தவக்காலம் நான்காம் வாரம்
30.03.2025 - ஞாயிற்றுக் கிழமை
இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார் - லூக்கா 19:10
எல்லா மனிதரின் வாழ்விலும் இழப்பு உண்டு. சில நேரங்களில் இழப்புகள் கூட நல்லது தான். வரிசையாக நிற்க வைக்கப்பட்ட தீக்குச்சிகள், ஒரு குச்சியின் மீது நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது, நெருப்பு மற்ற குச்சிகளிலும் பரவுகிறது. இந்த வேளையில் ஒரு குச்சி பின் வாங்குவது நல்லது. இங்கு உறவை இழந்ததினால் நெருப்பு பரவாமல் தடுக்கப்படுகிறது. பிற உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.
இதே போல தான் மனித உறவுகளும் இருக்க வேண்டும். சில இடங்களில் விலகி இருக்க வேண்டும், சில இடங்களில் தனித்திருக்க வேண்டும். தன் வழியாக யாரும் அழிந்து விட கூடாது. பிறருடைய அழிவுக்கு நான் ஒரு போதும் காரணமாக இருந்துவிட கூடாது. என் தவறான சேர்க்கையால் அழிவு வரும் என்றால் அத்தகைய உறவுகளை இழத்தல் சாலச் சிறந்தது
இறுதிவரை இழப்பு நிரந்தரமாகவும் இருக்க கூடாது.
ஒருவர் வாழ்வு பெற தன்னை இழக்க துணிதலும் நல்லது தான். சிலர் இருக்கும் போதே இருப்பதை இழக்கிறார்கள் (இரத்த தானம், உறுப்பு தானம்...) சிலர் இறந்த பின்னர் இழக்கிறார்கள் (உடல் தானம்/உறுப்பு தானம்).
சிலரின் இழப்பு சிலருக்கு வாழ்வு.
ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 15: 1-3, 11-32) வித்தியாசமான இழப்பை நாம் சந்திக்கிறோம். எல்லாம் நிறைவான இல்லத்தை இளைய மகன் இழக்க துணிகிறார், அன்பின் பரிவின் இருப்பிடமாய் இருக்கும் தந்தையை இளைய மகன் இழக்க எண்ணுகிறார்.
தந்தை இறப்பதற்கு முன்பே தனக்குரியதை பெற்றுக் கொண்டு தொலை தூர பயணம் மேற்கொள்கிறார் அந்த மகன்.
ஆடம்பர வாழ்க்கை ஆபத்தில் முடியும் என்பதற்கு ஏற்ப அனைத்தையும் இழந்து நிற்கிறார் இளைய மகன்.
சென்ற இடத்தில் சொத்துக்களை இழக்கிறார், உறவுகளை இழக்கிறார், உணர்வுகளை இழக்கிறார் அந்த மகன். எல்லாம் இழந்த பின் தான் புத்தி தெளிய ஆரம்பிக்கிறது.
தந்தையை நோக்கி திரும்பி வருகிறார். மகனை இழந்த தந்தை மகிழ்ச்சியோடு இல்லை. மகனின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக் கொண்ட அந்த மகன் தந்தையின் உபசரிப்பை கண்ட பின், கடைசி வாக்கியத்தை விட்டுவிடுகிறார் (உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்).
இழப்பு நிரந்தரம் இல்லை என்பதை இவர்கள் இருவரும் புரிந்துக் கொண்டார்கள். இழந்தவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டார்கள். அதற்கு அடிப்படை காரணம் தந்தையின் பரிவு.
இப்படி நல்லது கொண்டிருக்க வீட்டிற்கு வெளியே ஒருவர் (மூத்த மகன்) நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறார்.
இருப்பதும் போய் விடுமோ என்ற பயம், இன்னும் என்னவெல்லாம் இழக்க வேண்டுமோ என்ற கவலை, தம்பியின் மீதும் தந்தையின் மீதும் கோபம் இவையெல்லாம் மூத்த மகனை வெளியே நிற்க வைத்து விட்டது.
நம்மில் பலர் இந்த மூன்று கதாபாத்திரத்துக்குள் ஒளிந்து கிடக்கிறோம்.
1. இருப்பதையெல்லாம் சுருட்டி கொண்டு போய் வெளியில் தொலைத்த இளைய மகனாக
2. இருப்பதும் போய் விடுமோ என்று அச்சம் கொள்ளும், கோபம் கொள்ளும் மூத்த மகனாக
3. எது போனாலும்/ எதை இழந்தாலும் பரவாயில்லை எனக்கு உறவும் உணர்வும் தான் முக்கியம் என்று கருதும் தந்தையாக.
இந்த மூன்றில் பெரும்பாலும் நாம் முதல் இரண்டு நிலைகளிலே தேங்கி விடுகிறோம்.
கடைசி நிலை தான் இழந்ததை தேடும் நிலை. போனது போகட்டும் அல்லது இருப்பதும் போகட்டும் எனக்கு உறவுகள் தான் முக்கியம் என்று எண்ணும் நிலை வருமென்றால் அது நல்லது.
இழந்ததை தேடுவோம். பரிவு காட்டுவோம்.
No comments:
Post a Comment