தவக்காலம் நான்காம் வாரம்
01.04.2025 - செவ்வாய்க் கிழமை
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர் - திருப்பாடல்கள் 32:1
சில மனிதர்கள் தரும் காயம், ஏமாற்றம் பலரை நோயாளியாக்கி விடுகிறது. சிலரின் வறட்டு கவுரவம் அவர்களின் நல வாழ்வுக்கே தடையாக இருக்கிறது.
மருந்துகளை கொடுப்பவர் மருத்துவர் என்றாலும் நலம் அளிப்பவர் கடவுள். சில நோய்களுக்கு மருந்து தீர்வு, சில நோய்களுக்கு மன்னிப்பு (பாவமன்னிப்பு) தான் தீர்வு. சிலர் இவ்வாறு சொல்ல கேள்விப்பட்டிருப்போம், ‘எத்தனையோ மருத்துவரை பார்த்துவிட்டேன் இன்னும் உடல் சரியாகவில்லை’. சிலர் செய்த பாவங்கள் சிலரை பின்தொடர்வது தான் உடல்நலம் பெறாததற்கு காரணம்.
பாவமன்னிப்பு கடவுளிடம் கேட்க வேண்டும். யாருக்கு எதிராக பாவம் செய்தோமோ அவர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும். சக்கேயு செய்தது போல “சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார்”. இது தான் பரிகாரம்.
தாமஸ் மேன்சன் சொல்வார், ‘பழி சுமத்துவது காயங்களை பெரிதுப்படுத்துகிறது, ஆனால் மன்னிப்பு குணமாக்குகிறது’.
கடவுள் மன்னிப்பவர் தான், அதற்காக பாவத்தில் திளைத்திற்க கூடாது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 6:1,2இல் இவ்வாறு சொல்வார், “…அருள் பெருகுவதற்காக நாம் பாவத்தில் நிலைத்திருக்கலாமா? ஒருபோதும் கூடாது. பாவத்தைப் பொறுத்தமட்டில் செத்துவிட்ட நாம் எவ்வாறு தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ முடியும்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 5:1-3,5-16) இயேசு 38 ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரை குணமாக்குகிறார். இயேசு அவரிடம் பேசியதாக மூன்று வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1. நலம்பெற விரும்புகிறீரா?
2. எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்.
3. இதோ பாரும் நீர் நலமடைந்தள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப் பாவம் செய்யாதீர்.
முழு நலம்பெற வேண்டும் என்றால் பாவம் மன்னிக்கப்பட வேண்டும். இயேசு அதை செய்தார். இனிமேல் பாவம் செய்யாதீர் என்றும் சொன்னார்.
நாம் நம்முடைய வாழ்வில் நாம் முழு நலம்பெறமுடியாமல் இருப்பதற்கு ஒரு காரணம் நம்முடைய பாவங்களுக்கு மனம்வருந்தாததும், மன்னிப்பு கேட்காததும், பிறருடைய குற்றங்களை மன்னிக்காததும் தான் காரணம்.
மருந்து வேலை செய்யாத இடத்தில் கூட மன்னிப்பு வேலை செய்கிறது.
மன்னிப்பு கேட்போம்… மன்னிப்போம்… நலம் பெறுவோம்!