தவக்காலம் முதல் ஞாயிறு
10.03.2025 - திங்கட்கிழமை
"உம் தீர்ப்புகள் மேன்மையானவை, விளக்கமுடியாதவை. எனவே அவற்றைக் கற்றுத் தெளியாத மனிதர்கள் நெறிதவறினார்கள்" - சாலமோனின் ஞானம் 17:1
'கடவுள் நம்பிக்கை உண்டு' என்று சொல்லக் கூடியவருக்கும், 'கடவுளே இல்லை' என்று சொல்லக் கூடியவருக்கும் நிறைய வேற்றுமைகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர் கடவுளை மறைமுகமாக இழிவுப்படுத்துவார், மனிதரை நேரடியாக இழிவுப்படுத்துவார், கடவுள் இல்லை என்பவர் கடவுளை மற மனிதனை நினை என்பார்.
கடவுளை வாயார அறிக்கையிடும் நாவு கடவுளை வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை, கடவுளை பிரதிபலிப்பதில்லை. கடவுளை பின்பற்றினால் ஆலயத்தில் ஒரு மாதிரியும் வெளியில் ஒரு மாதிரியும் நடந்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
இங்கு பல மனிதர்கள் கடவுளை வழிபாட்டு பொருளாக பார்க்கிறார்கள், கடவுள் என்றும் வாழ்கிறார் என்பதை மறந்து விடுகிறார்கள். இத்தகைய நம்பிக்கை பயனற்றதே அல்லது போலியானது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 25:31-46) வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர் என்ற செய்தி கொடுக்கப்படுகிறது.
எதற்காக இந்த கூடுகை? நல்லவர் கெட்டவர் பிரிக்கப்பட, நம்பிக்கையை வாழ்ந்து காட்டாதவர் முடிவைக் கண்டுக் கொள்ள, கடவுளின் சாயலும் உருவும் மற்ற மனிதரில் இருக்கிறது என்பதை கண்டுக் கொள்ளாத மனிதர்களுக்கு பாடம் புகட்டவே இந்த கூடுகை.
ஆண்டவரே நாங்கள் தினசரி ஆலயத்திற்கு வந்தோம், வழிபாடுகளில் ஆர்வமுடன் பங்கெடுத்தோம் என்ற பதில் மட்டும் கடவுளுக்கு திருப்தி அளிக்காது.
தேவையில் இருப்பவரை கண்டுகொள்ளாத ஆன்மீக வாழ்வு போலியான வாழ்வு.
நான் உனக்கு செய்தது போல நீ உன் உடன் பணியாளருக்கு செய்திருக்க வேண்டும் அல்லவா? என்ற கேள்வி முன்வைக்கப்படும்.
சரியான பதிலை நம் செயல்பாடுகளால் விளக்கி கூற இயலவில்லை எனில் நாம் எதிர்பாராத தீர்ப்பு தான் கிடைக்கும்.
கடவுள் நம்பிக்கை உண்டு என்றால் அதை வாழ்ந்துக் காட்ட வேண்டும். மற்றவர் வாழ்வு பெற உதவ வேண்டும்.
யாக்கோபு எழுதிய திருமுகம் 2:13 இவ்வாறு சொல்கிறது, "இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்."
No comments:
Post a Comment