தவக்காலம் இரண்டாம் வாரம்
21.03.2025 - வெள்ளிக் கிழமை
அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள் - லூக்கா நற்செய்தி 17:10
பணி செய்து கிடப்பதே என் கடமை என்ற மனநிலை எல்லோரிடமும் உருவாக வேண்டும். ஒருவர் மற்றவருக்குரியதை சுரண்டும் போது, அதன் உரிமையாளர் போராட வேண்டி இருக்கிறது. சுரண்டப்பட்டது உடைமை, சுதந்திரம், புகழ், ஆளுமை என ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏதாவது ஒன்றின் உரிமையாளராய் இருப்பவருக்கும் வாழ்க்கையில் போராட்டம் உண்டு, உரிமையை பெற குரல் கொடுப்போரின் வாழ்க்கையிலும் போராட்டம் உண்டு.
தனக்குரியதை ஒருவர் பெற போராட வேண்டி இருக்கிறது. ஆற்றல்மிக்கவர்கள் அனைத்தையும் அபகரித்துக் கொள்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 21: 33-43, 45-46) தோட்ட உரிமையாளர் தோட்டத்தின் உரிமையை பெறுவதற்காக தம் பணியாளர்களை அனுப்புகிறார். அவர்களோ பல துன்பங்களை அனுபவிக்கின்றன. பணியாளர்கள் கொலை செய்யப்படல், தலைவர் அவமரியாதை செய்யப்படல், இறுதியாக தோட்டத் உரிமையாளர் தன் மகனையும் இழந்து விடுகிறார். தோட்டத்தில் பணி செய்தவர்கள் தோட்டத்தை தங்கள் சொந்தமாக்க எண்ணினார்கள்.
தன்னுடைய உரிமைகளை தட்டி பறிப்பவர்களை கண்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.
அடுத்தவருக்குரியதை அடுத்தவருக்கு கொடுப்பதும், தனக்குரியதை தான் பெற்றுக்கொள்வதுதான் சமூக நீதியாக இருக்கிறது.
அடுத்தவருக்கு உரிய உரிமையை நான் தட்டிப் பறிப்பது, அடுத்தவரின் மாண்பை சிதைப்பதற்கு ஈடாகும்.
நாம் இறையாட்சி என்னும் தோட்டத்தின் உரிமையாளராக அல்ல, தோட்ட பணியாளராக நாம் இருக்க வேண்டும். உரிமையாளர் என்பது ஆணவத்தை, அதிகாரத்தை தூண்டி விடுகிறது. மற்றவரை கீழானவராக பார்க்கும் மனநிலையை தூண்டி விடுகிறது. பணியாளர் மனநிலை பாதுகாக்கும் மனநிலை உடையதாக இருக்க வேண்டும்.
நாமும் இறையாட்சி தோட்டத்தில் பணியாளர்களே. சரியான முறையில் பணி செய்தால், கடவுளின் இறையாட்சி என்னும் தோட்டத்தில் நாமும் உரிமை பெறுகிறோம்.
இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி வாழ்ந்து உரிமையை காப்போம்... கடவுளுக்குரியவர்களாய் மாறுவோம்...
No comments:
Post a Comment