தவக்காலம் இரண்டாம் வாரம்
20.03.2025 - வியாழக்கிழமை
ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார் - நீதிமொழிகள் 28:27
நான் பாவமோ/குற்றமோ செய்யவில்லை என்போர் யாரேனும் இவ்வுலகில் உண்டா? நிச்சயம் இல்லை. சபை உரையாளர் 7:20 இவ்வாறு சொல்கிறது, "குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை".
தவறுவது மனித இயல்பு தான். ஆனால் தவறை உணர்ந்து திருந்த முயல வேண்டும்.
பாவம் பல வகைகளில் செய்யப்படுகிறது. 1. ஒருவர் தனக்கு எதிராக தானே செய்யும் பாவம். 2. ஒருவர் பிறருக்கு/இயற்கைக்கு எதிராக செய்யும் பாவம். 3. ஒருவர் கடவுளுக்கு எதிராக செய்யும் பாவம்.
தனிப்பட்ட பாவம் கூட ஒருவகையில் மற்றவரை பாதிக்கும். உதாரணமாக, குடியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் திருமணம் செய்கிறார் என்றால் அவரோடு இணைந்து அந்த துணைவியும் பாதிக்கப்படுவார். குடும்பம் முழுவதும் பாதிக்கப்படும்.
தனிப்பட்ட பாவம் சமூக பாவமாகவும் கருதப்படும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 16:19-31) ஏழை லாசரை கண்டுகொள்ளாத செல்வந்தரை பற்றிக் காண்கிறோம். செல்வந்தர் அந்த ஏழைக்கு எந்த தீங்கும் செய்யவில்லை, அதே வேளையில் எந்த நன்மையும் செய்யவில்லை. (யாக்கோபு 4:17 நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.)
கண்டுக் கொள்ளாமை ஒரு பாவச் செயல். இருப்பவருக்கு ஆயிரம் அள்ளிக் கொடுப்பதைவிட இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வதே உயர்ந்த செயல்.
இருக்கும் போது எதையும் செய்யவில்லை. எல்லாம் முடிந்த பின் உதவி கேட்டு நிற்கிறார் செல்வந்தர். மனமாற்றம் வாழும் போதே உருவாக வேண்டும்.
வாழும் போது யாரையும் கண்டுக் கொள்ளாமல், இறந்தபின் இரக்கத்திற்காக காத்திருப்பது எந்த வகையில் நியாயம்.
இருப்பது எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்க வேண்டாம். இயன்றதை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
எதையும் கொண்டு செல்ல முடியாது. சேர்த்து வைத்தவை எல்லாம் மண்ணோடு நின்று விடும். மாறாக நாம் செய்த நற்செயல்களே நமக்கு முன் சென்று நிற்கும்.
தேவையில் இருப்பவரைக் கண்டுக் கொள்வோம். பின்னாளில், நம் தேவையில் நாம் கண்டுக் கொள்ளப்படுவோம்
No comments:
Post a Comment