25_03

வெளித்தோற்றமல்ல உட்புற மாற்றமே தேவை...


தவக்காலம் இரண்டாம் வாரம்

16.03.2025 - ஞாயிற்றுக் கிழமை 

இரண்டு வகையான தோற்றம், 1. வெளித்தோற்றம் 2. உட்புற தோற்றம்

எளிதாக அழகான தோற்றத்தை தருவது வெளித்தோற்றம் தான். ஏமாற்றுவதும் இந்த வெளித்தோற்றம் தான். 

உள்ளத்தில் உள்ளது தான் உண்மை. உள்ளத்தின் நிறைவை வாய் பேசும் என்பார்கள். ஆனால் அந்த உள்ளத்தில் உள்ளதையும் வாய் மாற்றி பேசிவிடும். 

இன்று யார் உண்மை பேசுகிறார், யார் நல்லவர், யார் நேர்மையாளர், யார் பொதுநலவாதி, யார் ஆள்பார்த்து செயல்படாதவர் என்பதை புரிந்துக் கொள்ளவே முடியாது.

எல்லாரும் ஏமாற்றுபவர்கள், எல்லோரும் நடிப்பவர்கள், எல்லோரும் தந்திரவாதிகள். எல்லா மனிதர்களும் காரியம் ஆகும் வரை காலை பிடிப்பார்கள், காரியம் முடிந்ததும் கழுத்தை நெரிப்பார்கள்.

வெளித்தோற்றத்தை நம்பி ஏமாந்து போனவர்கள் ஏராளம். உள்ளத்தில் ஒன்று வைத்து வெளியில் ஒன்றை பேசி நடிப்பவர்கள் யார் என்பதை நம்மால் அடையாளம் காண முடிவதில்லை என்பதால் ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9: 28b-36) இயேசுவின் உரு மாற்றத்தை/தோற்ற மாற்றத்தை காண்கின்றோம். இயேசுவின் மனித இயல்பு விலகி இறை இயல்பு இங்கு வெளிப்படுகிறது.

இயேசு இறை இயல்பிலும் மனித இயல்பிலும் ஒரே மாதிரியானவர். இங்கு போலியான தோற்றத்திற்கு இடம் என்பதே இல்லை.

தோற்ற மாற்றத்தின் சிறப்பு அம்சங்கள் -

அவரது முகத்தோற்றம் மாறியது; 

அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. 

மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். 

மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. 

அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.

இயேசுவின் உட்புறமும் வெளிபுறமும் ஒன்றே. இங்கு வேற்றுமைக்கு இடம் இல்லை.

இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்க நூல் 15: 5-12, 17-18, 21b) கடவுள் மாறாதவர் என்பது வெளிப்படுகிறது. ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழி மரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றியவர். வாக்கு மாறாதவர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (பிலிப்பியர் 3: 17- 4: 1) "நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்" என்கிறார் திருத்தூதர் பவுல். நம் உடலை உருமாற்றுவார் என்ற நம்பிக்கை செய்தியை தருகிறார். 

மண்ணுலக காரியங்களை நாடுவோர் அடைவது மானக்கேடு, அழிவு.

மாற்றங்கள் புதுவாழ்வு நோக்கி நகர வேண்டும். வெளியில் ஒரு மாதிரியும் உள்ளே ஒரு மாதிரியுமாக நடிக்க கூடாது.

போலித்தனம் ஒருநாள் வெளிப்படும். மாற்றம் காணாத வாழ்வு ஒரு நாள் பலத்த அடியை பெறும். உட்புறம் தூய்மை அடையட்டும். உள்ளம் நிறைஅமைதி பெறட்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...