24_03

வெறுப்பு மனப்பான்மையை விரட்டியடிக்க…


25.03.2024 - திங்கட் கிழமை

“விருப்பு வெறுப்பின்றித் தீர்ப்பிடுங்கள்; உயர்ந்தோனுக்கும் தாழ்ந்தோனுக்கும் ஒன்றுபோல செவிகொடுங்கள்; எந்த மனிதனுக்கும் அஞ்ச வேண்டாம், ஏனெனில், நீதித்தீர்ப்பு கடவுளுக்கே உரியது…” - இணைச் சட்டம் 1:17

ஒருவருக்கு அஞ்ச ஆரம்பித்தால் ஒவ்வொருவருக்கும் அஞ்ச வேண்டியிருக்கும். ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த ஆரம்பித்தால் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருக்கும். 

இயேசுவுக்கு யூதர்களையும் தலைமைக் குருக்களையும், யூதாசையும் மகிழ்ச்சிப்படுத்துவது நோக்கமல்ல… ஒருவேளை அது அவருடைய நோக்கமாக இருந்திருந்தால் அவர் சிலுவையை சுமக்க வேண்டியிருந்திருக்காது, எல்லோரையும் போல வாழ்ந்திருக்க முடியும். ஆனால் எது தேவையோ, எது சரியோ எது உண்மையோ அதை இயேசு அனுமதித்தார், செய்தார். 

பணஆசை தான் யூதாசின் காட்டிக் கொடுத்தலுக்கு காரணம் என திருவிவிலியம் சொல்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (யோவான் 12:1-11) “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்திற்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் அப்படி கேட்டான்.” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

(காண்க மத்தேயு 18:28 + அடிக்குறிப்பு)

1 தெனாரியம் - 1 உரோமை வெள்ளி நாணயம், அப்படியென்றால் 300 தெனாரியம் - 300 உரோமை வெள்ளி நாணயங்கள்.

ஒருவேளை அது பணமாக கொடுக்கப்பட்டிருந்தால், அதை தனது தேவைக்காக அவன் எடுத்திருக்கக் கூடும். அது தனக்கு கைக்கூடவில்லையே என்ற வெறுப்பும் அவனிடம் இருந்தது. ஆசை யாரை தான் விட்டது. தன்னோடு இருப்பவரை காட்டிக் கொடுக்க அதுவும் சிலுவைச் சாவுக்கு கையளிக்க எப்படி தான் யூதாசுக்கு மனம் வந்ததோ!

உரோமையர்கள் யூதர்கள் மீது ஆட்சி, அதிகாரம் செலுத்துவதை யூதாசு (யூதர்கள்) விரும்பவில்லை, எனவே இயேசு என்னும் யூதரை உரோமையருக்கு எதிராக திருப்பி விடவும் அவன் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்ற கருத்தும் இங்கு உண்டு. இயேசு தன்னை காப்பாற்றிக் கொள்ள உரோமையரை அழித்துவிடுவார் என்றும் அவன் எண்ணினான். ஆனால் அது கைக்கூடவில்லை. இது யூதாசின் மறைவான திட்டம்.

மறுபுறம், தலைமைக் குருக்கள் இலாசரைக் கொன்றுவிட வேண்டும் என்ற அளவுக்கு இயேசு மீது வெறுப்பு கொண்டனர். ஏனென்றால் இயேசுவால் உயிர்பெற்ற இலாசரின் காரணமான, பலர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டனர்.

ஒருவரின் (மரியா இயேசுவின் அடக்க நாளை முன்னிட்டு அவருடைய கூந்தலால், இயேசுவின் காலடிகளை நறுமணத் தைலம் கொண்டு துடைத்தது) செயல் அவருக்கு பாராட்டை பெற்றுக் கொடுக்கிறது, ஒருவரின் (யூதாசு) சொல் அவரின் திருட்டு மனப்பான்மையை சுட்டுகிறது. நாமும் யூதாசை போல, தலைமைக் குருக்களை போல வெறுப்பு மனப்பான்மையோடு தான் இருக்கிறோம். பிடிக்காதவர்களை அழிக்கவும், எதிர்ப்பவர்களை தகர்க்கவும் திட்டம் தீட்டுகிறோம்.

“உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்” (மத் 5:44), என்று சொல்லி வெறுப்பு மனப்பான்மையை விரட்டி அடித்தார் இயேசு. நாம் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டாம். சரியானதை சரியென்றும் தவறை தவறென்றும் ஏற்றுக் கொள்வோம்.


2 comments:

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...