தவக்காலம் மூன்றாம் வாரம்
29.03.2025 - சனிக் கிழமை
அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது - திருத்தூதர் பணிகள் 2:42
இறைவேண்டல் (செபம்) என்பது கடவுளுக்கும் நமக்கும் இடையேயான உறவு பரிமாற்றம். அந்த இறைவேண்டல் தன் பெருமையை எடுத்துரைப்பதற்கான இடம் அல்ல.
இறைவன் இல்லம் ஒருவர் தன்னை குறித்து பெருமை பாராட்டுதலுக்கான இடமல்ல. (பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும் - 2 கொரிந்தியர் 10:17).
செபிக்கும் உதடுகள் நடிக்கும் உதடுகளாக மாறி விட்டன. கூட்டம் கூடும் நாட்கள் பார்த்து இன்று பலர் தங்களை ஆலயங்களில் முதன்மைப்படுத்தி கொள்கிறார்கள். ஆரம்பக் காலங்களில் நல்லவர்கள் போல நடித்து சில நாட்களிலேயே தங்கள் சுய உருவத்தை காட்டி விடுகிறார்கள் சில நயவஞ்சகர்கள்.
கோயில் என்பது தன்னலம் தேடுகிற இடம் அல்ல, இறைவனை தொடுகிற இடம். என்னுடைய இறைவேண்டல் கடவுளை தொடுதலும் கடவுள் தன் அருளால் என்னை தொடுதலும் நடைபெறுகின்ற இடம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக் 18:9-14) இருவரின் இறைவேண்டல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் பரிசேயர், மற்றொருவர் வரிதண்டுபவர். பரிசேயரின் இறைவேண்டல் மற்றவர்களை இழிப்படுத்தி தன்னை பெருமைப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது இறைஒன்றிப்பிற்கான அடையாளம் அல்ல. ஆனால் வரிதண்டுபவர் தன்நிலை உணர்ந்து தன்னை தாழ்த்திக் கொள்கிறார், தன் பாவங்களுக்காக மனம் வருந்துகிறார்.
நல்லது செய்தாலும் அதில் பெருமை நாடி அதன் வழியாக பாவம் செய்த பரிசேயர் கடவுளுக்கு ஏற்புடைய நிலைக்கு தகுதியாகவில்லை. பாவி என்னும் நிலையிலிருந்து இறங்கி வந்து, மன்னிப்பு கேட்டவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார்.
கடவுளை மாற்றுவது அல்ல கடவுளை போல மாறுவதே நம் வேண்டலாக இருக்க வேண்டும். நல்லவராக தன்னை காட்டிக் கொள்வதல்ல, நல்லவராக வாழ்வதே இறை விருப்பம். இறை இல்லத்தில் தற்பெருமை கொள்ளாது நம் நிலை உணர்ந்து வாழ்வோம்.
No comments:
Post a Comment