கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா
25.03.2025 - செவ்வாய்க் கிழமை
கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:6-8
இன்றைய நாள் மங்கள வார்த்தை நாள் என்றும் அழைக்கப்படுகிறது. தவக்காலமாக இருந்தாலும் இவ்விழா பெருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.
ஏன் மார்ச் 25 ஆம் தேதி கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது? மார்ச் 25 முதல் டிசம்பர் 25 வரை 9 மாதங்கள். ஒரு குழந்தையின் பிறப்பு சராசரியாக 9இலிருந்து 10 மாதங்கள் வரை இருக்கும்.
இறைவன் மனிதராக ஒரு பெண் வழியாக உருவாக போகிறார் என்று கபிரியேல் தூதர் வழியாக முன்னுரைக்கப்பட்ட நாள் தான் இன்று.
இயற்கைக்கு அப்பாற்பட்டு ஒரு கன்னிப் பெண் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது வியப்புக்குரிய செயலே. கபிரியேல் தூதர் கன்னி மரியாவிடம் நடந்த உரையாடலில் சந்தேகங்களுக்கு தெளிவும், தெளிவு கிடைத்த பின் அன்னை மரியாவின் தாழ்ச்சியும் வெளிப்படுகின்றது. “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று அன்னை மரியா பதிலிறுப்பு செய்கிறார்.
இறைவனின் தாயாக மாற போகிறேன் என்ற அகங்காரம் இங்கில்லை, மாறாக இறைத்திருவுளத்தை நிறைவேற்ற போகிறேன் என்ற மனநிறைவு இங்கு புலப்படுகிறது. தனக்கு எல்லோரும் பணிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இங்கில்லை, மாறாக தன் உறவினருக்கு பணிவிடை செய்ய புறப்படுகிறார்.
இறைவனின் தாயாக இம்மண்ணில் உருவாகும் முன்னே அவர் இறைவனின் எண்ணத்தில் தாயாக உருவாகி விட்டார். தொடக்க நூல் 3:15 (“உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்”) இதற்கு அடையாளம்.
இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் அன்னை மரியாவோடு இணைந்து மகிழ்வோம்.
வத்திக்கான் செய்திகளில் இருந்து பெறப்பட்ட வரலாற்று தகவல்
அருள் நிறைந்த மரியே வாழ்க என்று கபிரியேல் வானதூதர் அன்னை மரியாளுக்கு வாழ்த்து செய்தி கூறிய நாளே கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா என்றழைக்கப்படுகின்றது. திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ் (492-496) காலத்து திருவழிபாட்டு நூலில், ஆண்டவரின் திருவருகை அறிவிப்பு பற்றிய குறிப்பு உள்ளது.
6ஆம் நூற்றாண்டில் இதே பெயரிலேயே சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவானது 7ஆம் நூற்றாண்டில் மங்கள வார்த்தை விழா என்று பெயர் மாற்றம் பெற்றது. அதன் பின் திருத்தந்தை புனித பெரிய கிரகோரி (590-604) அவர்களின் திருவழிபாட்டு நூலிலும் இடம் பெற்றது
656ஆம் ஆண்டில் நடைபெற்ற தொலெடோ சங்கம், 692ஆம் ஆண்டு கூடிய துருல்லோ சங்கம் ஆகியவற்றின் விதிகளில் காணப்படும் மங்கள வார்த்தை விழா குறித்த பதிவுகள் இதனை உறுதிசெய்கின்றன. 799ல் நடைபெற்ற சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதி குறிப்பிடும் மரியாளின் நான்கு திருநாட்களில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா மார்ச் 25ந்தேதி இடம் பிடித்து 10ஆம் நூற்றாண்டளவில், கடன் திருநாளாக சிறப்பிக்கும் வழக்கமும் உருவானது.
1895 ஏப்ரல் 23ஆம் நாள், இத்திருநாளை முதல் தர விழாவாக உயர்த்தி திருவழிபாட்டு பேராயம் ஆணையிட்டது. 1969ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ஆம் பவுல் அவர்கள் சீரமைத்த திருஅவை நாள்காட்டியில், பெருவிழாக்களின் பட்டியலில் இவ்விழா சேர்க்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த திருவழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், மங்கள வார்த்தை திருவிழா என்பது கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது.
புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்படும் இவ்விழாவானது புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட வேண்டும் எனவும், தவக்காலத்தில் சிறப்பிக்கப்பட்டாலும் பெருவிழாவாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் திருஅவை வலியுறுத்துகின்றது.
No comments:
Post a Comment