தவக்காலம் மூன்றாம் வாரம்
27.03.2025 - வியாழக்கிழமை
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையுடன் நீதி வழங்குங்கள்; ஒருவர்க்கொருவர் அன்பும் கருணையும் காட்டுங்கள் - செக்கரியா 7:9
இறைவன் முதல் இயற்கை வரை நடைபெறும் உறவு பரிமாற்றம் அன்பில் தான் நடைபெறுகிறது. மேகம் பொழியும் மழைத்துளி பூமியோடு அன்பின் சங்கமம். பூவுக்குள் இருக்கும் தேனும் அதை குடிக்க வரும் தேனீயும் அன்பினால் சங்கமம், அலையும் கரையும் அன்பினால் சங்கமம், விதையும் மண்ணும் அன்பினால் சங்கமம்...
அன்பின்றி உலகு இயங்காது. ஏமாற்றப்படுவோம் என்று தெரிந்தும் கூட இங்கு பொய் அன்பு நம்பப்படுகிறது. தெரிந்தே குழியில் விழுபவர்களும் நேர போக்கிற்காக அன்பு வலையில் விழுபவர்களும் இங்கு உண்டு.
ஆனால் உண்மையான அன்பும் இவ்வுலகில் இருக்க தான் செய்கிறது. அழகை பார்த்து நேசிப்பவர்கள் மத்தியில் இங்கு மனதை பார்த்து அன்பு செய்வோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இத்தகையோராலயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சிலர் கோவிலுக்கு செல்வதில்லை, ஆனால் நல்லவர்களாக இருக்கிறார்கள், பலர் கோவிலுக்கு செல்கிறார்கள் ஆனால் எல்லா அயோக்கியத்தனமும் அவர்களால் தான் செய்யப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:28-34) இயேசு இரண்டு அன்பு கட்டளையை போதிக்கிறார்.
1. படைத்தவரை அன்பு செய்
2. படைக்கப்பட்டவர்களை அன்பு செய்
கடவுளை அன்பு செய்வது எளிது என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் பிறர் அன்பு இல்லாமல் இறையன்பு சாத்தியமில்லை.
யோவான் எழுதிய முதல் திருமுகம் 4:20 இவ்வாறு சொல்கிறது, "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது."
சில வேளைகளில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டுள்ளார்கள். ஆனால் கடவுளின் கட்டளை 'அடுத்தவரை அன்பு செய்ய' சொன்னபோதிலும் கூட நாம் செவிமடுக்க/செயல்படுத்த மறுக்கிறோம்.
பல பலிகளை, காணிக்கை படையல்களை கடவுளுக்கு கொடுத்து கடவுளை திருப்திப்படுத்த எண்ணுகிறோம். கடவுள் நம் பலிகளில் அல்ல நம் அன்பு செயல்களில் தான் உளம் மகிழ்வார். மனிதர்களை மறந்து மாயையை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.
பணம், புகழ், பெருமை, பொருள் ஆகியவை இங்கு அன்பு செய்யப்படுகிறது. உண்மையான அன்பு ஒருபோதும் விலைப் பேசப்படுவதில்லை. அதனாலேயே உண்மையானவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். நாம் விலைபோகாமல் இருப்பதே நல்லது.
நம் அன்பு எளிமையிலிருந்து இறைமையை நோக்கி கடந்து செல்லட்டும். மனிதம் நேசிக்கப்படும் இடத்தில் இறைமை மாட்சி அடையும்.
செய்பவற்றை எல்லாம் பெருமைக்காக செய்யாமல், உள்ளார்ந்த அன்பினால் தூண்டப் பெற்று செய்வோம். அன்பே கடவுள்.
No comments:
Post a Comment