஆண்டும் விட்டு வைக்கப்பட்டிருக்கிறோம்...

தவக்காலம் மூன்றாம் வாரம்

23.03.2025 - ஞாயிற்றுக் கிழமை 

வாய்ப்பு கூட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்நாளோடு ஓர் ஆண்டு சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது இது தான்.

நான் நல்லவன், திறமையானவன் என்பதாலும் அல்ல, என்னை விட யாரும் இதை செய்ய முடியாது என்பதாலும் அல்ல, நான் அழகானவன்(ள்) என்பதாலும் அல்ல, மாறாக நாம் அவரது உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதாலே வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று பலர் தங்களது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எல்லாம் தங்களாலே முடியும் என்று ஆணவம் கொள்கிறார்கள். இது முற்றிலும் வீண்.

நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும். கரடு முரடான பாதை, முட்கள் நிறைந்த பாதை, குறுகலான பாதையென நாம் கடந்து வந்த பாதை ஏராளம். 

எல்லாவற்றிலும் பாடத்தை கற்றுக் கொண்டாலும் மனம் மட்டும் மாறுவதில்லை. நம்மைவிட மற்றவர்களை மதிப்பு குறைந்தவர்களாக கருதுகிறோம். மற்றவரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுகிறோம். நம் குற்றங்களை எண்ணிப் பார்க்க தவறி விடுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:1-9) மனம்மாற வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது. மனம்மாறினால் வாழ்வு, இல்லையென்றால் அழிவு என்பது எச்சரிக்கையாக கொடுக்கப்படுகிறது.

நற்செய்தி வாசகத்தில் தொடக்கப் பகுதியில் நாம் காண்பது, அழிவுக்குள்ளானவர்கள் எல்லோரும் நம்மை விட பாவிகள், குற்றவாளிகள் என்று கருதுவது தவறு. மனம் மாறாவிட்டால் நாமும் அழிவோம் என்பது தான் முதல் பாடம்.

இரண்டாம் பகுதியில் காய்க்காத அத்தி மரத்திற்கு மேலும் ஓர் ஆண்டு கூட்டிக் கொடுக்கப்பட்டது போல நமக்கும் ஓர் ஆண்டு சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தி மரத்தின் கனியை காண வந்த உரிமையாளர் தோட்டத் தொழிலாளரிடம் மூன்று ஆண்டுகளாக கனி தராத அத்தி மரத்தை வெட்டிவிட கட்டளையிடுகிறார். ஆனால் தோட்டத் தொழிலாளரோ ஓர் ஆண்டு வெட்டி கொத்தி உரம் போட வாய்ப்பு கேட்கிறார்.

அத்தி மரத்தின் ஆயுள் மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்படிகிறது.

நம்முடைய வாழ்விலும் அத்தி மரத்தை போன்று தவக்காலம் வழியாக ஓர் ஆண்டு கூட்டிக் கொடுக்கப்படுகிறது.

தவக்காலத்தில் நம் உள்ளத்தில் போடப்படும் உரங்கள் பலன் அளிப்பது நம் செயல்களில் இருக்கிறது.

உள்ளம் பண்பட, மனமாற்றம் நிகழ கொடுக்கப்படும் வாய்ப்பினை பயன்படுத்துவோம்... ஆயுள் நீடிக்கட்டும்.

ஊதாரித் தந்தை...

தவக்காலம் இரண்டாம் வாரம் 

22.03.2025 - சனிக் கிழமை

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் - லூக்கா நற்செய்தி 6:36

செலவு அதிகம் செய்பவர்களை ஊதாரித்தனம் செய்பவர்கள் என்போம். ஊர் சுத்துபவர்களை ஊதாரி என்போம். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்போருக்கு, தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. பிறர்மீது கொண்ட அளவுக்கதிகமான அன்பினால் இருப்பதையும் இழந்து நிற்பார்கள்.

ஏமாற்றுவோர் என்று தெரிந்திருந்தாலும் கூட தொடர்ந்து ஏமாந்துக் கொண்டே இருப்பார்கள் சிலர். அன்பு சில நபர்களை கண்மூடித்தனமாக நம்ப செய்து விடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 15: 1-3, 11-32) தன் இளைய மகன் தவறு செய்தான்/செய்கிறான் என்று தெரிந்திருந்தும் கூட தன்னிடம் இருப்பதை கொடுக்கிறார் அன்பில் ஊதாரியான தந்தை. இந்த தந்தைக்கு பழிவாங்க தெரியவில்லை, கோபித்துக் கொள்ள தெரியவில்லை, வீட்டை விட்டு விரட்ட தெரியவில்லை, வசைபாட தெரியவில்லை. இந்த தந்தை அன்பை வீண்செலவு செய்கிறார். (அந்த வீண்செலவு தான் ஒருவரை திருத்தியிருக்கிறது)

இன்னும் கொடுக்க மட்டுமே தெரிகிறது அந்த தந்தைக்கு. மகன் மனம்மாறி திரும்பி வந்த போது, தந்தை செய்தது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. (முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். லூக்கா 15:22,23).

அந்த மகன் செயல்பாட்டில் ஊதாரியாக இருந்தார், தந்தை அன்பில் ஊதாரியாக இருந்தார்.

இளைய மகன் பன்றி மேய்க்கும் போது, தனக்குள் சொல்லிக் கொண்டது, "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’.

தந்தையின் செயல்பாடுகளை கண்ட போது வாயடைத்து போகிறார். "தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்."

தந்தையின் பரிவில் மாட்டிக் கொண்ட மகன் தான் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லவில்லை/சொல்ல முடியவில்லை. (உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’.)

தந்தையின் அன்புக்கு முன் இளைய மகனின் குற்றங்கள் பனி போல உருகுகிறது. மூத்த மகன் தந்தையின் அன்பை புரிந்துக் கொள்ளவில்லை. தன் தம்பியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. (அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார்.)

மனம்மாறியவன் அன்பில் நனைந்தான், மற்றவனோ கோபத்தால் அழிந்தான்.

மூத்த மகனின் கலக்கம், இருப்பதும் அவனுக்கு போய்விடுமோ என்பது தான்.

ஊதாரித் தந்தை இன்னும் கொடுக்க இருக்கிறார். அது பொருள் மட்டுமல்ல அன்பையும் மன்னிப்பையும்.

கொடுக்க கொடுக்க சுரக்கும் அன்பை கொண்ட தந்தையை நாம் பெற்றிருக்கிறோம். அவரின் அன்பில் களங்கம் இல்லை. யார் வெறுத்தாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நம்மை விட்டுவிடாதவர்.

தனக்குரிய அன்போடு இரு கரம் விரித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

நம் பதில் என்ன?

தோட்ட பணியாளராக...


தவக்காலம் இரண்டாம் வாரம் 

21.03.2025 - வெள்ளிக் கிழமை  

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள் - லூக்கா நற்செய்தி 17:10

பணி செய்து கிடப்பதே என் கடமை என்ற மனநிலை எல்லோரிடமும் உருவாக வேண்டும். ஒருவர் மற்றவருக்குரியதை சுரண்டும் போது, அதன் உரிமையாளர் போராட வேண்டி இருக்கிறது. சுரண்டப்பட்டது உடைமை, சுதந்திரம், புகழ், ஆளுமை என ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஏதாவது ஒன்றின் உரிமையாளராய் இருப்பவருக்கும் வாழ்க்கையில் போராட்டம் உண்டு, உரிமையை பெற குரல் கொடுப்போரின் வாழ்க்கையிலும் போராட்டம் உண்டு. 

தனக்குரியதை ஒருவர் பெற போராட வேண்டி இருக்கிறது. ஆற்றல்மிக்கவர்கள் அனைத்தையும் அபகரித்துக் கொள்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு  21: 33-43, 45-46) தோட்ட உரிமையாளர் தோட்டத்தின் உரிமையை பெறுவதற்காக தம் பணியாளர்களை அனுப்புகிறார். அவர்களோ பல துன்பங்களை அனுபவிக்கின்றன. பணியாளர்கள் கொலை செய்யப்படல், தலைவர் அவமரியாதை செய்யப்படல், இறுதியாக தோட்டத் உரிமையாளர் தன் மகனையும் இழந்து விடுகிறார். தோட்டத்தில் பணி செய்தவர்கள் தோட்டத்தை தங்கள் சொந்தமாக்க எண்ணினார்கள்.

தன்னுடைய உரிமைகளை தட்டி பறிப்பவர்களை கண்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.

அடுத்தவருக்குரியதை அடுத்தவருக்கு கொடுப்பதும், தனக்குரியதை தான் பெற்றுக்கொள்வதுதான் சமூக நீதியாக இருக்கிறது. 

அடுத்தவருக்கு உரிய உரிமையை நான் தட்டிப் பறிப்பது, அடுத்தவரின் மாண்பை சிதைப்பதற்கு ஈடாகும்.

நாம் இறையாட்சி என்னும் தோட்டத்தின் உரிமையாளராக அல்ல, தோட்ட பணியாளராக நாம் இருக்க வேண்டும். உரிமையாளர் என்பது ஆணவத்தை, அதிகாரத்தை தூண்டி விடுகிறது. மற்றவரை கீழானவராக பார்க்கும் மனநிலையை தூண்டி விடுகிறது. பணியாளர் மனநிலை பாதுகாக்கும் மனநிலை உடையதாக இருக்க வேண்டும்.

நாமும் இறையாட்சி தோட்டத்தில் பணியாளர்களே. சரியான முறையில் பணி செய்தால், கடவுளின் இறையாட்சி என்னும் தோட்டத்தில் நாமும் உரிமை பெறுகிறோம். 

இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ்ந்து உரிமையை காப்போம்... கடவுளுக்குரியவர்களாய் மாறுவோம்...

கண்டுக் கொள்ளாமை ஒரு பாவச் செயல்


தவக்காலம் இரண்டாம் வாரம் 

20.03.2025 - வியாழக்கிழமை 

ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார் - நீதிமொழிகள் 28:27

நான் பாவமோ/குற்றமோ செய்யவில்லை என்போர் யாரேனும் இவ்வுலகில் உண்டா? நிச்சயம் இல்லை. சபை உரையாளர் 7:20 இவ்வாறு சொல்கிறது, "குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை". 

தவறுவது மனித இயல்பு தான். ஆனால் தவறை உணர்ந்து திருந்த முயல வேண்டும். 

பாவம் பல வகைகளில் செய்யப்படுகிறது. 1. ஒருவர் தனக்கு எதிராக தானே செய்யும் பாவம். 2. ஒருவர் பிறருக்கு/இயற்கைக்கு எதிராக செய்யும் பாவம். 3. ஒருவர் கடவுளுக்கு எதிராக செய்யும் பாவம்.

தனிப்பட்ட பாவம் கூட ஒருவகையில் மற்றவரை பாதிக்கும். உதாரணமாக, குடியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திருமணம் செய்கிறார் என்றால் அவரோடு இணைந்து அந்த துணைவியும் பாதிக்கப்படுவார். குடும்பம் முழுவதும் பாதிக்கப்படும்.

தனிப்பட்ட பாவம் சமூக பாவமாகவும் கருதப்படும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 16:19-31) ஏழை லாசரை கண்டுகொள்ளாத செல்வந்தரை பற்றிக் காண்கிறோம். செல்வந்தர் அந்த ஏழைக்கு எந்த தீங்கும் செய்யவில்லை, அதே வேளையில் எந்த நன்மையும் செய்யவில்லை. (யாக்கோபு 4:17 நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.)

கண்டுக் கொள்ளாமை ஒரு பாவச் செயல். இருப்பவருக்கு ஆயிரம் அள்ளிக் கொடுப்பதைவிட இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வதே உயர்ந்த செயல். 

இருக்கும் போது எதையும் செய்யவில்லை. எல்லாம் முடிந்த பின் உதவி கேட்டு நிற்கிறார் செல்வந்தர். மனமாற்றம் வாழும் போதே உருவாக வேண்டும். 

வாழும் போது யாரையும் கண்டுக் கொள்ளாமல், இறந்தபின் இரக்கத்திற்காக காத்திருப்பது எந்த வகையில் நியாயம்.

இருப்பது எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்க வேண்டாம். இயன்றதை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். 

எதையும் கொண்டு செல்ல முடியாது. சேர்த்து வைத்தவை எல்லாம் மண்ணோடு நின்று விடும். மாறாக நாம் செய்த நற்செயல்களே நமக்கு முன் சென்று நிற்கும்.

தேவையில் இருப்பவரைக் கண்டுக் கொள்வோம். பின்னாளில், நம் தேவையில் நாம் கண்டுக் கொள்ளப்படுவோம் 

பேசாமலே அதிகம் பேசப்படுபவர் புனித யோசேப்பு...


புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர் விழா 

19.03.2025 - புதன் கிழமை 

நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்; என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள் - தானியேல்: இணைப்புகள் 1:63

இவ்வுலகில் பேசாமல் இருந்து பலவற்றை சாதிக்கும் மனிதர்களும் பேசியே பலவற்றை கெடுக்கும் மனிதர்களும் உண்டு. மெளனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பார்கள். ஆனால் மௌனமாய் இருப்பவர்கள் சிந்திக்கிறார்கள் என்று அர்த்தமும் உண்டு.

உடனடி பதில், உடனடி செயல்பாடு எதற்கும் சரியான தீர்வாகாது. சற்று பொறுமையும் அதனோடு சிந்தனையும் இருக்க வேண்டும்.

அமைதியாய் இருப்பவர்கள் எந்த செயலையும் உன்னிப்பாக கவனிப்பார்கள், தேர்ந்து தெளிந்து செயல்படுவார்கள். 

அதிகம் பேசுபவர்கள் மற்றவர்களால் வெறுக்கப்படுவார்கள். அதிகம் பேசுபவர்கள் மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள், மற்றவர்களை பேசவிடாமல் தடுக்கிறார்கள். 

அதிகம் பேசி பேசி என்ன சாதித்து விட்டோம்? வெற்று வார்த்தைகள் வேரற்ற மரங்களை போன்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட (லூக்கா 2:41-52) யோசேப்பும் அன்னை மரியாவும் சிறுவன் இயேசுவை மிகுந்த கவலையோடு தேடுகிறார்கள். இயேசுவை கண்டதும் மரியா பேசுகிறார், "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே”.

யோசேப்பு ஏதும் பேசியதாக தெரியவில்லை. ஒருவேளை விவிலிய ஆசிரியர்கள் அவர் பேசியதை பதிவு செய்யாமல் விட்டு விட்டார்களோ!

அப்படி பார்த்தாலும் மத்தேயு நற்செய்தி 1: 19 ஐ பொறுத்தவரையில், "அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்". அவர் நினைத்திருந்தால் மரியா செய்தது தவறு என்று அவரிடமே கேட்டிருக்கலாம்.

ஆனால் அங்கும் அமைதி காக்கிறார் யோசேப்பு. தவறுகளை கண்டுக் கொள்ள கூடாது என்பது அல்ல, தவறு செய்தவர்களை கேட்பதற்கு நான் ஒன்றும் இல்லை என்பதாக கூட இருக்கலாம்.

இப்புனிதரின் வாழ்வு நமக்கு முன்மாதிரியே.

பேசி பேசி மற்றவர்கள் வாழ்வை அழித்ததை நிறுத்துவோம்.

எதுவும் செய்யாமல் எல்லாம் செய்தது போல காட்டிக் கொள்ளும் மனநிலையை அகற்றுவோம்.

ஆணவத்தை அகற்றுவோம்.

நேர்மையை ஆடையாக அணிவோம். தாழ்ச்சியோடு வாழ்வோம்.

பிறரை குற்றவாளி என்று தீர்ப்பிடும் முன் நம் உள்ளத்தை பரிசோதித்து பார்ப்போம்.

பேச வேண்டிய இடத்தில் மட்டும் பேசுவோம்.

நிறை குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக் கொள்வோம்.

நல்லவற்றின் படி நட...


தவக்காலம் இரண்டாம் வாரம்

18.03.2025 - செவ்வாய்க் கிழமை 

"மகனே, நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே. நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து, உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால், நீ பெரும். செல்வனாவாய்.” - தோபித்து 4:21

நல்லது எதுவானாலும் செய், தீயது எதுவானாலும் விட்டு விடு. இயற்கையின் படைப்பில் அனைத்தும்/அனைவரும் நல்லவை/நல்லவர் தான். செயற்கையான வாழ்க்கை தான் நம்மை மாற்றி விடுகிறது. 

எப்போது செயற்கை உள்ளே வருகிறது? சிந்தித்து செயல்படாத போது, அடுத்தவர் சொல்வதை அப்படியே நம்பும் போது, புத்தியை பயன்படுத்தாத போது செயற்கை என்னும் அழிவு உள்ளே வருகிறது.

பெரியார் ஈ.வெ.ரா. சொல்வார், "யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே".

சிந்தித்து செயல்படாத மனிதம் சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து அவன் பின்னால் ஓடுகிறது. அவன் சொல்வதை கொள்கை என்று ஏற்றுக் கொள்கிறது. 

தலைவன் கட் அவுட் -க்கு பால் அபிஷேகம், பண மாலை, ஆடம்பர செலவு இவை தான் சமூக சீரழிவுகள்.

இன்று தெருவுக்கொரு சபை கூட்டம் உள்ளது. தன்னிலே (கத்தோலிக்க மறையிலே) நிறைவு காணாதவர்கள் நாளுக்கொரு சபையை தேடி ஓடுகிறார்கள். இறைவார்த்தையை வீடுகளில் வாசிக்க சோம்பல் கொள்பவர்கள், சபைக்கு சென்றதும் அந்நிய பாசை பேச தொடங்குகிறார்கள். உணர்ச்சி வயப்பட வைத்தலினால் இன்று பல சபைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. (பரவச நிலையிலே மனிதர்கள் வைத்துக் கொள்ளப்படுகிறார்கள்).

சிந்திக்காத மனிதம் போலியான தலைமைத்துவத்தை ஆன்மீகத்திலும் அரசியலிலும் சமூகத்திலும் தேடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23: 1-12) இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். 

யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள நல்ல கருத்துக்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும், சொன்னவரை அல்ல.

இங்கு பல வேளைகளில் நாம் சொல்லப்பட்டதை விட்டுவிடுகிறோம். யார் சொன்னாரோ அவரை தூக்கி கொண்டாட ஆரம்பித்து விடுகிறோம்.

தனிமனித வழிபாடு இங்கு பரவிக் கொண்டிருக்கிறது. கடவுளை மறந்து கடவுளை போதிப்பவரை கடவுளாக்கி வழிபட ஆரம்பிக்கிறோம்.

அடிமைத்தனம் அறிவை பயன்படுத்தாத வரை நீங்காது. மயக்கம் தெளிய வேண்டும். யார் சரியானவர்கள், எது சரியானது என்பதை புரிந்துக் கொள்ள முற்பட வேண்டும்.

சரியானது எங்கு சொல்லப்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம். சரியான அணுகு முறையை பின்பற்றுவோம்.

இரக்கத்தோடு வாழ...

தவக்காலம் இரண்டாம் வாரம்

17.03.2025 - திங்கட்கிழமை 

ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்? - மீக்கா 6:8

இன்று மனிதர்கள் இரக்கம் காட்ட தயங்குகிறார்கள். யாருக்கு இரக்கம் காட்டுவது? யார் மேல் பரிவு கொள்வது? யார் இரக்கத்தை பெற தகுதியுடையவர் என்பது மிக பெரிய கேள்வியாக இருக்கிறது. 

இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்பு தான் கிடைக்கும் என்பது முற்றிலும் உண்மை. தன் மகனோ மகளோ தவறு செய்தாலும் கூட தாயின்/தந்தையின் இரக்கம் அனைத்தையும் மன்னித்து விடும். இரக்கம் தான் ஒவ்வொரு தாயின்/தந்தையின் இயக்கம். 

இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கதோடு இருப்போம் என்பார் புனித அன்னை தெரசா.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6: 36-38) "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" என்கிறார் இயேசு.

இரக்கக் குணத்தோடு செய்ய வேண்டிய செயல்கள்

1. தீர்ப்பிடாதே

2. கண்டனம் செய்யாதே

3.மன்னியுங்கள்

4. கொடுங்கள்

யாரும் யாரையும் தீர்ப்பிடாமல் இங்கு வாழ்வதில்லை. தன்னை நியாப்படுத்தா இங்கு அடுத்தவரை குறை சொல்ல வேண்டி இருக்கிறது 

இங்கு நிரபராதியை நிற்க வைத்து கேள்வி கேட்டு குற்றவாளி என்ற பலியை சுமத்தி விடுகிறோம்

சிறிய தவறு செய்தவர்களை கூட நாம் மன்னிக்க தயாராக இல்லை. என்ன பிரச்சினை நடந்தது என்பது கூட மறந்திருக்கும், ஆனால் பகைமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்

இருப்பது போதாது என்று அடுத்தவரிடம் இருப்பதையும் பிடுங்கிக் கொள்ள எண்ணுகிறோம்.

இப்படி எல்லாவற்றையும் செய்து விட்டு எப்படி கடவுள் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்க முடியும். 

தவக்கால பாடல் வரிகள் - குற்றவாளி கூண்டில் வாழும் மனித இதயமே தீர்ப்பு சொல்லும் அருகதை உனக்கு உள்ளதா? 

இங்கு யாரும் யாரையும் விட தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல... யாரையும் தீர்ப்பிட யாருக்கும் அருகதை இல்லை. (தவறை சுட்டிக் காட்ட உரிமை உண்டு. குற்றவாளியாக தீர்ப்பிடுவது வேறு, குற்றத்தை உணர வைப்பது வேறு).

அற்ப பண ஆசைக்காக, தன் இன்பத்திற்காக, தன் வாழ்வுக்காக, தற்பெருமைக்காக இன்று நாம் பலரை தவறாக தீர்ப்பிட்டு கொண்டிருக்கிறோம்.

நாம் எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும்.

வெளித்தோற்றமல்ல உட்புற மாற்றமே தேவை...


தவக்காலம் இரண்டாம் வாரம்

16.03.2025 - ஞாயிற்றுக் கிழமை 

இரண்டு வகையான தோற்றம், 1. வெளித்தோற்றம் 2. உட்புற தோற்றம்

எளிதாக அழகான தோற்றத்தை தருவது வெளித்தோற்றம் தான். ஏமாற்றுவதும் இந்த வெளித்தோற்றம் தான். 

உள்ளத்தில் உள்ளது தான் உண்மை. உள்ளத்தின் நிறைவை வாய் பேசும் என்பார்கள். ஆனால் அந்த உள்ளத்தில் உள்ளதையும் வாய் மாற்றி பேசிவிடும். 

இன்று யார் உண்மை பேசுகிறார், யார் நல்லவர், யார் நேர்மையாளர், யார் பொதுநலவாதி, யார் ஆள்பார்த்து செயல்படாதவர் என்பதை புரிந்துக் கொள்ளவே முடியாது.

எல்லாரும் ஏமாற்றுபவர்கள், எல்லோரும் நடிப்பவர்கள், எல்லோரும் தந்திரவாதிகள். எல்லா மனிதர்களும் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பார்கள், காரியம் முடிந்ததும் கழுத்தை நெரிப்பார்கள்.

வெளித்தோற்றத்தை நம்பி ஏமாந்து போனவர்கள் ஏராளம். உள்ளத்தில் ஒன்று வைத்து வெளியில் ஒன்றை பேசி நடிப்பவர்கள் யார் என்பதை நம்மால் அடையாளம் காண முடிவதில்லை என்பதால் ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9: 28b-36) இயேசுவின் உரு மாற்றத்தை/தோற்ற மாற்றத்தை காண்கின்றோம். இயேசுவின் மனித இயல்பு விலகி இறை இயல்பு இங்கு வெளிப்படுகிறது.

இயேசு இறை இயல்பிலும் மனித இயல்பிலும் ஒரே மாதிரியானவர். இங்கு போலியான தோற்றத்திற்கு இடம் என்பதே இல்லை.

தோற்ற மாற்றத்தின் சிறப்பு அம்சங்கள் -

அவரது முகத்தோற்றம் மாறியது; 

அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. 

மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். 

மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. 

அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.

இயேசுவின் உட்புறமும் வெளிபுறமும் ஒன்றே. இங்கு வேற்றுமைக்கு இடம் இல்லை.

இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்க நூல் 15: 5-12, 17-18, 21b) கடவுள் மாறாதவர் என்பது வெளிப்படுகிறது. ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழி மரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றியவர். வாக்கு மாறாதவர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலிப்பியர் 3: 17- 4: 1) "நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்" என்கிறார் திருத்தூதர் பவுல். நம் உடலை உருமாற்றுவார் என்ற நம்பிக்கை செய்தியை தருகிறார். 

மண்ணுலக காரியங்களை நாடுவோர் அடைவது மானக்கேடு, அழிவு.

மாற்றங்கள் புதுவாழ்வு நோக்கி நகர வேண்டும். வெளியில் ஒரு மாதிரியும் உள்ளே ஒரு மாதிரியுமாக நடிக்க கூடாது.

போலித்தனம் ஒருநாள் வெளிப்படும். மாற்றம் காணாத வாழ்வு ஒரு நாள் பலத்த அடியை பெறும். உட்புறம் தூய்மை அடையட்டும். உள்ளம் நிறைஅமைதி பெறட்டும்.

அன்பு வித்தியாசமானது...

தவக்காலம் முதல் வாரம்

15.03.2025 - சனிக் கிழமை 

இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது - 1 கொரிந்தியர் 13:8

ஒவ்வொரு மனிதரின் அன்பும் வித்தியாசமானது. சிலர் சிலரை பலன் எதிர்பார்த்து அன்பு செய்வார்கள், அடுத்தவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிலர் சிலவற்றை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் (அன்பளிப்பு, உடனிருப்பு, பணம்...), சிலர் தொலைவில் இருந்து அன்பு செய்வர், சிலர் கடந்த காலத்தின் ஏமாற்றங்களை/பிரிவை அன்பு செய்வர். ஒருசிலரின் அன்பு தான் சம நேர்க்கோட்டில் பயணிப்பது. 

ஒரு சிலர் பேசி பேசி அன்பை காட்டிக் கொண்டு இருப்பார்கள், ஒரு சிலர் அமைதியின் வழியாக அன்பை எடுத்துக் காட்டுவர், வெகு சிலர் நேர்மறை எண்ணங்களால் அன்பை பரப்புவர்.

இந்த உலகில் மனிதர்களின் அன்பு எதிர்ப்பார்ப்பை அடிப்படையாக கொண்டது. எந்தவொரு மனிதரும் நான் எதையும் எதிர்பார்க்காமல் இவரை அன்பு செய்கிறேன் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரை நமக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது என்றாலே அவரின் அன்பை/உடனிருப்பை எதிர்பார்க்கிறோம் என்று தான் அர்த்தம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:43-48) பகைவரிடமும் அன்பாய் இருக்க கேட்கிறார் இயேசு. அன்பு கூறுபவர்களிடமே திரும்ப அன்பு செலுத்துவது கடினம் என்கிற போது எப்படி எதிரிகளை அன்பு செய்வது. 

இயேசு ஒரு மாற்று சிந்தனையாளர். நம் எண்ணங்கள் அவருடைய எண்ணங்கள் அல்ல. எது முடியாதோ அதை போதிக்கவில்லை, எதை அவர் தன்னுடைய வாழ்வில் போதித்தாரோ அதை அவர் வாழ்ந்து காட்டினார்.

அன்பின் உச்சம் இழப்பில், தன்னை தருதலில் முழுமை அடைகிறது. 

நீ என்னை பிரிந்தால் உயிரிழப்பேன் என்பது அன்பு அல்ல, நீ எனக்கு இல்லையென்றால் உன் உயிரை எடுத்து விடுவேன் என்பதும் அன்பல்ல.

தன்னை முழுமையாக தருதலே அன்பு.

இறைவன் நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவனை உதித்தெழ செய்வது போல நம் அன்பு நம்மை அன்பு செய்வோர் மேலும், நம்மை எதிர்ப்போர், வெறுப்போர் மேலும் இருக்கட்டும்.

அன்பிற்கு கெட்டவரை நல்லவராக மாற்றும் ஆற்றல் உண்டு. நம் அன்பு மற்ற நபரின் அன்பிலிருந்து மாறுபட்டது என்பதை உணர்வோம். நம் அன்பு நம்மை சாராதவரின் இதயத்தையும் தொடட்டும்...

சினம் கொள்ளாதே!

தவக்காலம் முதல் வாரம் 

14.03.2025 - வெள்ளிக் கிழமை 

வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும் - திருப்பாடல்கள் 37:8

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை நெறிமுறை உண்டு. அவரவருக்கென்று தனிப்பட்ட பாதை உண்டு. என் விருப்பப்படி என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எனக்கு முழுசுதந்திரம் உண்டு. ஆனால் எனது வாழ்க்கை நெறி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது. 

இங்கு நெறிபிறழ்ந்து வாழ்வோரும் உண்டு (எப்படியும் வாழலாம்), நெறிமுறைகளோடு வாழ்வோரும் உண்டு (சட்ட திட்டத்திற்கு உட்பட்டு). தாங்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் மற்றவர்கள் அதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் (அதிகாரம் செலுத்துதல்) என்று வலியுறுத்துவோரும் உண்டு. 

இவ்வுலக தலைவர்கள் காட்டுகிற நெறிமுறைகள் எல்லாம், ஒருவரை உயர்த்தி பிடிக்கவும் மற்றொருவரை அடிமைப்படுத்தவும் பயன்படுகிறதே ஒழிய, சமத்துவ சமுதாயம் படைக்க உதவுவதில்லை. இத்தகைய நெறி நமக்கு தேவையில்லை. கிறித்தவர்கள் கிறிஸ்துவின் நெறியை பின்பற்ற வேண்டும்.

இறை நெறியை செயல்களிலும் சொல்லிலும் தவறாமல் இருக்க (முட்டாளே, அறிவிலியே என்று சொல்லாதே), கடவுளோடு மட்டுமல்ல சக மனிதனோடும் நல்லுறவு கொள்ள (ஒப்புரவு செய்து கொள்ள) அழைப்பதே இயேசுவின் புதிய நெறி.

இன்றைய நற்செய்தி வாசகம் (மத்தேயு 5: 20-26) அதற்கான அழைப்பை கொடுக்கிறது.

வார்த்தைகளால் ஒருவரை திட்ட ஆரம்பிப்பது தான், செயல்வழி கொலைக்கு ஒருவரை இழுத்து செல்கிறது. பேச்சு நீண்டு கொண்டே செல்வது கைகலப்புக்கு வழிவகுக்கும். (பேச்சில் ஆரம்பிப்பது பிரச்சனையில் முடிகிறது). எனவே கொலை செய்வற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சொற்களை பயன்படுத்துவதே பாவம் என்கிறார் இயேசு.

அடக்குமுறைகளை வழிவகுக்கும் அர்த்தமற்ற நெறிமுறைகளை (சடங்குகளை, சட்டங்களை) விலக்கி, இயேசுவின் புதிய நெறியை கருத்தில் கொள்வோம். புதிய நெறியில் மனிதம் தழைக்கட்டும்.

சினம் பொழுது சாய்வதற்குள் குறையட்டும். சினம் பிறரை அழிப்பதை விட தன்னை தான் முழுமையாக அழிக்கும். சினம் பலரை அழித்திருக்கிறது.

சமரசம், மன்னிப்பு நம்மிடம் இருந்தால் நம் வாழ்வு நலமாகும்.

விரும்புகிறவற்றை பிறருக்கு செய்யுங்கள்/கொடுங்கள்...


தவக்காலம் முதல் வாரம் 

13.03.2025 - வியாழக்கிழமை 

நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள் - எசாயா 1:17

எல்லாரிடமும் கொடுக்கும் மனம் இருப்பதில்லை. கொடுக்கும் மனம் உடையோரிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இருப்பதில்லை.

கொடுத்தால் கிடைக்கும் என்றால் மட்டுமே பல காரியங்கள் இங்கு நடக்கிறது. பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும்/சீட்டு கிடைக்கும். சொந்த தாய் தந்தைக்கே கடைசி காலங்களில் உணவு, உறைவிடம் கொடுப்பாரில்லை. சிறுவயது முதலே கொடுத்து வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால், எதையும் செய்யாதவர்களுக்கு யார் என்ன தான் செய்வார்கள்.

நான் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போல, மற்றவர்களும் நன்றாய் இருக்க வேண்டும் என்று விரும்புவதே உயர்ந்த உள்ளம். விரும்புவதோடு நின்றுவிடாமல் நல்லது செய்ய வேண்டும்.

நீதிமொழிகள் 3:27 இவ்வாறு சொல்கிறது, "உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே."

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7: 7-12) ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்கிறார் இயேசு.

பிறர் நமக்கு எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும். அன்பை எதிர்பார்த்தால் அன்பை பகிர வேண்டும், உதவியை எதிர்பார்த்தால் தேவையில் இருப்போருக்கு உதவ வேண்டும், புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால் நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் செய்வது எல்லாம் உடனடி பலனை ஒருவேளை கொடுக்காமல் போகலாம். ஆனால் நாம் விதைத்ததற்கான பலன் நம்மை நிச்சயம் தேடி வரும்.

மரத்தை நட்டவர் அதன் பலனை அனுபவிக்காமல் திரும்பி போக மாட்டார் என்பது போல நல்லது செய்தவர்/தீமை செய்தவர் அதன் கைம்மாறை திரும்ப பெறுவார்.

நான் மற்றவரை மாற்ற முடியாது, நான் என்னை மாற்றிக் கொள்ளலாம். என் அனுமதியின்றி என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. மற்றவர் என் வாழ்வில் நுழைய நான் தான் அனுமதி சீட்டுக் கொடுக்க வேண்டும்.

நல்லதை செய்து நல்லதை பெறுவோம்...

கடவுளை மாற்றும் நம் மாற்றங்கள்...


தவக்காலம் முதல் வாரம் 

12.03.2025 - புதன் கிழமை 

பாவிகளின் செயல்களைக் கண்டு வியப்பு அடையாதே; ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்; உன் உழைப்பில் நிலைத்திரு. நொடிப்பொழுதில் ஏழையரைத் திடீரென்று செல்வராய் மாற்றுவது ஆண்டவரின் பார்வையில் எளிதானது. - சீராக்கின் ஞானம் 11:21

மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை என்று சொல்வார்கள். மாற்ற நினைத்தால் எதையும் மாற்றலாம். தொடர்ந்து போராடி போராடி மாற்ற முடியவில்லை என்றாலும் கூட நம் எண்ணங்களை/இலக்கை மாற்றிக் கொள்ளலாம்.

சில மாற்றங்கள் தற்காலிகமானது, சில மாற்றம் நிரந்தரமானது. சில மாற்றம் உடனடியாக நடக்கும், சில மாற்றங்கள் ஏற்பட காலம் எடுக்கும்...

சிலர் சிலரை சில்லறை கொடுத்து மாற்ற எண்ணுகிறார்கள், சிலர் பலரை நல்ல எண்ணங்களால் மாற்ற எண்ணுகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11: 29-32) அடையாளம் கேட்டு இயேசு சோதிக்கப்படுகிறார். மாற்றம் காண விரும்பாத அக்கூட்டம் இயேசுவிடம் அடையாளம் கேட்கிறது.

யோனாவின் அடையாளத்தை தவிர வேறு அடையாளம் தரப்படாது என்கிறார் இயேசு.

அது என்ன யோனாவின் அடையாளம், (மத்தேயு நற்செய்தி 12:40) "யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்".

தென்னாட்டு அரசி சாலமோனின் ஞானத்தை கேட்க கடைக் கோடியில் இருந்து வந்தார்.

யோனாவின் வார்த்தையை கேட்டு நினிவே மக்கள் மனம் மாறினார்கள்.

சாலமோன், யோனா ஆகியோரை விட மானிட மகன் பெரியவர் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை.

இன்றைய முதல் வாசகத்தில் (யோனா 3:1-10) கொடுக்கப்பட்ட ஒரு அருமையான வசனம், "...ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.” (யோனா 3:8,9)

தனிப்பட்ட மனிதரின் மாற்றம் சமூகத்தை மாற்றுகிறது. அந்த மாற்றத்தினால் அழிவு தடைப்படுகிறது. 

முதல் வாசகத்தில் இறுதி வசனம், "...அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர்(கடவுள்) கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை." (யோனா 3:10)

மாற்றம் சாத்தியமே. முடியாது என்று முடங்கி படுத்தால் எதுவும் முடியாது தான். முடியும் என்று முன்னோக்கி நகர்ந்தால் முழு மனித விடுதலை சாத்தியமே.

நம்மில் மாற்றம் உருவானால் போதும். அது மெல்ல மெல்ல சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும்...

மன்னிப்பா??? மன்றாட்டா???

தவக்காலம் முதல் வாரம்

11.03.2025 - செவ்வாய்க் கிழமை 

மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்? - சீராக்கின் ஞானம் 28:4

செபமும் செயலும் இணைந்து செல்ல வேண்டும். வேண்டுதல் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இறைவன் விருப்பப்படி வாழ்தல் தான் இங்கு முக்கியம். கரம் கூப்பி செபிக்கும் கைகள் மற்றவர்களின் கண்ணீரை துடைக்கவும் முன் வர வேண்டும்.

மன்னிக்காத உதடுகள் கடவுள் முன்னிலையில் அதிக நேரம் மன்றாடுகிறது. மன்னிப்பது ஒருவகையான உளவியல் மருந்து. இன்று பலர் உடல் வலி, இதய வலி என்று பல இடங்கள் ஏறி இறங்குகிறார்கள். எல்லா வலிகளும் தீர ஒரே வழி மன்னிப்பு தான்.

இயேசுவின் புதுமைகள் பல மன்னிப்பை அடிப்படையாக கொண்டது. நோய்களை குணமாக்கும் முன் பலரை அவர் மன்னித்தார். மன்னிப்பின் வழியாக புது வாழ்வு கொடுத்தார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:7-15) இயேசு இறைவேண்டல் செய்ய கற்றுக் கொடுக்கிறார். ஒருவர் மற்றவரை மன்னிக்கவும் அதன் வழியாக இறைத் தந்தையின் மன்னிப்பை பெற்றுக் கொள்ளவும் அழைக்கிறார் இயேசு.

இறைவேண்டலில் பல பரிமாணங்கள் இருக்கின்றன.

1. இறை புகழ்ச்சி

2. மன்னிப்பு வேண்டல் 

3. நன்றி கூறல் 

4. பரிந்துரைத்து மன்றாடல் 

5. விண்ணப்பம்

இதில் நாம் செய்யும் இறைவேண்டல் என்ன என்பதை நாம் தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இறைவேண்டலின் வகைகள்

1. தனியாக

2. குடும்பமாக

3. குழுவாக

4. பங்குத் தல திருஅவையாக

எப்படி இறைவேண்டல்

1. மகிழ்ச்சியோடு

2. கண்ணீர் சிந்தி

3. கரம் உயர்த்தி

4. முழந்தாள் படியிட்டு

5. நோன்பு இருந்து

6. சான்று வாழ்வு வாழ்ந்து

"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்" என்பது வேண்டல் மட்டுமல்ல, அது வாழ்க்கை முறை.

இறைவனிடமிருந்து பெற வேண்டும் என்றால் நம்மிடம் இருப்பதை (மன்னிப்பு, இரக்கம், அன்பு, மகிழ்ச்சி, ஆறுதல்) கொடுக்க வேண்டும்.

மன்னிக்கும் உள்ளம் கடவுளின் மன்னிப்பை எந்த வேளையிலும் பெறும். மன்னிக்க மறுக்கும் உள்ளம் மருந்துக்கு அடி பணியும். மன்னிக்காத மனம் தனக்கு தானே நோயை வருவித்துக் கொள்ளும்.

நாம் மனதார மற்றவர் செய்த குற்றங்களை மன்னித்தால் நாம் நிலைவாழ்வுக்கு தகுதியுடையவர்கள்...

எதிர்பாராத தீர்ப்பு...


தவக்காலம் முதல் ஞாயிறு 

10.03.2025 - திங்கட்கிழமை 

"உம் தீர்ப்புகள் மேன்மையானவை, விளக்கமுடியாதவை. எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத மனிதர்கள் நெறிதவறினார்கள்" - சாலமோனின் ஞானம் 17:1

'கடவுள் நம்பிக்கை உண்டு' என்று சொல்லக் கூடியவருக்கும், 'கடவுளே இல்லை' என்று சொல்லக் கூடியவருக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர் கடவுளை மறைமுகமாக இழிவுப்படுத்துவார், மனிதரை நேரடியாக இழிவுப்படுத்துவார், கடவுள் இல்லை என்பவர் கடவுளை மற மனிதனை நினை என்பார்.

கடவுளை வாயார அறிக்கையிடும் நாவு கடவுளை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை, கடவுளை பிரதிபலிப்பதில்லை. கடவுளை பின்பற்றினால் ஆலயத்தில் ஒரு மாதிரியும் வெளியில் ஒரு மாதிரியும் நடந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

இங்கு பல மனிதர்கள் கடவுளை வழிபாட்டு பொருளாக பார்க்கிறார்கள், கடவுள் என்றும் வாழ்கிறார் என்பதை மறந்து விடுகிறார்கள். இத்தகைய நம்பிக்கை பயனற்றதே அல்லது போலியானது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 25:31-46) வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர் என்ற செய்தி கொடுக்கப்படுகிறது.

எதற்காக இந்த கூடுகை? நல்லவர் கெட்டவர் பிரிக்கப்பட, நம்பிக்கையை வாழ்ந்து காட்டாதவர் முடிவைக் கண்டுக் கொள்ள, கடவுளின் சாயலும் உருவும் மற்ற மனிதரில் இருக்கிறது என்பதை கண்டுக் கொள்ளாத மனிதர்களுக்கு பாடம் புகட்டவே இந்த கூடுகை.

ஆண்டவரே நாங்கள் தினசரி ஆலயத்திற்கு வந்தோம், வழிபாடுகளில் ஆர்வமுடன் பங்கெடுத்தோம் என்ற பதில் மட்டும் கடவுளுக்கு திருப்தி அளிக்காது.

தேவையில் இருப்பவரை கண்டுகொள்ளாத ஆன்மீக வாழ்வு போலியான வாழ்வு.

நான் உனக்கு செய்தது போல நீ உன் உடன் பணியாளருக்கு செய்திருக்க வேண்டும் அல்லவா? என்ற கேள்வி முன்வைக்கப்படும்.

சரியான பதிலை நம் செயல்பாடுகளால் விளக்கி கூற இயலவில்லை எனில் நாம் எதிர்பாராத தீர்ப்பு தான் கிடைக்கும்.

கடவுள் நம்பிக்கை உண்டு என்றால் அதை வாழ்ந்துக் காட்ட வேண்டும். மற்றவர் வாழ்வு பெற உதவ வேண்டும். 

யாக்கோபு எழுதிய திருமுகம் 2:13 இவ்வாறு சொல்கிறது, "இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்."

யாரையும் சோதிக்க வேண்டாம்...


தவக்காலம் முதல் ஞாயிறு 

09.03.2025 - ஞாயிற்றுக் கிழமை 

எல்லா வழிகளிலும் சோதனை வரும். சோதனையை எதிர்த்து நின்றவர்கள் வெகு சிலர், சோதனையை கண்டு துவண்டு போனவர்கள் அதிகம். 

எப்படி சோதனை வருகிறது? அல்லது யாரிடமிருந்து சோதனை வருகிறது?

1. நம்மாலயே சோதனை வருகிறது

யாக்கோபு எழுதிய திருமுகம் 1:14

ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது.

2. மற்ற மனிதர்களிடமிருந்து வருகிறது

சபை உரையாளர் 8:9

உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது.

3. நம்பிக்கை ஆய்ந்து அறியப்பட 

நம் நம்பிக்கை உறுதியானதா? போலியானதா? என்பதை அறிய நாம் சோதிக்கப்படுகிறோம்.

சோதிக்கிற மனிதர்கள் சோதனைகளுக்கு மத்தியிலும் சாதிக்கிற மனிதர்கள் என்று மனிதர்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சோதிக்கப்படுகிறார்.

கற்களை அப்பமாக மாற்ற

நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்க

மேலே இருந்து குதிக்க சொல்கிறது சாத்தான். 

நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது சாத்தான்.

சாத்தனுக்கும் விவிலியம் தெரியும்... இதை செய்யாதே இதை செய் என்று யார் சொன்னாலும் அதில் சொல்லப்பட்டதையும் சொன்னவரையும் ஆய்ந்து பார்த்து உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சோதிக்க பலர் தயாராக இருக்கிறார்கள். சோதனையில் நாம் விழுந்தாலும் எழுந்து வர வேண்டும்.

நா(ம்)ன் ஒருவகையில் பாவி தான்...


திருநீற்றுப் வெள்ளிக்கு பின் சனி

08.03.2025 - சனிக் கிழமை 

"ஆனால், பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது" 1 யோவான் 1:8

யார் இந்த சமூகத்தில் நான் ஒரு தவறு கூட செய்யவில்லை என்று சொல்ல முடியும். தவறு செய்து மாட்டிக் கொண்டவர்கள், தவறு செய்து இன்னும் மாட்டிக் கொள்ளாதவர்கள், நான் செய்தது தவறு தான் அதற்கு என்ன? என்று கேட்பவர்கள், தவறை ஏற்றுக் கொள்ளாதவர்கள்... அவ்வளவு தான் வித்தியாசம்.

யோக்கியன் என்று ஒரு நபரையும் சுட்டிக் காட்ட முடியாது. இங்கு பல நபர்கள் அடுத்தவனை அயோக்கியன் என்று சொல்லி தங்களை யோக்கியர்களாக காட்டிக் கொள்கிறார்கள். 

சில அதிமேதாவிகள் பணம் கொடுத்து சமூகத்தில் உயர் இடத்தை பெற்று விடுகிறார்கள். அதே பணத்தால் மற்றவர்களை குற்றவாளிகளாகவும் மாற்றி விடுகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5: 27-32) பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர். 

பரிசேயர்களின் எண்ணம் நிச்சயம் இதுவாக தான் இருந்திருக்கும். நாங்கள் தூயவர்கள், நாங்கள் நேர்மையாளர்கள், நாங்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள்...

கடவுள் நெருக்கம் என்பது கடவுளின் பிரதிபலிப்பாக இருப்பதன் வழியாகவே சாத்தியம். 

நான் யார் தெரியுமா? என் பின்புலம் தெரியுமா? எங்க அந்தஸ்து தெரியுமா? என்று இந்த உலகில் பெருமிதம் கொள்ளலாம்... அவ்வுலகில் நம் செயல்கள் திரையிடப்பட்டு காட்டப்படும்.

நான் தூயவன் என்பது என் செயலிலும் சொல்லிலும் வெளிபடட்டும்...

வெண்ணிற ஆடை அணிந்தால் மட்டும் போதாது, அதில் படும் கறைகளை நீக்க முயல வேண்டும்...

நோன்பு செயல்கள் எங்கே!

திருநீற்றுப் வியாழனுக்கு பின் வெள்ளி

07.03.2025 - வெள்ளிக் கிழமை 

"நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்" - எசாயா 58:3

நோன்பின் அர்த்தம் என்ன? விரதம் இருத்தல், நமக்கு பிடித்தவற்றை விலக்கி இருத்தல், தியாகம் செய்தல், பற்றிக் கொள்ளாமை... இது உணவுக்கு மட்டும் பொருந்தாது, மாறாக நம்மை முடக்குகின்ற, தடுக்கின்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

அது ஊடக நோன்பாக (அலைபேசி அதிக நேரம் உபயோகித்தல் தவிர்ப்பு) இருக்கலாம், சொல் நோன்பாக (தவறான/காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்த்தல்) இருக்கலாம், உணர்வு நோன்பாக (இச்சைகளை அடக்குதல்) கூட இருக்கலாம்.

செய்பவற்றை செய்யாமல் விட்டு விடுவது மட்டும் நோன்பல்ல மாறாக, செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்வதும் நோன்பாக பார்க்கப்படும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9: 14-15) யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். 

உணவு நோன்பு/ உண்ணா நோன்பு பற்றி பேசப்படுகிறது. அந்த உண்ணா நோன்பு, இயேசுவின் பார்வையில் அப்போது தேவையற்றதாக கருதப்பட்டது. உண்ணா நோன்பு துக்கத்தை வெளிப்படுத்துவதாக இயேசு சொல்கிறார். எனவே இப்போது அவர்களுக்கு அது தேவையற்றது என்கிறார்.

தேவையான நேரத்தில் சரியானதை செய்ய வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.

இங்கு நாம் உண்ணா நோன்பின் வழியாக தவக்காலத்தை கடத்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதையும் கடந்த நோன்பு இன்றைய முதல் வாசகத்தில் (58: 1-9) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

எசாயா 58:6

கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

எசாயா 58:7

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

தன்னை ஒடுக்கிக் கொள்வது மட்டும் நோன்பாகாது. ஒடுக்கப்பட்டோரை மீட்பது தான் இறைவனின் பார்வையில் உன்னத நோன்பு.

அடிமைத் தனத்திலிருந்து விடுதலை, அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் இவை தான் உயர்ந்த நோன்புச் செயல்கள்.

நாம் வாடிக்கையாக செய்வதை தவிர்த்து, பிறர் வாழ்வுக்கு உகந்த நற்செயல்களை நிறைவேற்ற முன்வருவோம்.

சிலுவையை தூக்கிக் கொள்...


திருநீற்றுப் புதனுக்குப் பின் வியாழன்

06.03.2025 - வியாழக் கிழமை 

"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" - 1 கொரிந்தியர் 1:18

சிலுவை இல்லாத வாழ்வு இல்லை. இன்று மனிதர்கள் கடவுளை திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கடவுள் தான் என் வாழ்க்கையில் இந்த சிலுவையை ஏற்றி வைத்தார். கடவுள் தான் என்னை சோதிக்கிறார்.

தன் வாழ்க்கையில் தானே தேடிக் கொண்ட பிரச்சினைகளுக்கு நாம் இயல்பாக மற்றொருவரை குறை சொல்வது உண்டு. குறை சொல்லாத மனிதர் இங்கு இல்லை. குறைச் சொல்லுக்கு ஆளாகாத மனிதரும் இங்கு இல்லை. 

யாரும் "கிறிஸ்துவை பின்பற்று" என்று நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நமக்கு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது, ஏற்றுக் கொண்டோம். வளர்ந்த பிறகும் நாம் பெற்றுக் கொண்ட அருள் வாழ்வில் நிலைத்து நிற்கிறோம்.

இதில் யாரையும் குறை சொல்வதற்கு இடமே இல்லை. கிறிஸ்துவை பின்பற்றுவதும் பின்பற்றாமல் விட்டு விடுவதும் நம் உரிமை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:22-25) "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்கிறார் இயேசு.

இங்கு அவர் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, விரும்புகிறவர் வரட்டும் என்கிறார். அதுவும் தம் சிலுவையை தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றட்டும் என்கிறார். 

பின்பற்றினால் அதற்கான கைம்மாறு உண்டு. இந்த உலகில் நாம் உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கிறோம். சில உயிர்களை எடுத்தாவது நாம் உயிர் பிழைத்துக் கொள்ள எண்ணுகிறோம்.

பிறரை அழித்து தான் உயிர் வாழ வேண்டும் என்பது இல்லை. நம் தீய குணங்களை நாம் அழித்தாலே நீடு வாழலாம்.

நம் சிலுவை நம்மை அழுத்தும், தவறான பாதைக்கு செல்ல விடாது. தவறின் பக்கம் துணை நிற்காது. 

மற்றவர்களுக்கு பாரமாய் இராது. மற்றவர்களின் வளர்ச்சி கண்டு இறுமாப்பு அடையாது.

மாட்டிற்கு கடிவாளம் போல நமக்கு முன் நம் சொந்த சிலுவை இருக்கிறது. சிலுவையை தோளில் போட்டுக் கொள்வோம். மீட்பை பெற்றுக் கொள்வோம்...

வாழ்வை இழந்த பின் வருந்தி பயன் என்ன???

சாம்பல் புதன்

திருநீற்றுப் புதன்

05.02.2025 - புதன் கிழமை 

"இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்" - யோனா 3:6

தவக்காலம் எப்படி 40 நாட்கள்? மார்ச் 05 2025 தொடங்கி 19 ஏப்ரல் 2025 வரை தவக்காலம்.

இதற்கு இடையில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளை நீக்கினால் 40 நாட்கள் வரும்.

ஏன் 40 நாட்கள் தவக்காலம்?

பழைய ஏற்பாட்டு புரிதலில் 

நோவாவின் காலத்தில் மண்ணுலகில் 40 நாள் பகலும் இரவும் பெருமழை பெய்தது. (தொ நூ 7:12)

மோசே 40 நாள் பகலும் இரவும் சீனாய் மலையில் தங்கி இருந்தார். (வி ப 24: 18)

கடவுளின் சினம் குறைய 40 பகலும் இரவும் மோசே நோன்பு இருந்தார். (இ ச 9:18,25)

எலியா 40 பகலும் இரவும் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார். (1அரசர்கள் 19:8)

புதிய ஏற்பாட்டு புரிதலில் 

இயேசு 40 நாட்கள் நோன்பு இருந்தார். இயேசுவை அலகை 40 நாட்கள் சோதித்தது. 

நாற்பது என்பது அடையாளம்.

இந்த தவக்காலத்தில் நாம் எடுக்க இருக்கும் உறுதிப்பாடு என்ன?

- சிலவற்றை சில நாட்களுக்கு விட்டு விடுகிறேன் என்பதா? (அசைவ/உயர்தர உணவு, கெட்ட பழக்கங்கள், தீய சிந்தனைகள், அலைபேசி மோகம், ஊடக தொடர்பு...)

- இயேசுவின் பாடுகளை யோசித்து பார்த்து விட்டு கடந்து செல்வதா?

- ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வதா?

- இரத்தம், உடல் உறுப்புகளை தியாகம் செய்வதா?

- அழுது புலம்புவதா?

- அமைதி காப்பதா?

- இருப்பதை பகிர்வதா?

- காயபடுத்தியவரை மன்னிப்பதா? காயப்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்பதா?

எதை எடுக்க போகிறோம்? எதை விட போகிறோம்?

சாம்பல் நமக்கு உணர்த்துவது - மனமாற்றம், ஒன்றுமில்லாமை, புது வாழ்வு பெறுதல்

பழைய ஏற்பாட்டில் சாக்கு உடை உடுத்தி சாம்பல் மீது அமர்ந்து/ சாம்பல் பூசி பலர் மனமாற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.

சாம்பல் முழுக்க முழுக்க மனமாற்றதின் அடையாளம். திருப்பலி முடிந்த பின் சாம்பல் வாங்க கூச்சல் போடுவதிலோ அடித்துப் பிடித்து சாம்பல் வாங்குவதிலோ ஒரு பயனும் இல்லை. மாறாக மனம் திரும்பி நற்செய்தியை நம்ப வேண்டும். நற்செய்தியின் படி வாழ வேண்டும்.

இதுவே தகுந்த காலம், இறை இரக்கத்தை அதிகம் உணரும் காலம். குற்றத்தை உணர்ந்த உள்ளதோடு அவரிடம் திரும்புவோம்.

ஆயன் ஆடுகளை பசும்புல் வெளிக்கு அழைத்துச் செல்வது போல கடவுள் நம்மை நீரோடைக்கு அழைத்துச் செல்வார்...

மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பும் முன் படைத்தவரை உள்ளத்தில் நினைப்போம்... மனமாற்றம் பெற்ற மாந்தர்களாக வாழ்வோம்...

இலாபம் என்னும் எதிர்பார்ப்பு...


பொதுக் காலம் 8ஆம் வாரம்

04.03.2025 - செவ்வாய்க் கிழமை 

"ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்; இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்" - எரேமியா 6:13

எந்த செயலையும் யாரும் இலாபம் எதிர்பார்க்காமல் செய்வதில்லை. சில செயல்களின் மூலம் சிலருக்கு பணமோ, பெயரோ, பதவியோ, நற்பெயரோ, புகழோ கிடைக்கும். ஆதாயம் இல்லாமல் எறும்பு கூட கூடு/புற்று கட்டுவதில்லை.

எல்லாவற்றிலும் இலாபம் பார்க்கும் மனிதர்கள் எல்லாவற்றையும் பார்த்து தான் செய்வார்கள். உடனடி பலன் என்றால் உடனடி சேவை, இல்லையேல் தள்ளி போடப்படும்.

ஆசை யாரை தான் விட்டது. எல்லா இடத்திலும் இலாப நோக்கு தலைவிரித்து ஆடுகிறது. 10,000 பணம் கடனாக கொடுத்து 50,000 வரை வட்டி வைத்து இலாபம் பெறும் கூட்டம் தான் இன்று முன்னிலையில் இருக்கிறது. (அறிவற்ற செல்வனுக்கு சொல்லப்பட்ட பதில் தான் இத்தகையோருக்கு- லூக்கா நற்செய்தி 12:20 ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:28-31) பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார். இயேசுவின் சீடத்துவத்திடமும் எதிர்பார்ப்பு இருந்தது.

இயேசுவின் பதில், "இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்".

பேதுருவிடமும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தைரியமான நபர் வெளிப்படையாக கேட்டு விட்டார்.

நாமும் இவ்வுலகில், நம் குடும்பத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல் எதையும் செய்வதில்லை. திரும்ப கிடைக்கும் என்பதாலேயே இங்கு பல காரியங்கள் நடக்கிறது.

எப்போது பலன்/ இலாபம் எதிர்பாராமல் ஒரு காரியம் நடைபெற ஆரம்பிக்கிறதோ, அப்போது நாம் இறையாட்சியை நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.

கடமையை செய்து பலனை எதிர்பாராத வாழ்க்கை வாழ முற்படுவோம்... எதையும் எதிர்பாராத வாழ்க்கை எதையும் ஏற்றுக் கொள்ளும்...

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...