21.03.2024 - வியாழக் கிழமை
“என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை; உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை” நீதிமொழிகள் 8:8
பேசக்கூடிய வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பதிவு செய்யப்படுகிறது. வார்த்தைகள் அடுத்தவருடைய மனதிலும் அலைபேசியிலும் பதிவு செய்யப்படுகின்றன, எனவே கவனம் தேவை. மனதில் பதிவு செய்யப்படுவது ஆறாத காயங்களாக மாறி விடுகின்றன. அலைபேசியில் பதிவு செய்யப்படுவது பின்னாளில் நமக்கே காயத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
சில வார்த்தைகள் ஆறுதல் அளிக்கின்றன, சில வார்த்தைகள் வாழ்வு கொடுக்கின்றன, சில வார்த்தைகள் கண்ணீர்விட வைக்கின்றன, சில வார்த்தைகள் போலியாக உள்ளன, சில வார்த்தைகள் ஏமாற்றுகின்றன. நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகளில் உருட்டும் புரட்டும் இருக்கின்றதா?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 8:51-59) இயேசு யூதர்களிடம், “என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்” என்கிறார். அதைக் கேட்ட யூதர்கள் அவரை பேய்ப்பிடித்தவன் என்கிறார்கள். யூதர்கள் இயேசுவை நோக்கி வீசுகின்ற வார்த்தைகள் கடினமானதாக இருக்கிறது. இயேசு தன்னை பெருமைப்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை. காரணம் மனிதர் தரும் பெருமை அவருக்கு தேவையன்று. இயேசுவை பெருமைப்படுத்துபவர் தந்தை கடவுள்.
யூதர்களுக்கு ஆபிரகாம் பெரியவராக தெரிகிறார். ஆனால் இயேசு பெரியவராக தெரியவில்லை. ஆபிரகாம் கடவுளின் வார்த்தையை நம்பி செயல்பட்டவர். கண்ணால் காணாததை நம்பியவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவரைவிட பெரியவராக, அவருக்கு முன்பே இருக்கும் இயேசுவும், அவருடைய வார்த்தையும் யூதர்களுக்கு பெரிதாகப்படவில்லை.
இதற்கு காரணம், சொல்வதையெல்லாம் செய்பவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் நீங்கள் செய்வது அர்த்தமற்றிருக்கிறது என்று ஒருவர் சொன்னார் என்றால் அது யாருக்கும் பிடிக்காது. அதைத் தான் இயேசு செய்தார். தந்தையை தெரியும் என்கிறீர்கள் ஆனால் அவர் விரும்புவதை நீங்கள் செய்வதில்லை என்பது இயேசுவின் குற்றச்சாட்டு.
எதையும் கண்டுக் கொள்ளாமல், ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஆம் என்று சொன்னால் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லை. எதிர்த்து கேள்வி கேட்கின்ற போது நம்மை தீர்த்துக்கட்ட கூட்டம் கூடிவிடும்.
‘நான் உண்மையை பேசவில்லை என்றால் நான் பொய்களின் தந்தையாக இருக்கக்கூடிய சாத்தானுக்கு அடிமையாகி விடுகிறேன். அதன் குழுமத்தில் உறுப்பினர் ஆகிவிடுகிறேன்’ என்பார் புனித ஜெரோம் எமிலியானி.
(“நான் சொல்வதற்குச் செவிசாய்க்க உங்களால் இயலவில்லை. எனவேதான் நான் சொல்வதை நீங்கள் கண்டுணர்வதில்லை. சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில், அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம்” - யோவான் 8:43-44)
இறைவார்த்தைக்கு செவிமடுப்போம். இறைஒளியில் நடப்போம். யாருடைய ஏமாற்று வார்த்தைகளிலும் விழுந்துவிடாமல் இருப்போம்.
Super. Usefull words
ReplyDelete