25_03

இந்த ஆண்டும் விட்டு வைக்கப்பட்டிருக்கிறோம்...

தவக்காலம் மூன்றாம் வாரம்

23.03.2025 - ஞாயிற்றுக் கிழமை 

வாய்ப்பு கூட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்நாளோடு ஓர் ஆண்டு சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டியது இது தான்.

நான் நல்லவன், திறமையானவன் என்பதாலும் அல்ல, என்னை விட யாரும் இதை செய்ய முடியாது என்பதாலும் அல்ல, நான் அழகானவன்(ள்) என்பதாலும் அல்ல, மாறாக நாம் அவரது உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதாலே வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்று பலர் தங்களது திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எல்லாம் தங்களாலே முடியும் என்று ஆணவம் கொள்கிறார்கள். இது முற்றிலும் வீண்.

நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும். கரடு முரடான பாதை, முட்கள் நிறைந்த பாதை, குறுகலான பாதையென நாம் கடந்து வந்த பாதை ஏராளம். 

எல்லாவற்றிலும் பாடத்தை கற்றுக் கொண்டாலும் மனம் மட்டும் மாறுவதில்லை. நம்மைவிட மற்றவர்களை மதிப்பு குறைந்தவர்களாக கருதுகிறோம். மற்றவரின் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுகிறோம். நம் குற்றங்களை எண்ணிப் பார்க்க தவறி விடுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:1-9) மனம்மாற வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது. மனம்மாறினால் வாழ்வு, இல்லையென்றால் அழிவு என்பது எச்சரிக்கையாக கொடுக்கப்படுகிறது.

நற்செய்தி வாசகத்தில் தொடக்கப் பகுதியில் நாம் காண்பது, அழிவுக்குள்ளானவர்கள் எல்லோரும் நம்மை விட பாவிகள், குற்றவாளிகள் என்று கருதுவது தவறு. மனம் மாறாவிட்டால் நாமும் அழிவோம் என்பது தான் முதல் பாடம்.

இரண்டாம் பகுதியில் காய்க்காத அத்தி மரத்திற்கு மேலும் ஓர் ஆண்டு கூட்டிக் கொடுக்கப்பட்டது போல நமக்கும் ஓர் ஆண்டு சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தி மரத்தின் கனியை காண வந்த உரிமையாளர் தோட்டத் தொழிலாளரிடம் மூன்று ஆண்டுகளாக கனி தராத அத்தி மரத்தை வெட்டிவிட கட்டளையிடுகிறார். ஆனால் தோட்டத் தொழிலாளரோ ஓர் ஆண்டு வெட்டி கொத்தி உரம் போட வாய்ப்பு கேட்கிறார்.

அத்தி மரத்தின் ஆயுள் மேலும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்படிகிறது.

நம்முடைய வாழ்விலும் அத்தி மரத்தை போன்று தவக்காலம் வழியாக ஓர் ஆண்டு கூட்டிக் கொடுக்கப்படுகிறது.

தவக்காலத்தில் நம் உள்ளத்தில் போடப்படும் உரங்கள் பலன் அளிப்பது நம் செயல்களில் இருக்கிறது.

உள்ளம் பண்பட, மனமாற்றம் நிகழ கொடுக்கப்படும் வாய்ப்பினை பயன்படுத்துவோம்... ஆயுள் நீடிக்கட்டும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...