25_03

ஊதாரித் தந்தை...

தவக்காலம் இரண்டாம் வாரம் 

22.03.2025 - சனிக் கிழமை

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் - லூக்கா நற்செய்தி 6:36

செலவு அதிகம் செய்பவர்களை ஊதாரித்தனம் செய்பவர்கள் என்போம். ஊர் சுத்துபவர்களை ஊதாரி என்போம். உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்போருக்கு, தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. பிறர்மீது கொண்ட அளவுக்கதிகமான அன்பினால் இருப்பதையும் இழந்து நிற்பார்கள்.

ஏமாற்றுவோர் என்று தெரிந்திருந்தாலும் கூட தொடர்ந்து ஏமாந்துக் கொண்டே இருப்பார்கள் சிலர். அன்பு சில நபர்களை கண்மூடித்தனமாக நம்ப செய்து விடுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 15: 1-3, 11-32) தன் இளைய மகன் தவறு செய்தான்/செய்கிறான் என்று தெரிந்திருந்தும் கூட தன்னிடம் இருப்பதை கொடுக்கிறார் அன்பில் ஊதாரியான தந்தை. இந்த தந்தைக்கு பழிவாங்க தெரியவில்லை, கோபித்துக் கொள்ள தெரியவில்லை, வீட்டை விட்டு விரட்ட தெரியவில்லை, வசைபாட தெரியவில்லை. இந்த தந்தை அன்பை வீண்செலவு செய்கிறார். (அந்த வீண்செலவு தான் ஒருவரை திருத்தியிருக்கிறது)

இன்னும் கொடுக்க மட்டுமே தெரிகிறது அந்த தந்தைக்கு. மகன் மனம்மாறி திரும்பி வந்த போது, தந்தை செய்தது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. (முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். லூக்கா 15:22,23).

அந்த மகன் செயல்பாட்டில் ஊதாரியாக இருந்தார், தந்தை அன்பில் ஊதாரியாக இருந்தார்.

இளைய மகன் பன்றி மேய்க்கும் போது, தனக்குள் சொல்லிக் கொண்டது, "அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’.

தந்தையின் செயல்பாடுகளை கண்ட போது வாயடைத்து போகிறார். "தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்."

தந்தையின் பரிவில் மாட்டிக் கொண்ட மகன் தான் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லவில்லை/சொல்ல முடியவில்லை. (உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’.)

தந்தையின் அன்புக்கு முன் இளைய மகனின் குற்றங்கள் பனி போல உருகுகிறது. மூத்த மகன் தந்தையின் அன்பை புரிந்துக் கொள்ளவில்லை. தன் தம்பியையும் ஏற்றுக் கொள்ளவில்லை. (அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார்.)

மனம்மாறியவன் அன்பில் நனைந்தான், மற்றவனோ கோபத்தால் அழிந்தான்.

மூத்த மகனின் கலக்கம், இருப்பதும் அவனுக்கு போய்விடுமோ என்பது தான்.

ஊதாரித் தந்தை இன்னும் கொடுக்க இருக்கிறார். அது பொருள் மட்டுமல்ல அன்பையும் மன்னிப்பையும்.

கொடுக்க கொடுக்க சுரக்கும் அன்பை கொண்ட தந்தையை நாம் பெற்றிருக்கிறோம். அவரின் அன்பில் களங்கம் இல்லை. யார் வெறுத்தாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நம்மை விட்டுவிடாதவர்.

தனக்குரிய அன்போடு இரு கரம் விரித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

நம் பதில் என்ன?

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...