25_03

நம்பிக்கை அதிகாரத்தைவிட ஆற்றல் மிக்கது...


தவக்காலம் நான்காம் வாரம் 

31.03.2025 - திங்கட்கிழமை 

மனிதர்கள் அதிகார போக்கிலே அலைந்து திரிகிறார்கள். தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்களின் வாழ்வு உயர பயன்படுத்துவதை காட்டிலும் தன் குடும்பம் உயர பயன்படுத்துபவர்களே அதிகம். 

நம் நிலை உயர்ந்தால் மட்டும் போதும் என்பது தான் நமது மனநிலை. தற்காலிகமாக மற்றவர்களை உயர்த்தினால் போதும் என்பதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலை.

அதிகாரம், பணம், புகழ் இவற்றைப் பற்றி பேசுகின்ற போது எனக்குள் எழக்கூடிய கேள்வி, எதையும் கொண்டு செல்ல முடியாத நிலையிலேயே மனிதர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்றால், நாம் சேர்த்து வைத்தது எல்லாவற்றையும் நம்மோடு எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை வந்தால் நாம் என்னவெல்லாம் செய்வோம்? என்பதுதான்.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 4: 43-54) இந்த அதிகாரப் போக்கு இல்லாத தலைவரை நாம் பார்க்கிறோம். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.

தன் மகனுக்காக தனது அதிகாரத்தை குறைத்து தன் நம்பிக்கையை மிகைப்படுத்துகிறார். 

இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் இரண்டு. 1. நம்முடைய நிலையிலிருந்து இறங்கி வருதல், 2. நம்பிக்கையை அறிக்கையிடுதல்.

அவர் கொண்டிருந்த அதிகாரத்தை, அவரின் நம்பிக்கை பணிய வைத்துவிட்டது. பணிந்து நின்ற காரணத்தினால் அவர் தாழ்ந்து போகவில்லை. மாறாக மகனின் உயிர் காப்பற்றப்படுகிறது.

தலைமைத்துவம் என்பது அதிகாரத்தில் நிறைவு பெறுவது அல்ல பணிவில், பகிர்வில், பரிவில் முழுமை பெறுவது.

தன்னை முன்னிலைப்படுத்துவது தலைமைத்துவம் ஆகாது. தன்னோடு இருக்கும் மனிதர்களின் மாண்பை காப்பாற்றுவதும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை தட்டிக் கழிக்காமல் சரிவர செய்வதுதான் உண்மையான தலைமைத்துவம். 

அதிகாரமிக்க உலகில் அதிகாரத்தை சரியாக பயன்படுத்துவோம். நம்பிக்கையை அதிகப்படுத்துவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...