தவக்காலம் முதல் வாரம்
13.03.2025 - வியாழக்கிழமை
நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள் - எசாயா 1:17
எல்லாரிடமும் கொடுக்கும் மனம் இருப்பதில்லை. கொடுக்கும் மனம் உடையோரிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இருப்பதில்லை.
கொடுத்தால் கிடைக்கும் என்றால் மட்டுமே பல காரியங்கள் இங்கு நடக்கிறது. பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கும்/சீட்டு கிடைக்கும். சொந்த தாய் தந்தைக்கே கடைசி காலங்களில் உணவு, உறைவிடம் கொடுப்பாரில்லை. சிறுவயது முதலே கொடுத்து வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால், எதையும் செய்யாதவர்களுக்கு யார் என்ன தான் செய்வார்கள்.
நான் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது போல, மற்றவர்களும் நன்றாய் இருக்க வேண்டும் என்று விரும்புவதே உயர்ந்த உள்ளம். விரும்புவதோடு நின்றுவிடாமல் நல்லது செய்ய வேண்டும்.
நீதிமொழிகள் 3:27 இவ்வாறு சொல்கிறது, "உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே."
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 7: 7-12) ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்கிறார் இயேசு.
பிறர் நமக்கு எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் அவர்களுக்கு செய்ய வேண்டும். அன்பை எதிர்பார்த்தால் அன்பை பகிர வேண்டும், உதவியை எதிர்பார்த்தால் தேவையில் இருப்போருக்கு உதவ வேண்டும், புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால் நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் செய்வது எல்லாம் உடனடி பலனை ஒருவேளை கொடுக்காமல் போகலாம். ஆனால் நாம் விதைத்ததற்கான பலன் நம்மை நிச்சயம் தேடி வரும்.
மரத்தை நட்டவர் அதன் பலனை அனுபவிக்காமல் திரும்பி போக மாட்டார் என்பது போல நல்லது செய்தவர்/தீமை செய்தவர் அதன் கைம்மாறை திரும்ப பெறுவார்.
நான் மற்றவரை மாற்ற முடியாது, நான் என்னை மாற்றிக் கொள்ளலாம். என் அனுமதியின்றி என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. மற்றவர் என் வாழ்வில் நுழைய நான் தான் அனுமதி சீட்டுக் கொடுக்க வேண்டும்.
நல்லதை செய்து நல்லதை பெறுவோம்...
No comments:
Post a Comment