24_12

எதிர்நோக்கும் மீட்பின் நாளும்...


திருவருகைக் காலம் முதல் ஞாயிறு 

01.12.2024 - ஞாயிற்றுக் கிழமை 

"மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது" - தீத்து 2:13

திருவருகைக் காலம் தயாரிப்பின் காலம், ஆயத்த காலம், புதிய வாழ்வின் காலம், மீட்பின் காலம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

திருவருகைக் காலம் 4 வாரங்களை கொண்டது. முதல் வாரம் "எதிர்நோக்கு" என்ற மையச் சிந்தனையை கொண்டுள்ளது. நமக்கு மீட்பு கடவுளிடமிருந்தே வரும் என்று நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். கடவுளின் இரண்டாம் வருகை உண்டு என்று நாம் நம்புகிறோம். 

எதிர்நோக்குதல் என்பது ஒன்றை குறித்து/ஒருவருக்காய் ஆர்வமாய் காத்திருத்தலை குறிக்கும் எனலாம். 

சீராக்கின் ஞானம் 2:9 இவ்வாறு சொல்கிறது, "ஆண்டவருக்கு அஞ்சுவோரே, நல்லவைமீது நம்பிக்கை கொள்ளுங்கள்; நிலையான மகிழ்ச்சியையும் இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்".

இயேசுவின் முதல் வருகை அமைதியின் மகிழ்ச்சியின் அமைந்தது. ஆனால் இரண்டாம் வருகை நீதியின் தண்டிப்பின் வருகையாய் அமையும். அதை தான் கடந்த 4 நாட்களாக நாம் செவிமடுத்த நற்செய்தி நமக்கு நினைவூட்டுகிறது. 

இன்றைய நாளின் நற்செய்தியிலும் (லூக்கா 21:25-28,34-36) மானிட மகன் வருகைப் பற்றி இயேசு விவரிக்கிறார். சில அடையாளங்கள் தோன்றும், மண்ணுலகில் குழப்பம் அச்சம் ஏற்படும். 

இருந்தபோதிலும் நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள் என்ற ஆறுதல் வார்த்தைக் கொடுக்கப்பட்டுள்ளது. 

உலகப் போக்கிலான வாழ்க்கை முறை வாழ்ந்தவர்களுக்கு மானிட மகனின் வருகை அச்சத்தை கொடுக்கலாம். ஆனால் சரியானதை சரியாக செய்யும் சொல்லும் மனிதர்கள் தண்டனை தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்வர்.

உலகில் இருந்து கொண்டு உலகை வெல்ல வேண்டும். அதற்கு விழிப்பாய் இருக்க வேண்டும்.

மயக்கதிலிருந்து தெளிவு பெற வேண்டும். உலகம் தவறை சரியென்று சொன்னாலும், ஊரே இணைந்து அநீதியை நீதி என்று சொன்னாலும் அந்த கண்ணியில் சிக்கிக் கொள்ள கூடாது.

இன்றைய முதல் வாசகத்தில் (எரேமியா 33:14-16) தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைத்து நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. யூதா விடுதலையும் எருசலேம் பாதுகாப்பும் பெறும். 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1தெசலோனிக்கர் 3:12-4:2) தெசலோனிக்க திருஅவைக்கு திருத்தூதர் பவுல் விடுக்கும் அழைப்பு, ஆண்டவர் வழியாக ஒருவர் மற்றவரிடையே அன்பு பெருக வேண்டும், கிறிஸ்து வரும் நாளில் குற்றமின்றி தூய்மையாய் இருக்க வேண்டும். கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடமிருந்து கற்றுக் கொண்ட நீங்கள் இன்னும் அதில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

அவர் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கும் நாம், தலைநிமிர்ந்து நிற்க கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.

யாரும் நம்மை ஏமாற்றாதவாறு அறிவுத் தெளிவோடு இருப்போம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...