தவக்காலம் இரண்டாம் வாரம்
18.03.2025 - செவ்வாய்க் கிழமை
"மகனே, நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே. நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து, உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால், நீ பெரும். செல்வனாவாய்.” - தோபித்து 4:21
நல்லது எதுவானாலும் செய், தீயது எதுவானாலும் விட்டு விடு. இயற்கையின் படைப்பில் அனைத்தும்/அனைவரும் நல்லவை/நல்லவர் தான். செயற்கையான வாழ்க்கை தான் நம்மை மாற்றி விடுகிறது.
எப்போது செயற்கை உள்ளே வருகிறது? சிந்தித்து செயல்படாத போது, அடுத்தவர் சொல்வதை அப்படியே நம்பும் போது, புத்தியை பயன்படுத்தாத போது செயற்கை என்னும் அழிவு உள்ளே வருகிறது.
பெரியார் ஈ.வெ.ரா. சொல்வார், "யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே".
சிந்தித்து செயல்படாத மனிதம் சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து அவன் பின்னால் ஓடுகிறது. அவன் சொல்வதை கொள்கை என்று ஏற்றுக் கொள்கிறது.
தலைவன் கட் அவுட் -க்கு பால் அபிஷேகம், பண மாலை, ஆடம்பர செலவு இவை தான் சமூக சீரழிவுகள்.
இன்று தெருவுக்கொரு சபை கூட்டம் உள்ளது. தன்னிலே (கத்தோலிக்க மறையிலே) நிறைவு காணாதவர்கள் நாளுக்கொரு சபையை தேடி ஓடுகிறார்கள். இறைவார்த்தையை வீடுகளில் வாசிக்க சோம்பல் கொள்பவர்கள், சபைக்கு சென்றதும் அந்நிய பாசை பேச தொடங்குகிறார்கள். உணர்ச்சி வயப்பட வைத்தலினால் இன்று பல சபைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. (பரவச நிலையிலே மனிதர்கள் வைத்துக் கொள்ளப்படுகிறார்கள்).
சிந்திக்காத மனிதம் போலியான தலைமைத்துவத்தை ஆன்மீகத்திலும் அரசியலிலும் சமூகத்திலும் தேடும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 23: 1-12) இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்.
யார் என்ன சொன்னாலும் அதில் உள்ள நல்ல கருத்துக்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும், சொன்னவரை அல்ல.
இங்கு பல வேளைகளில் நாம் சொல்லப்பட்டதை விட்டுவிடுகிறோம். யார் சொன்னாரோ அவரை தூக்கி கொண்டாட ஆரம்பித்து விடுகிறோம்.
தனிமனித வழிபாடு இங்கு பரவிக் கொண்டிருக்கிறது. கடவுளை மறந்து கடவுளை போதிப்பவரை கடவுளாக்கி வழிபட ஆரம்பிக்கிறோம்.
அடிமைத்தனம் அறிவை பயன்படுத்தாத வரை நீங்காது. மயக்கம் தெளிய வேண்டும். யார் சரியானவர்கள், எது சரியானது என்பதை புரிந்துக் கொள்ள முற்பட வேண்டும்.
சரியானது எங்கு சொல்லப்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம். சரியான அணுகு முறையை பின்பற்றுவோம்.
No comments:
Post a Comment