14.03.2025 - வெள்ளிக் கிழமை
வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும் - திருப்பாடல்கள் 37:8
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை நெறிமுறை உண்டு. அவரவருக்கென்று தனிப்பட்ட பாதை உண்டு. என் விருப்பப்படி என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எனக்கு முழுசுதந்திரம் உண்டு. ஆனால் எனது வாழ்க்கை நெறி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது.
இங்கு நெறிபிறழ்ந்து வாழ்வோரும் உண்டு (எப்படியும் வாழலாம்), நெறிமுறைகளோடு வாழ்வோரும் உண்டு (சட்ட திட்டத்திற்கு உட்பட்டு). தாங்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் மற்றவர்கள் அதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் (அதிகாரம் செலுத்துதல்) என்று வலியுறுத்துவோரும் உண்டு.
இவ்வுலக தலைவர்கள் காட்டுகிற நெறிமுறைகள் எல்லாம், ஒருவரை உயர்த்தி பிடிக்கவும் மற்றொருவரை அடிமைப்படுத்தவும் பயன்படுகிறதே ஒழிய, சமத்துவ சமுதாயம் படைக்க உதவுவதில்லை. இத்தகைய நெறி நமக்கு தேவையில்லை. கிறித்தவர்கள் கிறிஸ்துவின் நெறியை பின்பற்ற வேண்டும்.
இறை நெறியை செயல்களிலும் சொல்லிலும் தவறாமல் இருக்க (முட்டாளே, அறிவிலியே என்று சொல்லாதே), கடவுளோடு மட்டுமல்ல சக மனிதனோடும் நல்லுறவு கொள்ள (ஒப்புரவு செய்து கொள்ள) அழைப்பதே இயேசுவின் புதிய நெறி.
இன்றைய நற்செய்தி வாசகம் (மத்தேயு 5: 20-26) அதற்கான அழைப்பை கொடுக்கிறது.
வார்த்தைகளால் ஒருவரை திட்ட ஆரம்பிப்பது தான், செயல்வழி கொலைக்கு ஒருவரை இழுத்து செல்கிறது. பேச்சு நீண்டு கொண்டே செல்வது கைகலப்புக்கு வழிவகுக்கும். (பேச்சில் ஆரம்பிப்பது பிரச்சனையில் முடிகிறது). எனவே கொலை செய்வற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய சொற்களை பயன்படுத்துவதே பாவம் என்கிறார் இயேசு.
அடக்குமுறைகளை வழிவகுக்கும் அர்த்தமற்ற நெறிமுறைகளை (சடங்குகளை, சட்டங்களை) விலக்கி, இயேசுவின் புதிய நெறியை கருத்தில் கொள்வோம். புதிய நெறியில் மனிதம் தழைக்கட்டும்.
சினம் பொழுது சாய்வதற்குள் குறையட்டும். சினம் பிறரை அழிப்பதை விட தன்னை தான் முழுமையாக அழிக்கும். சினம் பலரை அழித்திருக்கிறது.
சமரசம், மன்னிப்பு நம்மிடம் இருந்தால் நம் வாழ்வு நலமாகும்.
No comments:
Post a Comment