25_03

பேசாமலே அதிகம் பேசப்படுபவர் புனித யோசேப்பு...


புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர் விழா 

19.03.2025 - புதன் கிழமை 

நீதிமான்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்; என்றென்றும் அவரைப் புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள் - தானியேல்: இணைப்புகள் 1:63

இவ்வுலகில் பேசாமல் இருந்து பலவற்றை சாதிக்கும் மனிதர்களும் பேசியே பலவற்றை கெடுக்கும் மனிதர்களும் உண்டு. மெளனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பார்கள். ஆனால் மௌனமாய் இருப்பவர்கள் சிந்திக்கிறார்கள் என்று அர்த்தமும் உண்டு.

உடனடி பதில், உடனடி செயல்பாடு எதற்கும் சரியான தீர்வாகாது. சற்று பொறுமையும் அதனோடு சிந்தனையும் இருக்க வேண்டும்.

அமைதியாய் இருப்பவர்கள் எந்த செயலையும் உன்னிப்பாக கவனிப்பார்கள், தேர்ந்து தெளிந்து செயல்படுவார்கள். 

அதிகம் பேசுபவர்கள் மற்றவர்களால் வெறுக்கப்படுவார்கள். அதிகம் பேசுபவர்கள் மற்றவர்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள், மற்றவர்களை பேசவிடாமல் தடுக்கிறார்கள். 

அதிகம் பேசி பேசி என்ன சாதித்து விட்டோம்? வெற்று வார்த்தைகள் வேரற்ற மரங்களை போன்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட (லூக்கா 2:41-52) யோசேப்பும் அன்னை மரியாவும் சிறுவன் இயேசுவை மிகுந்த கவலையோடு தேடுகிறார்கள். இயேசுவை கண்டதும் மரியா பேசுகிறார், "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே”.

யோசேப்பு ஏதும் பேசியதாக தெரியவில்லை. ஒருவேளை விவிலிய ஆசிரியர்கள் அவர் பேசியதை பதிவு செய்யாமல் விட்டு விட்டார்களோ!

அப்படி பார்த்தாலும் மத்தேயு நற்செய்தி 1: 19 ஐ பொறுத்தவரையில், "அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்". அவர் நினைத்திருந்தால் மரியா செய்தது தவறு என்று அவரிடமே கேட்டிருக்கலாம்.

ஆனால் அங்கும் அமைதி காக்கிறார் யோசேப்பு. தவறுகளை கண்டுக் கொள்ள கூடாது என்பது அல்ல, தவறு செய்தவர்களை கேட்பதற்கு நான் ஒன்றும் இல்லை என்பதாக கூட இருக்கலாம்.

இப்புனிதரின் வாழ்வு நமக்கு முன்மாதிரியே.

பேசி பேசி மற்றவர்கள் வாழ்வை அழித்ததை நிறுத்துவோம்.

எதுவும் செய்யாமல் எல்லாம் செய்தது போல காட்டிக் கொள்ளும் மனநிலையை அகற்றுவோம்.

ஆணவத்தை அகற்றுவோம்.

நேர்மையை ஆடையாக அணிவோம். தாழ்ச்சியோடு வாழ்வோம்.

பிறரை குற்றவாளி என்று தீர்ப்பிடும் முன் நம் உள்ளத்தை பரிசோதித்து பார்ப்போம்.

பேச வேண்டிய இடத்தில் மட்டும் பேசுவோம்.

நிறை குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக் கொள்வோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...