25_03

கடவுளை மாற்றும் நம் மாற்றங்கள்...


தவக்காலம் முதல் வாரம் 

12.03.2025 - புதன் கிழமை 

பாவிகளின் செயல்களைக் கண்டு வியப்பு அடையாதே; ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்; உன் உழைப்பில் நிலைத்திரு. நொடிப்பொழுதில் ஏழையரைத் திடீரென்று செல்வராய் மாற்றுவது ஆண்டவரின் பார்வையில் எளிதானது. - சீராக்கின் ஞானம் 11:21

மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை என்று சொல்வார்கள். மாற்ற நினைத்தால் எதையும் மாற்றலாம். தொடர்ந்து போராடி போராடி மாற்ற முடியவில்லை என்றாலும் கூட நம் எண்ணங்களை/இலக்கை மாற்றிக் கொள்ளலாம்.

சில மாற்றங்கள் தற்காலிகமானது, சில மாற்றம் நிரந்தரமானது. சில மாற்றம் உடனடியாக நடக்கும், சில மாற்றங்கள் ஏற்பட காலம் எடுக்கும்...

சிலர் சிலரை சில்லறை கொடுத்து மாற்ற எண்ணுகிறார்கள், சிலர் பலரை நல்ல எண்ணங்களால் மாற்ற எண்ணுகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 11: 29-32) அடையாளம் கேட்டு இயேசு சோதிக்கப்படுகிறார். மாற்றம் காண விரும்பாத அக்கூட்டம் இயேசுவிடம் அடையாளம் கேட்கிறது.

யோனாவின் அடையாளத்தை தவிர வேறு அடையாளம் தரப்படாது என்கிறார் இயேசு.

அது என்ன யோனாவின் அடையாளம், (மத்தேயு நற்செய்தி 12:40) "யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்".

தென்னாட்டு அரசி சாலமோனின் ஞானத்தை கேட்க கடைக் கோடியில் இருந்து வந்தார்.

யோனாவின் வார்த்தையை கேட்டு நினிவே மக்கள் மனம் மாறினார்கள்.

சாலமோன், யோனா ஆகியோரை விட மானிட மகன் பெரியவர் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை.

இன்றைய முதல் வாசகத்தில் (யோனா 3:1-10) கொடுக்கப்பட்ட ஒரு அருமையான வசனம், "...ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.” (யோனா 3:8,9)

தனிப்பட்ட மனிதரின் மாற்றம் சமூகத்தை மாற்றுகிறது. அந்த மாற்றத்தினால் அழிவு தடைப்படுகிறது. 

முதல் வாசகத்தில் இறுதி வசனம், "...அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர்(கடவுள்) கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை." (யோனா 3:10)

மாற்றம் சாத்தியமே. முடியாது என்று முடங்கி படுத்தால் எதுவும் முடியாது தான். முடியும் என்று முன்னோக்கி நகர்ந்தால் முழு மனித விடுதலை சாத்தியமே.

நம்மில் மாற்றம் உருவானால் போதும். அது மெல்ல மெல்ல சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...