25_03

தடையை உடை...


தவக்காலம் மூன்றாம் வாரம் 

27.03.2025 - வியாழக்கிழமை 

என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்; ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய்கின்றனர்; சினமுற்று என்னைப் பகைக்கின்றனர் - திருப்பாடல்கள் 55:3

நடை பயிலும் குழந்தைக்கு முன் இருக்கும் அனைத்தும் தடைகள் தான். அதற்காக அந்த குழந்தை தடையை கண்டு தடைபட்டு நிற்காது. கீழே விழும், அழும் ஆனாலும் பின்வாங்காது.

தடையை கண்டு துவண்டு போனால் நடக்க பழகுவதை மறந்து விட வேண்டி இருக்கும்.

இன்று நம்முடைய வாழ்க்கையில் மற்ற மனிதர்கள் நமக்கு இரண்டு வழிகளில் தடைகளை வைக்கிறார்கள். 1. நம்மை பற்றி அவதூறுகளை மற்ற மனிதர்களிடம் பரப்பி விடுதல் வழியாக

2. நாம் செய்கிற நல்ல காரியத்தை தவறாக நம்மிடமே சித்தரித்து பேசி நம்மை இயங்க விடுவதில்லை.

இந்த இரண்டு தடைகள் எல்லா நல்ல மனிதரின் வாழ்விலும் வரும். தடைகளை மட்டுமே அசைபோட ஆரம்பித்தால் வளர்ச்சியை காண முடியாது. 

சிலரை சொல்லி திருத்தி விடலாம், சிலர் பட்டால் தான் திருந்துவார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11:14-23) இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டியதை கூட தவறாக சித்தரித்தது ஒரு கூட்டம். யார் மீது பொறாமை, பேச்சற்றவர் மீதா? நன்மை நடப்பதாலா? இயேசு மீதா? நிச்சயம் இயேசு மீது தான்.

பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான் என்றது கூட்டம். இயேசு தெளிவு கொடுக்கிறார், சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்? "நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?" என்பது இயேசு கொடுக்கும் பதிலடி

புரிந்து கொள்ளாதவர்களை புரிந்துக் கொள்ள வைத்து விடலாம். புரிந்து கொள்ள மறுப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

இவர்கள் நம் வாழ்வின் தடைகள் என்பதை உணர்ந்து நாம் தான் கடந்து செல்ல வேண்டும்.

இன்று பலர் நம்மோடு இருப்பதில்லை, நமக்கு எதிராக, தடையாக தான் இருக்கிறார்கள்.

தடைகளை உடைக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது. ஆற்றலை சரிவர பயன்படுத்தி தடைகளை தாண்டுவோம். யாருக்கும் தடையாக இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...