தவக்காலம் முதல் வாரம்
15.03.2025 - சனிக் கிழமை
இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது - 1 கொரிந்தியர் 13:8
ஒவ்வொரு மனிதரின் அன்பும் வித்தியாசமானது. சிலர் சிலரை பலன் எதிர்பார்த்து அன்பு செய்வார்கள், அடுத்தவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிலர் சிலவற்றை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் (அன்பளிப்பு, உடனிருப்பு, பணம்...), சிலர் தொலைவில் இருந்து அன்பு செய்வர், சிலர் கடந்த காலத்தின் ஏமாற்றங்களை/பிரிவை அன்பு செய்வர். ஒருசிலரின் அன்பு தான் சம நேர்க்கோட்டில் பயணிப்பது.
ஒரு சிலர் பேசி பேசி அன்பை காட்டிக் கொண்டு இருப்பார்கள், ஒரு சிலர் அமைதியின் வழியாக அன்பை எடுத்துக் காட்டுவர், வெகு சிலர் நேர்மறை எண்ணங்களால் அன்பை பரப்புவர்.
இந்த உலகில் மனிதர்களின் அன்பு எதிர்ப்பார்ப்பை அடிப்படையாக கொண்டது. எந்தவொரு மனிதரும் நான் எதையும் எதிர்பார்க்காமல் இவரை அன்பு செய்கிறேன் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரை நமக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது என்றாலே அவரின் அன்பை/உடனிருப்பை எதிர்பார்க்கிறோம் என்று தான் அர்த்தம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:43-48) பகைவரிடமும் அன்பாய் இருக்க கேட்கிறார் இயேசு. அன்பு கூறுபவர்களிடமே திரும்ப அன்பு செலுத்துவது கடினம் என்கிற போது எப்படி எதிரிகளை அன்பு செய்வது.
இயேசு ஒரு மாற்று சிந்தனையாளர். நம் எண்ணங்கள் அவருடைய எண்ணங்கள் அல்ல. எது முடியாதோ அதை போதிக்கவில்லை, எதை அவர் தன்னுடைய வாழ்வில் போதித்தாரோ அதை அவர் வாழ்ந்து காட்டினார்.
அன்பின் உச்சம் இழப்பில், தன்னை தருதலில் முழுமை அடைகிறது.
நீ என்னை பிரிந்தால் உயிரிழப்பேன் என்பது அன்பு அல்ல, நீ எனக்கு இல்லையென்றால் உன் உயிரை எடுத்து விடுவேன் என்பதும் அன்பல்ல.
தன்னை முழுமையாக தருதலே அன்பு.
இறைவன் நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவனை உதித்தெழ செய்வது போல நம் அன்பு நம்மை அன்பு செய்வோர் மேலும், நம்மை எதிர்ப்போர், வெறுப்போர் மேலும் இருக்கட்டும்.
அன்பிற்கு கெட்டவரை நல்லவராக மாற்றும் ஆற்றல் உண்டு. நம் அன்பு மற்ற நபரின் அன்பிலிருந்து மாறுபட்டது என்பதை உணர்வோம். நம் அன்பு நம்மை சாராதவரின் இதயத்தையும் தொடட்டும்...
No comments:
Post a Comment