தவக்காலம் முதல் வாரம்
11.03.2025 - செவ்வாய்க் கிழமை
மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்? - சீராக்கின் ஞானம் 28:4
செபமும் செயலும் இணைந்து செல்ல வேண்டும். வேண்டுதல் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இறைவன் விருப்பப்படி வாழ்தல் தான் இங்கு முக்கியம். கரம் கூப்பி செபிக்கும் கைகள் மற்றவர்களின் கண்ணீரை துடைக்கவும் முன் வர வேண்டும்.
மன்னிக்காத உதடுகள் கடவுள் முன்னிலையில் அதிக நேரம் மன்றாடுகிறது. மன்னிப்பது ஒருவகையான உளவியல் மருந்து. இன்று பலர் உடல் வலி, இதய வலி என்று பல இடங்கள் ஏறி இறங்குகிறார்கள். எல்லா வலிகளும் தீர ஒரே வழி மன்னிப்பு தான்.
இயேசுவின் புதுமைகள் பல மன்னிப்பை அடிப்படையாக கொண்டது. நோய்களை குணமாக்கும் முன் பலரை அவர் மன்னித்தார். மன்னிப்பின் வழியாக புது வாழ்வு கொடுத்தார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 6:7-15) இயேசு இறைவேண்டல் செய்ய கற்றுக் கொடுக்கிறார். ஒருவர் மற்றவரை மன்னிக்கவும் அதன் வழியாக இறைத் தந்தையின் மன்னிப்பை பெற்றுக் கொள்ளவும் அழைக்கிறார் இயேசு.
இறைவேண்டலில் பல பரிமாணங்கள் இருக்கின்றன.
1. இறை புகழ்ச்சி
2. மன்னிப்பு வேண்டல்
3. நன்றி கூறல்
4. பரிந்துரைத்து மன்றாடல்
5. விண்ணப்பம்
இதில் நாம் செய்யும் இறைவேண்டல் என்ன என்பதை நாம் தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இறைவேண்டலின் வகைகள்
1. தனியாக
2. குடும்பமாக
3. குழுவாக
4. பங்குத் தல திருஅவையாக
எப்படி இறைவேண்டல்
1. மகிழ்ச்சியோடு
2. கண்ணீர் சிந்தி
3. கரம் உயர்த்தி
4. முழந்தாள் படியிட்டு
5. நோன்பு இருந்து
6. சான்று வாழ்வு வாழ்ந்து
"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்" என்பது வேண்டல் மட்டுமல்ல, அது வாழ்க்கை முறை.
இறைவனிடமிருந்து பெற வேண்டும் என்றால் நம்மிடம் இருப்பதை (மன்னிப்பு, இரக்கம், அன்பு, மகிழ்ச்சி, ஆறுதல்) கொடுக்க வேண்டும்.
மன்னிக்கும் உள்ளம் கடவுளின் மன்னிப்பை எந்த வேளையிலும் பெறும். மன்னிக்க மறுக்கும் உள்ளம் மருந்துக்கு அடி பணியும். மன்னிக்காத மனம் தனக்கு தானே நோயை வருவித்துக் கொள்ளும்.
நாம் மனதார மற்றவர் செய்த குற்றங்களை மன்னித்தால் நாம் நிலைவாழ்வுக்கு தகுதியுடையவர்கள்...
No comments:
Post a Comment