திருநீற்றுப் வியாழனுக்கு பின் வெள்ளி
07.03.2025 - வெள்ளிக் கிழமை
"நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்" - எசாயா 58:3
நோன்பின் அர்த்தம் என்ன? விரதம் இருத்தல், நமக்கு பிடித்தவற்றை விலக்கி இருத்தல், தியாகம் செய்தல், பற்றிக் கொள்ளாமை... இது உணவுக்கு மட்டும் பொருந்தாது, மாறாக நம்மை முடக்குகின்ற, தடுக்கின்ற எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
அது ஊடக நோன்பாக (அலைபேசி அதிக நேரம் உபயோகித்தல் தவிர்ப்பு) இருக்கலாம், சொல் நோன்பாக (தவறான/காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்த்தல்) இருக்கலாம், உணர்வு நோன்பாக (இச்சைகளை அடக்குதல்) கூட இருக்கலாம்.
செய்பவற்றை செய்யாமல் விட்டு விடுவது மட்டும் நோன்பல்ல மாறாக, செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்வதும் நோன்பாக பார்க்கப்படும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 9: 14-15) யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
உணவு நோன்பு/ உண்ணா நோன்பு பற்றி பேசப்படுகிறது. அந்த உண்ணா நோன்பு, இயேசுவின் பார்வையில் அப்போது தேவையற்றதாக கருதப்பட்டது. உண்ணா நோன்பு துக்கத்தை வெளிப்படுத்துவதாக இயேசு சொல்கிறார். எனவே இப்போது அவர்களுக்கு அது தேவையற்றது என்கிறார்.
தேவையான நேரத்தில் சரியானதை செய்ய வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம்.
இங்கு நாம் உண்ணா நோன்பின் வழியாக தவக்காலத்தை கடத்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதையும் கடந்த நோன்பு இன்றைய முதல் வாசகத்தில் (58: 1-9) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எசாயா 58:6
கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!
எசாயா 58:7
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!
தன்னை ஒடுக்கிக் கொள்வது மட்டும் நோன்பாகாது. ஒடுக்கப்பட்டோரை மீட்பது தான் இறைவனின் பார்வையில் உன்னத நோன்பு.
அடிமைத் தனத்திலிருந்து விடுதலை, அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் இவை தான் உயர்ந்த நோன்புச் செயல்கள்.
நாம் வாடிக்கையாக செய்வதை தவிர்த்து, பிறர் வாழ்வுக்கு உகந்த நற்செயல்களை நிறைவேற்ற முன்வருவோம்.
No comments:
Post a Comment