திருநீற்றுப் புதனுக்குப் பின் வியாழன்
06.03.2025 - வியாழக் கிழமை
"சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை" - 1 கொரிந்தியர் 1:18
சிலுவை இல்லாத வாழ்வு இல்லை. இன்று மனிதர்கள் கடவுளை திட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கடவுள் தான் என் வாழ்க்கையில் இந்த சிலுவையை ஏற்றி வைத்தார். கடவுள் தான் என்னை சோதிக்கிறார்.
தன் வாழ்க்கையில் தானே தேடிக் கொண்ட பிரச்சினைகளுக்கு நாம் இயல்பாக மற்றொருவரை குறை சொல்வது உண்டு. குறை சொல்லாத மனிதர் இங்கு இல்லை. குறைச் சொல்லுக்கு ஆளாகாத மனிதரும் இங்கு இல்லை.
யாரும் "கிறிஸ்துவை பின்பற்று" என்று நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நமக்கு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது, ஏற்றுக் கொண்டோம். வளர்ந்த பிறகும் நாம் பெற்றுக் கொண்ட அருள் வாழ்வில் நிலைத்து நிற்கிறோம்.
இதில் யாரையும் குறை சொல்வதற்கு இடமே இல்லை. கிறிஸ்துவை பின்பற்றுவதும் பின்பற்றாமல் விட்டு விடுவதும் நம் உரிமை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:22-25) "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்கிறார் இயேசு.
இங்கு அவர் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, விரும்புகிறவர் வரட்டும் என்கிறார். அதுவும் தம் சிலுவையை தூக்கிக் கொண்டு என்னை பின்பற்றட்டும் என்கிறார்.
பின்பற்றினால் அதற்கான கைம்மாறு உண்டு. இந்த உலகில் நாம் உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கிறோம். சில உயிர்களை எடுத்தாவது நாம் உயிர் பிழைத்துக் கொள்ள எண்ணுகிறோம்.
பிறரை அழித்து தான் உயிர் வாழ வேண்டும் என்பது இல்லை. நம் தீய குணங்களை நாம் அழித்தாலே நீடு வாழலாம்.
நம் சிலுவை நம்மை அழுத்தும், தவறான பாதைக்கு செல்ல விடாது. தவறின் பக்கம் துணை நிற்காது.
மற்றவர்களுக்கு பாரமாய் இராது. மற்றவர்களின் வளர்ச்சி கண்டு இறுமாப்பு அடையாது.
மாட்டிற்கு கடிவாளம் போல நமக்கு முன் நம் சொந்த சிலுவை இருக்கிறது. சிலுவையை தோளில் போட்டுக் கொள்வோம். மீட்பை பெற்றுக் கொள்வோம்...
வாழ்வை இழந்த பின் வருந்தி பயன் என்ன???
No comments:
Post a Comment