25_01

நம்பிக்கை தடுமாறுகிறதா???


பொதுக்காலம் 4ஆம் வாரம்

01.02.2025 - சனிக் கிழமை

கடலில் அலைகள் எழுவது போல வாழ்க்கையில் துன்ப அலைகள் எழுவது எதார்த்தம். துன்பத்தைக் கடந்த மறுவுலக வாழ்வை நோக்கிய பயணத்திற்காக துன்பங்களை கடக்க வேண்டி இருக்கிறது. துன்பம் வந்ததும் உள்மனம் தடுமாற்றம் அடைந்து விடுகிறது. 

சில துன்பங்கள் நம்முடைய நம்பிக்கையை புடமிடுவதற்காக, சில துன்பங்கள் நாம் கடந்து வந்த பாதையை மறந்து விடக்கூடாது என்பதற்காக... 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4: 35-41) இயேசுவோடு பயணம் செய்யும் சீடருக்கு உள்மன தடுமாற்றம், நம்பிக்கை தளர்வு ஏற்படுகிறது. நாங்கள் சாகப் போகிறோமே உமக்குக் கவலை இல்லையா? என்று சொல்லி இயேசுவை எழுப்பும் அளவுக்கு நம்பிக்கை குறைவு சீடரிடம் காணப்பட்டது. 

காற்றையும் கடலையும் கடிந்து கொள்கிறார். நற்செய்தி பதிவு செய்கிறது 'உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று'. 

சீடர் பக்கம் இயேசு திரும்பி, 'ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா' என்று கேட்டார்.

இந்த அமைதி கடலில் மட்டுமல்ல, நம்பிக்கை தளர்வு ஏற்பட்ட சீடர்களுக்குள்ளும் ஏற்பட்ட அமைதி.

அமைதியற்ற உள்ளத்தால் எதையும் செய்ய முடியாது. மனம் பதட்டத்தோடு இருக்கின்ற போது எந்த காரியத்தை முன்னெடுத்தாலும் அது நமக்கு வெற்றியை கொடுப்பதில்லை.

உள்மனம் அமைதி பெற வேண்டும். நமக்குள் இருக்கும் அமைதி மற்றவர்களிடமும் பரவ வேண்டும். இதைத்தான் இயேசு சொல்கிறார் 'என் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்' என்று.

அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட அமைதி நம் வழியாக மற்றவரிடம் பரவ வேண்டும். 

கடலில் ஏற்படும் அமைதி கடல் பயணத்திற்கு நல்லது. நம் மனதில் ஏற்படும் அமைதி நம் வாழ்க்கைக்கு நல்லது.

கடலில் எழும் அலை கடலை இயக்க நிலையில் வைத்திருப்பதை சுட்டுகிறது, அதுபோல வாழ்வில் வரக்கூடிய இடர்கள், துன்பங்கள் என்னும் அலைகள் வாழ்வினை இயக்க நிலைக்கு அழைத்துச் செல்கிறது. வாழ்க்கைக்கு பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.

நம் மனம் தடுமாறும் வேளைகளிலெல்லாம் நம் நம்பிக்கை பரிசோதிக்கப்படுகிறது. நம்பிக்கை மிகுதிப்படுத்தப்படுகிறது

விதைக்குள் ஒரு கதை...


பொதுக் காலம் 3ஆம் வாரம்

31.01.2025 - வெள்ளிக் கிழமை 

மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது" - 1கொரிந்தியர் 15:43

இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு மறைபொருளை கொண்டுள்ளது. பொருள் எளிதாக புரிந்துக் கொள்ள முடியாததால் அது மறைபொருள். 

யாரும் வீணானவர்கள் அல்ல; எதுவும் வீணானது அல்ல. எல்லாம் பயன்பட கூடியதே. ஒரு மனிதரின் கதை/வாழ்வு மற்றொரு மனிதருக்கு வாழ்க்கை பாடமாகிறது. 

ஒரு மனிதரின் வெற்றி மற்றொருவர் வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல வாய்ப்பாகிறது. மனிதரின் வாழ்வு ஒரு விதை தான். அந்த விதை தான் அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4: 26-34) இறையாட்சியானது தானாக வளர்ந்து கதிர் விடும் விதைக்கும் கடுகு விதைக்கும் ஒப்பிடப்படுகிறது. 

மனிதனின் எந்த தொடர்பும் இல்லாமல் விதை இருந்தாலும், மண்ணோடும் காற்றோடும் சூரியனோடும் தொடர்பு கொண்டு தான் விதை வளர்கிறது. சிறிய விதை தான் ஆனால் வளர்ச்சியோ பெரிதாக இருக்கிறது. 

இப்படிபட்ட நிகழ்வுகளோடு இறையாட்சியை ஒப்பிடுவது வியப்பு அளிக்கிறது. 

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 14:17 இவ்வாறு சொல்கிறது, "இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது."

நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை இயேசுவால் இம்மண்ணில் விதைக்கப்பட்டன. இன்று கிறிஸ்தவம் பெருகி வளர்ந்து இருக்கிறது என்பது இத்தகைய இறையாட்சியின் மதிப்பீடுகளின் வழியாக வெளிப்படுகிறது. 

இயேசு போதித்தவற்றை தூக்கி சுமப்பவர்கள் ஒருபுறம், இயேசுவை மட்டும் சுமப்பவர்கள் மறுபுறம்.

இயேசுவை நேசிப்பவர்கள் அவரை வழிபடும் பொருளாக பார்ப்பார்கள், இயேசுவோடு அவர் போதித்தவற்றையும் நேசிப்பவர்கள் அவரை பிரதிபலிப்பார்கள். 

இன்று இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது, "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்." (யோவான் 13:34)

அவர் செய்தது போல நாம் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் எதிர்பார்ப்பு. அப்போது தான் இறையாட்சி விரிந்து பரவும்.

இயேசு விதைத்த விதை வளர்வதும் வீணாவதும் நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கையில் இருக்கிறது.

நாம் எதையும் மறைக்க முடியாது...


பொதுக் காலம் 3ஆம் வாரம்

30.01.2025 - வியாழக் கிழமை 

படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்" - எபிரேயர் 4:13

இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய சுயத்தை மறைக்க விரும்புகின்றார்கள். நான் யார் என்பதை மற்றவர்கள் அடையாளம் கண்டுவிட்டால் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற கவலை இன்று நம்மில் பலருக்கு உண்டு. 

நான் நானாகவே இருப்பது எனக்கு திருப்தி அளிப்பதில்லை. நான் மற்றவரைப் போல என்னை காட்டிக் கொள்வது தான் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

நிறைவற்ற மனநிலை, நிலையில்லாத உலகம், தேவையற்ற முன்மாதிரிகள், சவால் நிறைந்த வாழ்க்கை முறை இவைகள் தான் நமக்குள்ளும் நமக்கு முன்னாலும் இருக்கின்றன. 

எல்லோர் வாழ்க்கையிலும் குறை என்னும் இருள் இருக்கத்தான் செய்கிறது. அந்த குறை என்னும் இருளை நீக்க நிறை எனும் ஒளி ஏற்றப்பட வேண்டும்.

அந்த ஒளியை யார் ஏற்றுவார்? 

நாம் ஒத்துழைப்பு நல்காத வரை அந்த ஒளியை யாராலும் ஏற்ற முடியாது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:21-25) வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை;  வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை என்று இயேசு மக்கள் கூட்டத்தை பார்த்து சொல்கிறார். 

ஒளி ஏற்றப்பட்டது என்றால் அது மற்றொருவருக்கு பயன்படும் வகையில் வைக்கப்பட வேண்டும். (மறைவான பகுதியில் வைக்கப்பட்டாலும் கூட அந்த ஒளி அதன் இடத்தை காட்டிக் கொடுத்து விடும்). ஒளியை ஏற்றி மறைவான பகுதியில் வைத்தால் அந்த ஒளியின் முழு பயன் என்ன?

அதேபோலத்தான் நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படாத வரை (நாம் நம்மை ஏற்றுக் கொள்ளாத வரை) அதனால் ஒரு பயனும் இல்லை. எப்போது எனக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படும்? 

எப்போது நான் எனக்குள் இருப்பதை/என்னை ஏற்றுக்கொள்கிறனோ அப்போதுதான் எனக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்படும்.

சிலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், என்னைப் பற்றி நானே முழுவதும் அறியாத நிலையில், யார் என்னை பற்றி அறிந்து கொள்ள முடியும்? என்று...

நம்மைப் பற்றி ஒருவேளை நாம் முழுவதும் அறியாமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு செயலும் நம்மை யார் என்று காட்டிக் கொடுத்து விடும்.

நம்மிடம் இருக்கும் ஆற்றலை நாம் சரிவர பயன்படுத்தவில்லை என்றால் இருக்கும் ஆற்றலும் இல்லாமல் போய்விடும். (உள்ளவருக்கு கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும் - லூக்கா 8:18)

எதுவும் யாருக்கும் மறைவாய் இல்லை, எதையும் நாம் மறைக்கவும் முடியாது. 

வெளிப்படுத்த வேண்டிய தளங்களில் நம்மை வெளிப்படுத்துவோம். நம் ஆற்றலின் வழியாக மற்றவர்கள் ஆற்றல் பெற உதவுவோம்...

விதைகள் உறங்குவதில்லை...


பொதுக் காலம் 3ஆம் வாரம்

29.01.2025 - புதன் கிழமை 

"இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்" - யாக்கோபு 1:22

விதைகள் விதைப்பதன் நோக்கம் வீணாக போவதற்கு அல்ல. ஆனால் விதைகள் மடிந்தாலும் பலன் தான் விதை வளர்ந்தாலும் பலன் தான். மடிந்தால் உரமாக, வளர்ந்தால் மரமாக.

இன்று விதைகள் மண்ணுக்குள் விதைக்கப்பட்டாலும் அவை பலன் தர முடியாமல் போகின்றன. காரணம் விதைக்கும் மண்ணுக்கும் இடையேயான தொடர்பை பாலீதின் பைத் துண்டித்து விடுகிறது. 

ஒரு சிறிய பொருள் பெரிய செயல் நடைபெறுவதற்கு தடையாக இருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:1-20) விதைப்பவர் உவமையும் அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு வகை நிலங்கள் நான்கு வகையான பலன்களை குறிக்கிறது. 

வழியோரம் விழுந்த விதைகள் பறவைகளால் விழுங்கப்படுகின்றன(பறவைகளுக்கு பலன்), மண் ஆழம் இல்லா பகுதியில் விழுந்த விதைகள் கதிரவன் மேலே எழ வேர் இல்லாமையால் கருகி போயின (முளைத்தது ஆனால் யாருக்கும் பலன் இல்லாமல் போனது), முட்செடிகள் நடுவே விழுந்தவை வளர்ந்தன ஆனால் பலன் கொடுக்கவில்லை.

நல்ல நிலத்தில் விழுந்தவை மட்டும் தான் வளர்ந்து பலன் கொடுத்தன. சில 30, 60, 100 மடங்காக விளைச்சலை கொடுத்தன.

இந்த விதையை இறைவார்த்தையோடு ஒப்பிடுகிறார் இயேசு. இறைவார்த்தையை கேட்பவர்களை பற்றியும் அவர்களின் மனநிலையும் பற்றியும் விவரிக்கிறார் இயேசு. இறைவார்த்தையை கேட்கிறவர்கள், இறைவார்த்தையில் நிலைத்துநில்லாதவர்கள், பயன் அளிக்காதவர்கள், இறைவார்த்தையை கேட்டு பயன் அளிப்பவர்கள்.

நம்மில் விதைக்கப்படுகின்ற இறைவார்த்தை என்னும் விதைகளின் நிலை என்ன? நமக்குள் விழுந்தது எழுந்து பலன் கொடுக்கிறதா? அல்லது இறைவார்த்தையை கேட்கிறார்களாக மட்டும் இருந்து நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோமா?

இறைவார்த்தை ஒரு போதும் வீணாக போகாது. அது பயன்படுத்தப்பட்டாலும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அது ஒளி வீசிக் கொண்டு தான் இருக்கும்.

இன்று நமக்கும் இறைவார்த்தைக்கும் இடையேயான தொடர்பை உலக காரியங்கள் துண்டித்து விடுகின்றன. கேட்க முடியாதவாறு, செயல்பட முடியாதவாறு நமக்குள் களைகள் முளைத்தெழுகின்றன.

களைகள் களையப்படட்டும், இறைவார்த்தை என்னும் விதை நம்மை தட்டி எழுப்பட்டும்.

தாயை (அவ)மதிக்கும் நபர்களா நாம்?


பொதுக் காலம் 3ஆம் வாரம்

28.01.2025 - செவ்வாய்க் கிழமை 

"தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை; தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை" - சீராக்கின் ஞானம் 3:11

எந்த உயிரை எடுத்துக் கொண்டாலும் தாய்க்கு அங்கு முக்கியத்துவம் உண்டு. உண்மையான பாசம் தாயிடமும் தந்தையிடமும் இருந்து தான் தொடங்குகிறது. தந்தை கூட அதட்டி தான் அன்பை காட்டுவார். தாய் மட்டும் தான் அணைத்து (மடிக்குள் அணைத்து) அன்பை காட்டுவார். 

தனக்கு இல்லையென்றாலும் தன் பிள்ளைகளை ஒருபோதும் பட்டினி இருக்க விடமாட்டார். தனக்கு போக தான் மற்றவர்களுக்கு என்று வாழும் உலகில் தன் பிள்ளைகளுக்கு போக தான் தனக்கு என்று வாழ்வார்.

தாயை இழந்த உறவுகளுக்கு மட்டும் தான் தாய் இல்லாமல் வாழ்வது நரக வேதனை என்று.

ஆனால் இவ்வளவு செய்தும் நன்றிக் கெட்ட உள்ளங்கள் இருக்கத் தான் செய்கின்றன. தாய் ஒரு வீட்டிலும் தந்தை ஒரு வீட்டிலும், மாதத்திற்கு ஒருமுறை அண்ணன் தம்பி என்று பார்த்துக் கொள்வதும், இல்லையென்றால் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், பிச்சை எடுக்க அனுப்புவதும், அடித்து தூரத்துவதும் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

அண்மையில் யூடியூப்-இல் பார்த்த நிகழ்வு, 6 பிள்ளைகளை பெற்ற தாய் அனாதை மடத்திலே வாழ்ந்து இறந்து விடுகிறார். தாயின் அடக்க சடங்கின் போது பிள்ளைகள் கதறி அழுகிறார்கள். இருக்கும் போது கண்டுக் கொள்ளாமல் இறந்த ஆயிரம் செய்தும் என்ன பயன்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:31-35) இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரோ, சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே" என்று பதில் கொடுக்கிறார்.

பலரின் பார்வை இப்படி அமைகிறது, இயேசுவே தனது தாயை அவமதித்து விட்டார்.

மத்தேயு நற்செய்தி 19:19இல், "தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறியவர் எப்படி தன் தாய் அவமதித்திருப்பார். 

மாற்கு நற்செய்தி 7:10இல், "உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! என்று மோசேயின் சட்டத்தை தூக்கிப் பிடித்தவர் எப்படி தாய் இழிவுப்படுத்தியிருப்பார். 

தன் தாயும் இறைவார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தவர் என்பதை உரக்க சொல்லியிருக்கிறார்.

கபிரியேல் தூதர் வார்த்தையை கேட்டது முதல் கல்வாரி மலை/கல்லறை வரை உடன் இருந்தது இறைவார்த்தைக்கு கீழ்படிந்ததனாலே!

நம் தாய்மாரை நாம் மதிக்கும் போதெல்லாம் நாம் இறைவனுக்கு கீழ்ப்படிகிறோம். 

தாய் தந்தையை மதிக்கும் பிள்ளைகள் செல்வம் தேடிக் கொள்கிறார்கள்.

நாம் சோதனைக்கு உட்பட தயாரா?

பொதுக் காலம் 3ஆம் வாரம்

27.01.2025 - திங்கட் கிழமை 

சகோதர சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்” - கலாத்தியர் 6:1

எதிர்பாராத நேரத்தில் பலத்த காற்று வீசுவது போல, சோதனை திடீரென்று நம்மை தாக்கும். எல்லாவகையான சோதனையும் தொடக்கத்தில் மகிழ்ச்சி கொடுப்பது போல தான் இருக்கும். இன்று நல்லவர்கள் போல உடன் இருந்து சோதிப்பவர்கள் அதிக பேர் இருக்கிறார்கள். (நாமும் நிச்சயம் மற்றவர்களை சோதித்து இருப்போம்).

திருத்தூதர் பேதுரு தன்னுடைய முதல் திருமுகம் 5:8இல் சொல்வார், “அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது”. 

சோதனைகள் பல வகைகளில் வருகிறது. சோதனைகளை எதிர்த்து நிற்பதற்கான ஆற்றல் இறைவனிடமிருந்து வருகிறது. நாம் ஆற்றலை தவிர்த்துவிட்டு சோதனைகளை தேக்கி வைத்துக் கொள்கிறோம். தேக்கநிலையில் இருக்கும் சோதனைகள் நம்மை அழுத்திக்கொண்டே இருக்கிறது. புனித தாமஸ் மூர் சொல்வார், ‘உங்களுடைய மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள், இல்லையென்றால் அலகை உங்கள் மனதை தீயவற்றால் அல்லது சோதனைகளால் நிரப்புவான்’.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:22-30) எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், “இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது” என்றும் “பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். 

சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது என்று இயேசு சொல்வது அவர்களுக்குள் நுழையவில்லை. 

அவரோடு இராதவர்கள் அவருக்கு எதிராக இருக்கிறார்கள். காரணம், செவிசாய்க்கும் மனநிலை இல்லையென்பதால் இயேசு சொல்வது சரியாக இருந்தும் அது அவர்கள் காதுக்குள் செல்லவில்லை. நாம் இயேசுவின் வார்த்தைக்கு செவிசாய்த்தால், நாம் அவரோடு இருக்கிறோம். 

இன்று நம் பணிகளை அங்கீகரிக்காமல், நம்மை பற்றி அவதூறு பரப்பி நம்மை சோதனைக்கு உள்ளாக்க காத்திருக்கும் கூட்டத்தை நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவர்கள் விரித்த வலையில் விழாமல் இருப்பதே அவர்களை எதிர்த்து நிற்பதற்கு சமம். 

சில சோதனைகள் நம்மை திடப்படுத்தவும் அடுத்த கடினமான பணிகளை முன்னெடுத்து சிறப்பாக செய்யவும் ஆற்றல் தருகின்றது.

சோதனையை வேண்டாம் என்று சொல்லவோ/தவிர்க்கவோ முடியாது. ஆனால் அந்த சோதனையிலே மூழ்கி விடாமல் இருக்க முடியும். அது நம் கையில் தான் இருக்கிறது.

சாதனைக்கு முன் சோதனை...


பொதுக் காலம் 3ஆம் வாரம்

26.01.2025 - ஞாயிற்றுக் கிழமை 

தன்னுடைய பணிவாழ்வை தொடங்குவதற்கு முன் இயேசு பாலைநிலத்தில் தவம் (அ) தியானம் செய்கிறார். அந்த தியானத்தில் அவர் சாத்தானால் அதிகமாக சோதிக்கப்படுகிறார். இதே நிகழ்வு புனித மத்தேயு நற்செய்தியிலும்(4:1-11) புனித லூக்கா நற்செய்தியிலும்(4:1-13) விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைகள் எல்லாம் அவருடைய தெய்வீகத் தன்மைக்கும் மனிதத் தன்மைக்கும் இடையேயான பரிசோதனை. சாத்தான் சொல்வதை செய்தால் சாத்தான் வெற்றி பெறுவான், இயேசு மனிதத் தன்மையில் பலவீனப்பட்டு போனார் என்றாகிவிடும். சாத்தான் சொல்கிற சவால்களில் பங்கெடுக்கவில்லையென்றால் இயேசுவின் தெய்வீகத் தன்மை நிரூபிக்கப்படாது.

இங்கு இயேசுவின் நோக்கம் சாத்தானுக்கு செவிமடுப்பதல்ல, சோதனைகளை முறியடிப்பது தான். அவர் சோதனைகளை முறியடிக்க பயன்படுத்திய கருவி இறைவார்த்தை. சாத்தானும் இறைவார்த்தையை மேற்கோள் காட்டியது. (“உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்” திபா 91:11). இயேசு நிலை தடுமாறவில்லை.

இயேசுவுக்கே சோதனை என்றால் நாம் எம்மாத்திரம். இங்கு சோதிக்கிறவர்களும் அதிகம்; சோதனைகளும் அதிகம். 

சோதனையோடு இயேசு நின்று விடவில்லை. தனது பணி வாழ்வை தொடங்குகிறார். "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்." என்ற வார்த்தைகள் இயேசு வழியாக நிறைவேற காத்திருக்கின்றன என்பதை இப்பகுதி விளக்குகிறது.

நல்லது செய்தால் விட்டு வைக்க மாட்டார்கள் என்பது இயேசுவின் காலத்திற்கு முன்பே இருந்து தொடர்கிற ஒரு காரியம். தீமை செய்தால் மதிப்பார்கள்/பயப்படுவார்கள். நல்லது செய்தால் எதிர்ப்பார்கள்/ ஏளனம் செய்வார்கள்.

இங்கு உலகிற்கு பயப்பட ஆரம்பித்தால் பயந்து முடங்கி தான் போக வேண்டும். இறை அச்சம் இருந்தால் நன்மை செய்ய தவற மாட்டோம்.

இயேசு சோதனைகளை கடந்து வந்து சாதனை படைத்து நமக்கெல்லாம் முன்மாதிரியாக இருக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (நெகேமியா 8:2-4, 5-6, 8-10) "இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்" என்று ஆளுநர் நெகேமியா திருநூல் வல்லுநர் எஸ்ரா சூழ நின்ற மக்களுக்கு எடுத்துரைத்தனர். கடவுளின் திருச்சட்டத்தை வாசிக்க கேட்ட மக்கள் அழுது புலம்பினார்கள். இறைவார்த்தை உள்ளதை நொருக்குகிறது. பாவங்களுக்கு கழுவாய் தேடச் சொல்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1கொரிந்தியர் 12:12-30) உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார் என்பது தெளிவுப்படுத்துகிறது. 

உடலில் பிரிவுகள் இருந்தாலும் அங்கு பிரிவினை இல்லை. நம்மில் வேற்றுமைகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றே.

இறைவனின் படைப்பில் குறை இல்லை, மனிதரின் பார்வையில் தான் குறைப்பாடு உள்ளது. நல்லதை செய்யும் போது சோதனை வருவது எதார்த்தம். சோதனைக்கு பயந்தால் சாதனை தூரமாகி விடும்.

நாம் சோதனையை எதிர்த்து நிற்பது எப்போது?

இறைவார்த்தைக்கு செவிமடுப்பது எப்போது?

பிரிவினைகளை களைவது எப்போது?

கேள்விகள் நமக்கு முன் வைக்கப்படட்டும்...

மனமாற்றமே புதிய வாழ்வின் தொடக்கம்...


பொதுக் காலம் 2ஆம் வாரம்

25.01.2025 - சனிக் கிழமை 

திருத்தூதரான புனித பவுலின் மனமாற்ற விழா

"பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்; வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்" - திருப்பாடல்கள் 7:12

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தொடக்கமும் உண்டு முடிவும் உண்டு. எல்லாம் தொடங்கிய நிலையிலே முடிவடைவதில்லை. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மாற்றத்தை பெற்றுக் கொள்கிறோம். 

சிலருக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. சில அடிகள் தான் சிலரின் வாழ்வையே மாற்றுகிறது. 

சில மனிதருக்கு திருமணம் முடிந்த பிறகு வாழ்க்கை தரம் மாறுகிறது, சிலருக்கோ ஏன் திருமணம் முடித்தோம் என்பதே கேள்வியாக இருக்கிறது. 

சிலர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்ததும் நடத்தையில் மாற்றம் ஏற்படுகிறது. திமிர், ஆணவம், அதிகார போக்கு, மற்றவர்களை இழிவாக பார்த்தல் போன்ற மனநிலை உருவாகிறது. 

சில நேரங்களில் மாற்றம் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ இருக்கிறது.

சிலர் சிலரை பார்த்து கேட்கும் கேள்வி. ஏன் இப்படி மாறிட்ட? நீ எப்போ மாறுவ?

இரண்டு கேள்வியிலும் வித்தியாசம் இல்லை. சிலரை எந்த சூழலும், மனிதர்களும் மாற்ற முடியாது. சிலரை சில மனிதர்களின் செயல்பாடு மாற்றிக் கொண்டே இருக்கும். எல்லோருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்வதும் தவறு, மாற்ற வேண்டிய இடங்களில் மாறாமல் இருப்பதும் தவறு.

இன்றைய நாளில் திருத்தூதரான புனித பவுலின் மனமாற்ற விழாவை தாய்த் திருஅவை நினைவுக் கூறுகிறது. 

செல்வமும் செல்வாக்கும் புகழும் பெற்ற குடும்பமாக சவுலின் குடும்பம் தர்சு நகரில் வாழ்ந்து வந்தது. உரோமைக் குடியுரிமையை பெற்றவர்கள். இளமையிலிருந்தே யூதச் சட்டங்களையும் நெறிமுறைகளையும் கற்றுத் தேர்ந்தவர். கமாலியேல் என்னும் யூத ரபியிடம் கல்வி பயின்றவர். பரிசேய சமய பிரிவின் ஆர்வமிக்க உறுப்பினர், யூத மதத்தின் மீதான ஆர்வத்தினால் கிறிஸ்தவர்களை துன்புறுத்த தொடங்கியவர். 

திருத்தொண்டர் ஸ்தேவானை கொல்வதற்கு உடன்பட்டிருந்தவர். திருத்தூதர் பணிகள் நூல் 7:58இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, "நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்".

இவ்வாறாக கிறிஸ்தவர்களை அழிக்க எண்ணியவர் கிறிஸ்துவை அறிவிக்க ஆரம்பித்தார். யூத இனம் என்ற வெறியோடு இருந்தவர், பிற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவித்தார். தலைவர்களோடு கைகோர்த்து மக்களை ஒடுக்கியவர், கிறிஸ்துவுக்காக தலைவர்களை எதிர்த்தார்.

மாற்றம் இயேசுவின் தொடுதலில், இயேசுவின் வார்த்தையினால் மாற்றம் ஏற்பட்டது. 

"சவுலே சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்ற கேள்வியும் "நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்ய வேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்ற வார்த்தைகளும் தான் அவரை திசை மாற்றியது.

இங்கு சவுல் பவுலாக மாறுகிறார், திருத்தூதர்களுள் கடையவனாக மாறுகிறார், கிறிஸ்துவை கொண்டு வர எல்லோருக்கும் எல்லாமுமாக மாறுகிறார். 

இன்று நம்மில் தொடங்கப்பட வேண்டிய மாற்றம் என்ன?

வார்த்தை வாழ்க்கை ஒன்றாக இருக்க வேண்டும் (வாய்ச் சொல் வீரர் தேவையில்லை).

வெளித்தோற்றம் ஏமாற்றும்; உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் (போலியான வாழ்க்கை தேவையில்லை).

நம் வாழ்வு ஏதாவது ஒரு மனிதருக்காவது புதிய வாழ்வு கொடுக்க வேண்டும் (மடிந்து பலன் கொடுக்க வேண்டும்).

நம் பெயரில் மாற்றம் ஏற்படட்டும்; நம் வாழ்வில் எழுச்சி உண்டாகட்டும்.

அழைத்தவரை பற்றிக் கொள்வோம்...

பொதுக் காலம் 2ஆம் வாரம்

24.01.2025 - வெள்ளிக் கிழமை 

"காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை" - எசாயா 1:3

தாயின் அழைப்புக் குரல் குழந்தைக்கு தெரியும், ஆயனின் அழைப்புக் குரல் ஆடுகளுக்கு தெரியும். ஆனால் படைத்தவரின் அழைப்புக் குரல் தான் படைப்புகளுக்கு தெரியவில்லை.

இன்று முக முகமாய் பார்க்காதவர்கள் கூட பழகியவர்களின் அழைப்புகளுக்கு காத்திருக்கிறார்கள். வேறு ஒருவர் அழைத்தால் கூட நமக்கு தெரிந்தவர்கள் தான் என்று அழைப்பு வரும் இடம் நோக்கி கால்கள் ஓடத் தான் செய்கிறது.

சாதாரண மனிதர்களின் அழைப்புக்கே இத்தகைய ஆற்றல் என்றால் படைத்தவரின் அழைப்புக்கு எத்துனை ஆற்றல்/சக்தி இருக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3: 13-19) இயேசு பன்னிரு சீடர்களை அழைக்கிறார். தம்மோடு இருக்க, நற்செய்தியை பறைசாற்ற அனுப்பப்பட, பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க அவர் அவர்களை தேர்ந்துக் கொண்டார்.

அழைத்தவரின் குரலுக்கு அழைக்கப்பட்டவர்கள் செவிமடுத்தார்கள். உடன் நடந்தார்கள், உடனிருந்தார்கள், உறவாடினார்கள், நற்செய்தியை அறிவித்தார்கள்.

நம்மையும் இறைவன் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். நாம் ஆயனின் குரலுக்கு செவிசாய்கிறோமா? அல்லது உலகின் குரலுக்கு செவிசாய்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

சீடர்கள் அனைவரும் ஒரே பின்னணி/ குடும்ப சூழலை சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் செவிமடுத்த பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக தகுதியற்ற நிலையை உணர்ந்தார்கள், தகுதியை பெற்றார்கள்.

நாம் நம் அருகில் இருக்கும் நபர்களின் அழைப்புக்கு பதிலிருப்பு செய்வோம். ஏனெனில் தேவையில் இருப்போரின் உடனிருக்கும் அனைவரும் இறைப்பணியை தான் செய்கிறார்கள்.

சிறிய சிறிய வார்த்தைகளால் எளிய உள்ளங்களை தேற்றுவோம். பெற்றுக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழ முயல்வோம்...

தேவைக்காக அல்ல நல்வாழ்வுக்காக...

"வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்" - திருப்பாடல்கள் 127:2

பொதுக் காலம் 2ஆம் வாரம்

23.01.2025 - வியாழக் கிழமை 

தேவையென்றதும் தான் உறவுகள் தேவைப்படுகிறது. தேவை முடிந்ததும் உறவுகள் கூட உபத்திரம் தான். யார் தேவைக்காக நம்மை பயன்படுத்தவில்லையோ அவர் தான் உண்மையான உறவு கொண்டவர்/உறவினர்.

 ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நாம் ஏதாவது ஒரு தேவைக்காக தான் யாரையாவது சார்ந்து இருக்கிறோம். ஏனென்றால் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். இல்லையென்றால் வனத்திற்கு சென்று தவம் தான் செய்ய வேண்டும்.

தேவைக்காக சார்ந்து இருப்பது தவறல்ல தேவை முடிந்ததும் கழட்டி விடுவது தான் தவறு. 

காரியம் முடிந்ததும் பல கதவுகள் மூடப்படுகின்றன. பயன் அடைந்தவர்கள் பகை உணர்வோடு செயல்பட ஆரம்பிக்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:7-12) பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்துக் கொண்டிருந்தனர்.

இங்கு ஆதாயம் தேடிய கூட்டத்தை நாம் கண்டுக் கொள்ள முடிகிறது. ஆனால் இக்கூட்டம் காரியம் முடிந்ததும் கடந்து போய்விடும். 

உடன் இருக்க எண்ணுபவர்கள் உடனடி தீர்வை தேட மாட்டார்கள். நம் வேலை முடிந்ததும் நாம் சென்று விடலாம் என்பது தான் அவர்களின் எண்ணமாகவும் இருந்தது. 

தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, "இறைமகன் நீரே" என்று கத்தின.

ஆனால் இயேசுவின் நோக்கம் பெயர் எடுப்பது அல்ல. இறையாட்சியை விதைப்பது, இறையாட்சியின் விளைநிலங்களாக மாற்றுவது தான்.

நல்வாழ்வை பெற தேவைக்காக மட்டும் யாரையும் நாடாமல் இருப்போம். தேவை முடிந்ததும் கடந்து செல்லாமல் இருப்போம். 

ஒவ்வொரு மனிதருக்கும் தேவை உண்டு. ஒரு தேவை நிறைவடைந்த பின்னர் மற்றொரு தேவை வரும். மனிதரின் தேவைக்கு நிறைவு என்பது இல்லை. நம் மூச்சு உள்ளவரை நம் தேவைகள் தொடரும்.

நிறைவுள்ள மனிதம் படைக்க இறைவழியில் நடப்போம். நல்வாழ்வை பகிர்வோம்.

உயிர் விலைமதிப்பில்லாதது!

பொதுக் காலம் 2ஆம் வாரம்

22.01.2025 - புதன் கிழமை

"எளிய உணவே ஏழைகளுக்கு உயிர்; அதை அவர்களிடமிருந்து பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள்" - சீராக்கின் ஞானம் 34:21

ஒரு பக்கம் உயிரை காக்க குடும்பத்தினரும் மருத்துவர்களும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் பழிவாங்கவதற்காக, உயிரை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரே உயிர் தான் ஆனால் அது உணரப்படும் நபர்களை பொறுத்து மாறுபடுகிறது.

உயிரை சர்வ சாதாரணமாக சாய்த்து விடுகிறார்கள் உயிரின் மதிப்பை உணராத மிருகங்கள். இன்றைய காலக் கட்டத்தில் உயிர் விலை பேசப்படுகிறது, கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன, மனித கடத்தல், பாலியல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 

உயிரை விட பணமோ/சட்டமோ முக்கியமல்ல. ஒருவரின் அவசர தேவையில் அவரின் தேவை அறிந்தும் உதவாமல் இருப்பது தவறு தான். நன்மை செய்ய கூடுமாயின் நன்மை செய்ய வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்று 3:1-6) தொழுகைக் கூடத்தில் இருந்த சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் கை சூம்பியவரை குணப்படுத்துவாரா? என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். 

அவர்களை வாயடைக்க இயேசு பேசிய வார்த்தைகள், ஓய்வு நாளில் நன்மை செய்வதா தீமை செய்வதா? உயிரைக் காப்பதா அழிப்பதா? எது முறை என்று கேட்டார்.

சிலர் சட்டங்களை நுணுக்கமாக கடைப்பிடிப்பதாக எண்ணி கடவுளின் அன்பிலிருந்து விலகிச் செல்கிறார்கள். கடவுளின் சாயலும் உருவும் இருக்கும் அயலானை அன்பு செய்யாமல், அவனுக்கு நன்மை செய்யாமல் கடவுளை நெருங்கி விட முடியாது.

உயிரை படைத்தவர் அதை பாதுகாக்கும் பொறுப்பை நம்மிடம் கொடுத்திருக்கிறார். உயிரை அழிக்க நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. அது நமது உயிராகவோ அடுத்தவர் உயிராகவோ இருக்கலாம். உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.

உயிரை அளித்தவர் உயிரை எடுக்கும் உரிமையை பெற்றிருக்கிறார். நன்மை செய்ய தவறும் ஒவ்வொரு நிமிடமும் நம்மால் ஒரு உயிர் போய்க் கொண்டிருக்கிறது.

கெடுதல் செய்வதும், நன்மை செய்யாமல் இருப்பதும் ஒன்றே.

யாக்கோபு எழுதிய திருமுகம் 4:17 இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, " நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்."

குறை காணும் மந்த புத்தி வேண்டாமே!

பொதுக் காலம் 2ஆம் வாரம்

21.01.2025 - செவ்வாய்க் கிழமை 

"அவர் ஆசி வழங்கினார்; அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்; அவர்களின் கால்நடைகளைக் குறைந்துபோக விடவில்லை" - திருப்பாடல்கள் 107:38

குறை நிறை வாழ்வின் இரு பக்கங்கள். எல்லா நிறையுள்ள மனிதர்களிடமும் குறை இருக்கும். எல்லா குறையுள்ள மனிதர்களிடமும் நிறை இருக்கும். தவறுகளை சுட்டிக் காட்டுவது வேறு, தவறுகளை மட்டுமே காண்பது வேறு.

இரக்கமுள்ள மனிதர்கள் இறுதிவரை நேர்மறை மனதோடும் நேரிய உள்ளத்தோடும் வாழ்வார்கள். தன் கடமையை சரிவர செய்வார்கள், மற்றவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற துணை நிற்பார்கள்.

பொது இடங்களில் மற்றவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி மனிதர்கள் தங்களை சுய ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 2:23-28) இயேசுவின் சீடர்களிடம் குறை காண்கிறது பரிசேயக் கூட்டம். ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்தது குற்றம் ஆனது. ஓய்வு நாள் தீட்டுப்பட்டதாக அவர்கள் கருதினார்கள்.  பிறரை எந்த அளவையால் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்பதை அவர்கள் மறந்துப் போனார்கள்.

இயேசுவின் பதில் ஓய்வு நாளைப் பற்றிய தெளிவைக் கொடுக்கிறது. "மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்ற பதிலை தருகிறார்.

சட்டங்கள் முக்கியம் தான், ஆனால் சட்டத்தால் மற்றவர்களை முடக்கக் கூடாது.

சில வேளைகளில் சட்டத்தை தூக்கி பிடித்து சாமானிய மக்களை நசுக்கிவிடுகிறார்கள். தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். 

சட்டம் ஓர் இருட்டறை அல்ல; சட்டத்தை நாம் தான் இருட்டறை ஆக்குகிறோம். சட்டம் எல்லோருக்கும் சமமானால் இங்கு சட்டம் சரியே. வலியவருக்கும் பணம் படைத்தவர்களுக்கும் இங்கு சட்டம் வளைந்து போகிறது. எளியவரிடம் சட்டம் (அதிகாரம் செலுத்துவோர்) கரடு முரடாக நிற்கிறது (நிற்கிறார்கள்).

குறை காண்பதற்கு முன் சட்டங்களை சரியாக பயன்படுத்த வேண்டும், சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தவர் மீது குற்றம் காண்பதற்கு முன் நம் பார்வை சரியாகட்டும். மற்றவர்கள் உணர்விற்கு மதிப்பளிப்போம்... மனித மாண்பை தூக்கிப் பிடிப்போம்.

பெருமை பாராட்டும் நோன்பு தேவை இல்லை

பொதுக்காலம் 2ஆம் வாரம் 

20.01.2025 - திங்கட் கிழமை

மகிழ்ச்சியான நேரம் மகிழ்ச்சியாக இருப்பதற்கே. யாரும் மகிழ்ச்சியான தருணத்தில் அழுகையோடும் அங்கலாய்ப்போடும் இருப்பதில்லை. அதேபோல கவலையோடு கண்ணீரோடு இருக்கக்கூடிய வேளையிலே யாரும் சிரிப்பை வெளிக் காட்டுவதில்லை. 

இரண்டும் வெவ்வேறு துருவங்கள். ஆனால் இரண்டையும் இணைக்க கூடியது ஆனந்தக் கண்ணீர். இது எல்லா வேளையிலும் வந்து விடாது, இதுவும் ஒரு வகையில் மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்.

நான் துக்கப்படும்போது மற்றவர்களும் துக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம். நான் செய்வதையெல்லாம் மற்றவரும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் நியாயமற்றதே!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்று 2:18-22) யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களும் நோன்பு இருக்க உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை? என்ற கேள்வியை சிலர் இயேசுவிடம் கேட்கிறார்கள்.

நோன்பு என்பது ஒருவகையான ஒறுத்தல். நோன்பு இருப்பதன் வழியாக கடவுளுக்கு நமக்கும் இடையேயான நெருக்கம் அதிகமாகிறது. ஆனால் அந்த நோன்பு வீண் பெருமைக்காக செய்யப்பட்டது என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை.

இயேசு கொடுக்கக்கூடிய பதில், 'மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்க முடியாது' என்பது தான். 

மகிழ்ச்சியான தருணத்தில் அழ வேண்டிய அவசியம் இல்லை. காலம் வரும் அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள் என்று அவர் தெளிவைக் கொடுக்கிறார். 

என்னைப்போல மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானது அல்ல, மாறாக இதை செய்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைப்பது சாலச் சிறந்தது. 

பழைய தோற்பை புதிய தோற்பையோடு இணையாது; ஒட்டு போட்ட தோற்பையோடு புதிய மது நிலைக்காது.

செய்ய வேண்டிய நேரங்களில் செய்ய வேண்டியதை செய்வதே சரியானது. அதை விட்டுவிட்டு ஓரக் கண்களால் மற்றவர்களையும் அவர்கள் செய்யும் காரியங்களையும் பார்த்து விட்டு விமர்சனம் செய்வது இழிவானது. 

நாம் செய்யக்கூடிய ஒறுத்தல்கள், நோன்பு, இறைவேண்டல்கள் தற்பெருமைக்காக செய்யப்பட்டது என்றால் அவை செய்யப்படாமலே இருந்திருக்கலாம்.

சில வேளைகளில் நாம் செய்யக்கூடிய வெளி அடையாளங்களால் பயன்படாத பழைய தோற்பைகளாகவே நாம் இருக்கின்றோம். புதிய மது என்னும் புதிய சிந்தனைகள் அதில் ஊற்றப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது. 

அர்த்தம் இழந்து, பெருமைக்காக செய்யப்படும் அனைத்து செயல்களும் தவறானதே...

பணி வாழ்வின் தொடக்கம் - ஆச்சரியங்களோடு


பொதுக் காலம் 2ஆம் வாரம்

19.01.2025 - ஞாயிற்றுக் கிழமை 

ஆச்சரியங்கள் அதிசயங்கள் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. எல்லாருடைய வாழ்க்கையிலும் அதிசயங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆழமாக தேடுவோர் கண்டுக் கொள்கின்றனர். மேலோட்டமாக தேடுவோர் வாழ்க்கைக்கு வெளியே ஆச்சரியங்களை தேடுகின்றனர்.

இயற்கைக்குள் பல புதுமைகள் மறைந்தும் வெளிப்பட்டும் கொண்டிருக்கின்றன. மண்ணுக்குள் கடலுக்குள் என்று இயற்கையின் ஆச்சரியங்கள் நீண்டுக் கொண்டே போகின்றன.

யார் வெளியே ஆச்சரியங்களை தேடுவார்? கடவுளை நம்பாதவர், தன்னை அறியாதவர், தன் நிலை உணராதவர்.

குழந்தை கருவில் உருவாகி, உயிராய் வெளிவருவது ஆச்சரியமே. மனிதன் இரவில் கண்ணை மூடி தூங்கி, காலையில் கண்ணை திறந்து எழுவது ஓர் ஆச்சரியமே. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வது ஆச்சரியமே. எல்லாம் ஓய்ந்த பின் உயிர் நம் உடலில் இருந்து பிரிகிறது, ஆனால் அது எங்கிருந்து எங்கு செல்கிறது என்பது ஆச்சரியமே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 2:1-12) இயேசு தனது பணி வாழ்வை தொடங்கும் முன் புதுமை செய்கிறார். தண்ணீர் திராட்சை இரசமாய் மாறுகிறது. அதுவும் நல்ல திராட்சை இரசம்.

விந்தையிலும் விந்தை இது. சாதாரண தண்ணீர் சுவையுள்ள ரசமாய் மாறுகிறது. இயேசு முன் கொண்டு வரப்படுபவை  எல்லாமே (மனிதர்களும்) புதியதாய் மாறும், புதுமையாய் மாறும்.

புதுமை நடைபெற காரணம் ஒரு புதுமைப்பெண். அவர் பெயர் மரியா. எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்க இவர் மட்டும் பிறர் தேவையை கண்டு உணர்கிறார், பரிந்துரைக்கிறார். 

நல்லது செய்பவர்கள் ஒருவகையினர், மற்றவர்களை நல்லது செய்ய வைப்பவர்கள் மற்றொரு வகையினர்.

பின்னாளில் இயேசு செய்த புதுமைகள் எல்லாம் நம்பிக்கை கொண்டதால் நடந்தது. இங்கு நடந்த புதுமையோ நம்பிக்கையோடு கூடிய பரிந்துரைத்தலினால் நடந்தது.

இன்றைய நற்செய்தி நமக்கு சுட்டிக் காட்டும் பாடம் இரண்டு, 1. நாம் இயேசுவின் முன்னால் கொண்டுவரப்பட வேண்டும் 2. நாம் நல்லது செய்ய வேண்டும்/நல்லது நடக்க காரணமாய் இருக்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 62:1-5) இறைவாக்கினர் எசாயா வழியாக புது வாழ்வு மொழியப்படுகிறது. புதியதொரு பெயரால் அழைக்கப்படுவாய், ஆண்டவரின் கையில் அழகிய மணிமுடியாய் திகழ்வாய், உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் திகழ்வாய், உன்னை எழுப்பியவர் உன்னை மணந்துக் கொள்வார் என்று புதிய ஆறுதல் மொழிகள் கூறப்படுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரிந்தியர் 12:4-11) தூய ஆவியார் வழியாக பொழியப்படும் அருள் கொடைகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல் தூய ஆவியார் வழியாக பொழியப்படுகின்றன.

நாம் பெற்றுக் கொண்ட வாழ்வில் கிடைக்கும் அதிசயங்களை கண்டு மகிழ்ச்சி அடைவோம். நம்மில் இறை சாயல் இருப்பதை கண்டு, அவர் நமக்குள் இருந்து செயலாற்றுவதை உணர்ந்து நாமே ஆச்சரியங்களின் வெளிப்பாடு ஆவோம்.

நாம் திராட்சை இரசமாய் மாற, நம்மை முழுவதும் கையளிப்போம்.

யார் நேர்மையாளர்?

 

பொதுக்காலம் 1ஆம் வாரம்

18.01.2025 - சனிக் கிழமை

அவரவருக்கு அவரவர் நேர்மையாளர். அவரவருக்கு அவரவர் நல்லவர். நல்லவர்கள் தங்களை நல்லவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. நல்லவர்களுக்கு தீயோர் தரும் முத்திரை தேவையில்லை.

யார் என்ன சொன்னாலும் யார் எதை செய்தாலும் நம் மனசான்றுக்கு விரோதமான செயலை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது. நம் மனசான்றே நம்மை நல்வழிப்படுத்தக்கூடியது. ஒவ்வொரு மனிதரின் அசைவுக்கும் நாம் அசைந்து போனால் நாம் நாமாக இருக்க முடியாது.

யார் எதை சொன்னாலும் கேட்டு கொள்ளக்கூடாது என்பதல்ல இதன் கருத்து. மாறாக, செவிமடுத்து சிந்தித்து, சரியாக இருந்தால் அதன் வழி நடக்கலாம்.

இங்கு நல்லவர்கள் போல வேடம் போடும் மனிதர்கள் அதிகம். நல்லது செய்யாமல் நல்லவராக நடிப்பது பயனற்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 2:13-17) சமூகத்தில் பாவியாக கருதப்பட்ட லேவியை தேடிச் செல்கிறார். வரிதண்டும் பணி யூதச் சமூகத்தில் இழிவாக கருதப்பட்டது. உரோமையரை சார்ந்து அவர்களுக்கு பணி செய்து யூதர்களிடம் வரி வசூலிக்கும் நபர்கள் பாவிகளாக தான் கருதப்பட்டார்கள்.

இயேசு பாவிகளாக கருதப்பட்டவர்களை தேடிச் சென்றார். இயேசுவின் நோக்கம் அநியாயம் ஒருபோதும் ஆட்சி செய்யக்கூடாது என்பது தான். “தீமையை நன்மையால் வெல்லுங்கள்” என்பதற்கு ஏற்ப யூதச் சமூகத்தை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஆணவத்தை அதிகாரத்தை இயேசு எதிர்த்தார். விபசாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை கல்லால் எறிந்துக் கொல்ல ஒரு கூட்டமே திரண்டு நின்றது. அவர்கள் பாவங்கள் மறைவாய் இருந்ததால் அவர்கள் வாய்க்கூசாமல் மற்றவர்களை பாவி என்று அழைத்தனர். 

இயேசுவின் பதிலோ, உங்களில் பாவம் செய்யாதவர்கள் இப்பெண்மேல் முதல் கல் எறியட்டும் என்பதே. பாவம் செய்யாமல் இருந்திருந்தால் அவர்கள் நின்றிருப்பார்கள், கல் எறிந்திரப்பார்கள். ஆனால் ஒருவரையும் காணோமே.

அதே போல தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயக் கூட்டம், இயேசுவை பார்த்து இவர் பாவிகளோடும் வரிதண்டுவோர்களோடும் சேர்ந்து உண்பதேன்? என்று கேட்டனர். 

இவர்கள் தங்களை நேர்மையாளர்களாக கருதினார்கள். ஆனால் உள்ளே இருந்ததோ குப்பை தான். தன்னை மதிக்கிறவன் அடுத்தவனையும் மதிக்க வேண்டும். நேர்மைத்தனம் என்பது உள்ளிருந்து வெளியே வர வேண்டும்.

நோயுற்றவருக்கு மருத்துவம் தேவை என்பது போல பாவிகளை நான் தேடி வந்தேன் என்று இயேசு திட்டவட்டமாக தெளிவுப்படுத்திவிட்டார்.

நாம் நேர்மையாளர்களா? நம் செயலிலும் சொல்லிலும் நேர்மை வெளிப்படுகிறதா? கேள்விகளை நமக்குள் கேட்டுப் பார்ப்போம்.

நால்வரின் நம்பிக்கையும் இயேசுவின் மன்னிப்பும்

 


பொதுக் காலம் 1ஆம் வாரம்

17.01.2025 – வெள்ளிக் கிழமை

“நாங்கள் பாவம் செய்தாலும் உம்முடையவர்களே| ஏனெனில் உமது ஆற்றலை அறிவோம். நாங்கள் இனிப் பாவம் செய்யமாட்டோம்| ஏனெனில் உம்முடையவர்களாக நீர் எங்களை எண்ணுவதை நாங்கள் அறிவோம்.” சாலமோனின் ஞான நூல் 15:2

நம்பிக்கை இழந்து நோய்வாய்ப்பட்டு மாண்பிழந்து கிடக்கும் மனிதர்களை இந்த சமூகத்தினர் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அவர்களால் எங்த பயனும் இல்லை என்று வருகிற போது கவனித்து எண்ண ஆக போகிறது என்ற எண்ணம் தான் கண்டும் காணாமல் போக செய்கிறது.

எழுந்து நடமாடக்கூடிய வேளையிலேயே, இந்த உலகம் பணமில்லாதவர்களை மதிப்பதில்லை. படுத்தப் படுக்கையாய் கிடந்தால், நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டால் இந்த உலகம் நம்மை விட்டு வைக்குமா என்ன? சிலருக்கு நோயும் சிலருக்கு வறுமையும் வாழ்க்கை மீது வெறுப்பை கொடுத்து விடுகிறது.

நோயும் வறுமையும் சிலரை சாபக்கேடாய் வாட்டி வதைக்கிறது. சிலர் முன்னால் செய்த தீமைகள், அவர்களுக்கு பின்னால் தீவினையாய் மாறுகிறது. நாம் விதைத்தது விரூட்சமாக விளைந்து நம்முன்னால் நிற்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 2:1-12) கட்டிலில் கிடத்தப்பட்டு தூக்கிவரப்பட்டவர் கடைசியில் கட்டிலை தூக்கி கொண்டு செல்கிறார். இது இறைவனின் வல்லமை...

அவர் செய்யக்கூடிய நல்லதை கூட பாராட்ட மனம் இல்லாத மறைநூல் அறிஞர்கள் 'இவன் கடவுளை பழிக்கிறான்' என்று தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள். ஒருவருக்கு நல்லது செய்வது எப்படி கடவுளை பழிப்பதாகும்?

இயேசு அந்த முடக்குவாதமுற்றவரிடம், 'மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். நோயை குணப்படுத்தும் முன், ஏன் உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்கிறார்? 

ஒருவர் செய்த தவறு அவரை நோயாளியாக மாற்றி விடுகிறது. பாவம் அதிகமாக அது அவர்மீது சுமையாக மாறிவிடுகிறது. எனவேதான் பலவேளைகளில், நோயாளர்களை இயேசு குணப்படுத்தும் முன் 'உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார். மன்னிப்பதன் வழியாக பாவங்கள் குறைக்கப்படுகிறது, அங்கு நோயாளர்கள் நலம் பெறுகிறார்கள். 

இயேசு நலம் அளிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அதை மறைநூல் அறிஞர்கள் கூட்டம் கேள்வி கேட்டது. ஆனால் எதற்கும் பயப்படாத இயேசு செய்ய வேண்டிய நன்மையை தைரியத்தோடு செய்தார் அதிகாரத்தோடு செய்தார். 

இங்கு வல்ல செயல் நடைபெற நான்கு நபர்கள் தேவைப்பட்டார்கள். நால்வரின் செயல்பாடுகளோடு கூடிய நம்பிக்கை ஒருவருக்கு நல்வாழ்வை பெற்றுக் கொடுக்கிறது.

நாம் மற்றவர்கள் நல்வாழ்வு பெற மற்றவர்கள் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும். நாம் நல்வாழ்வு பெற மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நம்பிக்கை மட்டும் போதாது, நம்பிக்கை செயல்வடிவம் பெற வேண்டும். நம்பிக்கையின்றி செயல்கள் இல்லை: செயல்களின்றி நம்பிக்கை இல்லை.

விரும்புகிறேன் நலமாகு...


பொதுக் காலம் 1ஆம் வாரம்

16.01.2025 - வியாழக் கிழமை 

"நான் உனக்கு நலம் அளிப்பேன்; உன்னுடைய காயங்களை ஆற்றுவேன், என்கிறார் ஆண்டவர்" - எரேமியா 30:17

நோயின் கொடுமையினால், வேதனைப்படுவோர் இவ்வுலகில் அதிகம். மற்ற மனிதர்களை போல எனக்கும் நல்லது நடந்து/ நோயிலிருந்து விடுதலை கிடைத்து முழு மானுட வாழ்வு பெற மாட்டேனா என்று ஏங்குவோர் அதிகம். அதில் நாமும் ஒருத்தராக இருக்கலாம்.

நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் இன்று மனித மாண்பை/உரிமையை இழந்து இருக்ககூடியவர்கள் ஏராளம். நோய் வந்தால், நம்மால் மற்றவர்களை போல இயல்பாக வேலை செய்ய முடியாது. வேலை செய்ய முடியாது என்றால் நம்மிடம் பணம் இருக்காது. பணம் இல்லையென்றால் நமக்கு மதிப்பு இருக்காது. 

இன்று உறவுகளை தீர்மானிப்பது உணர்வு அல்ல பணம் தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:40-45) தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று முழந்தாள்படியிட்டு வேண்டுகிறார். 

விரும்புவதால், நம்புவதால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை அந்த நபரிடம் இருந்தது. இயேசுவும் அவரது நம்பிக்கையை கண்டு அவருக்கு நலம் கொடுக்கிறார், குருவிடமும் காட்டச் சொல்கிறார். 

குருவிடம் காட்டச் சொல்வதற்கான காரணம், குரு பரிசோதனை செய்து இவருக்கு தொழுநோய் இல்லை என்று சொன்னால் மட்டுமே இவர் ஊருக்குள், தன்னுடைய வீட்டிற்குள் நுழைய முடியும். அதற்காகத்தான் அவர் குணமானதை குருவிடம் காட்டச் சொல்கிறார் (காண்க... லேவியர் நூல் 14ஆம் அதிகாரம்).

இயேசு தனக்கு குணமளிக்க வேண்டும் என்று அந்த தொழுநோயாளர் விரும்பினார், தொழுநோயாளருக்கு நலம் கொடுக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். இங்கு விரும்பினதால் நலம் பெற்றுக் கொண்டார் அந்த நபர்.

நம்முடைய வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டுமென்று நம்முடைய சிந்தனையில் எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் நிச்சயம் நாம் விரும்பியபடி நல்லது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும்.

இங்கு பலர் விரும்புகிறார்கள்; ஆனால் விரும்பியபடி நடக்கும் என்று நம்பிக்கை கொள்வதில்லை.

விரும்பினால் மட்டும் போதாது, அந்த தொழுநோயாளரை போல நம்பிக்கையும் நம்மிடம் இருக்க வேண்டும்.

விரும்புவோம்/நம்புவோம்... நல்லதை விரும்புவோம்...

முக்கியப் பணி... முதன்மைப் பணி


பொதுக் காலம் 1ஆம் வாரம்

15.01.2025 - புதன் கிழமை 

"உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள்" - 1 பேதுரு 5:2

எல்லோருக்கும் பணி/வேலை உண்டு. எல்லோரும் பரபரப்பாக இவ்வுலகில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவரவர் வேலை அவரவருக்கு முக்கியம். 

அடுத்தவர் வேலையில் தலையிடாதவரை வரை நாம் நல்லவர்கள் தான். ஆனால் உதவி தேவைப்படும் போது நல்லெண்ணத்தோடு தலையிடுவது தவறில்லை. 

முக்கியமான பணிகளுக்கு மத்தியில் சிறு சிறு பணிகளை நாம் செய்ய தவறுவதில்லை. 

நம்முடைய வாழ்க்கையில் முக்கிய நபர்களும் இருக்கிறார்கள், நாம் பொழுதுப் போக்கிற்காக பயன்படுத்தப்படும் நபர்களும் இருக்கிறார்கள். நபர்களானலும் சரி பொருட்களானாலும் சரி நாம் முதன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இடையில் வந்தது இடையில் சென்று விடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:29-39) இயேசு இரண்டு வகை பணிகளை கையாண்டார். 1. போதிக்கும் பணி 2. நலமாக்கும் பணி. இரண்டையும் செய்ய இறைவேண்டல் தான் ஆற்றல் கொடுத்தது.

இந்த இரண்டில் அதிக முக்கியத்துவம் பெற்றது போதிக்கும் பணி தான். தான் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்தார், அதன் பின்னர் நோய் நொடிகளை குணமாக்கினார்.

ஒருவேளை அவர் நலமாக்கும் பணிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இறைவார்த்தை பரவியிருக்காது. வெறுமனே அதிசயங்களை தேடும் மக்களை தான் அவர் உருவாக்கி இருப்பார். 

ஆன்மாவிற்கு ஊட்டம் கொடுத்து உடலுக்கு நலம் கொடுப்பதும் தான் இயேசுவின் முதன்மை பணியாக இருந்தது. இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்து கொண்டே சென்றார்.

இன்று நம்முடைய வேலையை நாம் சரிவர செய்ய அழைக்கப்படுகிறோம். நம்முடைய கடமையை சரிவர செய்ய இயேசுவை போல இறைவேண்டல் வழியாக நாம் கடவுளோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டால் நம் வாழ்வு அடுத்தவருக்கு இடையூறாய் இருக்காது. அடுத்தவர் காரியத்திலும் நாம் தலையிட மாட்டோம்.

இருக்கும் வரை நமக்குரியவற்றில் சரியாக இருப்போம். அதனால் நம் வாழ்வும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் அமையும்.

தீய அதிகாரத்தை அதட்ட வேண்டும்...


பொதுக் காலம் 1ஆம் வாரம்

14.01.2025 - செவ்வாய்க் கிழமை 

"உன்னிடம் உயிர் உள்ளவரை, மூச்சு இருக்கும்வரை, மற்றவர்கள் உன்மீது அதிகாரம் செலுத்த விடாதே" - சீராக்கின் ஞானம் 33:21

வாயை திறக்க வேண்டிய இடத்தில் வாயை திறக்க வேண்டும். வாயை மூடி இருக்க வேண்டிய இடத்தில் வாயை மூடி இருக்க வேண்டும். எல்லா இடத்திலும் பேசுவது தவறு, அதே வேளையில் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் தவறு. 

ஆணவ அதிகாரமிக்க மனிதர்களிடத்தில் அடங்கி போவதும் பாவப்பட்ட மனிதர்களிடம் அதிகாரம் செலுத்துவதும் தேவையில்லாதது.

சிலரின் வாயை சொல்லி மூடலாம், சிலரின் வாயை எதை சொன்னாலும் மூட முடியாது. சாதித்து காட்டும் போது சிலரின் வாய் தானாக அடங்கி போய்விடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:21-28) தொழுகைக் கூடத்தில் இயேசு அதிகாரத்தோடு போதித்தார். அந்த நேரத்தில் தீய ஆவி பிடித்த ஒருவர் அவரிடம் வந்து, 'நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்கு தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்று கத்தியது. (தீய ஆவி கூட உண்மையை பேசுகிறது)

வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ என்று இயேசு அதனை அதட்டினார். (இயேசுவுக்கு புகழ்ச்சி தேவையில்லை, முழு மனித விடுதலை தான் தேவை).

தேவையற்றவைகளை பேசும் போதும்/ தேவையுள்ள நேரத்தில் பேசாமல் இருக்கும்போதும் நாம் தேவையில்லாதவர்களாக மாறி போவோம். 

சரியானதை சரி என்று சொல்ல வேண்டும். தவறை தவறென்று சுட்டிக் காட்ட வேண்டும். இயேசு தனது அதிகாரத்தை எல்லா இடங்களிலும் காட்டவில்லை மாறாக, அதிகாரம் எங்கெல்லாம் தலை தூக்கியதோ அங்கெல்லாம் இயேசு கிறிஸ்து அதிகாரத்தை பயன்படுத்தினார்.

அதிகாரம் கொண்ட போதனையினாலும் நல்லது பல செய்தார்.

நம்முடைய அதிகாரம் மற்றவர்களை ஆட்டிப் படைக்க அல்ல மற்றவர்களை ஆற்றல் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

இயேசுவின் தோழமையில் பங்கெடுத்து தீய ஆதிக்கத்துக்கு எதிராக அணி திரள்வோம். இயேசுவின் அதிகாரத்தை கையில் கொண்டு அடக்குமுறைகளை அடிதொழிப்போம்...

(இன்று மறைசாட்சி புனித தேவசகாயம் விழா)

விட்டுவிட்டு பின்பற்ற...

பொதுக் காலம் 1ஆம் வாரம்

13.01.2025 - திங்கட் கிழமை 

"அவர் அடிச்சுவடுகளை என் கால்கள் பின்பற்றின; அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை" - யோபு 23:11

ஒரு ஆற்றை கடக்க வேண்டும் என்றால் சுமைகளை விட்டுவிட வேண்டும். ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்ல இறக்கி வைக்க வேண்டியவற்றை இறக்கி வைக்க வேண்டும். சுமைகளோடு தான் கடப்பேன் என்றால் சுமை நம்மை நீரினுள் அமுக்கி விடும்.

உறவை பிரிப்பதற்கு துணையாக இருக்கும் அனைத்தையும் (தீய சொல், செயல்) விட்டுவிட வேண்டும். தேவையற்றவைகளை தூக்கி தலை மேலே போட்டுக் கொண்டால் பாரம் நமக்கு தான்.

இயற்கை நமக்கு ஒரு முன் உதாரணம். மரமோ, செடியோ, விலங்கோ, பறவையோ தன்னிடம் தேவையற்றவையாக இருப்பவற்றை விட்டு விட்டு செல்லும்/நீக்கி விட்டு செல்லும்.

நீக்காவிட்டால், விட்டுவிடாவிட்டால் வளர்ச்சியோ/முன்னேற்றமோ இல்லாமல் போய் விடும்.

தடையாய் இருப்பவற்றை தவிர்த்தால் முன்னேற்றம் தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:14-20) சீமோனையும் அவரது சகோதரரான அந்திரேயாவையும் இயேசு மனிதரை பிடிக்க அழைக்கிறார். அவர்களும் தங்கள் வலைகளை விட்டுவிட்டு அவரை பின்பற்றினார்கள். சற்று அப்பால் யாக்கோபையும் யோவானையும் கண்டு அவர்களையும் அழைத்தார். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவை கூலியாட்களோடு படகில் விட்டுவிட்டு இயேசு பின் சென்றார்கள்.

இவர்கள் நால்வரும் இருப்பவற்றை, தங்கள் வாழ்வுக்கு ஆதாயமாக இருப்பவற்றை விட்டுவிட்டார்கள், இயேசுவை பின்பற்றினார்கள்.

இல்லாததை இழப்பது அல்ல சீடத்துவம், இருப்பவற்றையெல்லாம் விட்டுவிடுவது/இழப்பது தான் உண்மையான சீடத்துவம்.

இயேசுவை பின்பற்ற வேண்டுமென்றால் இவ்வுலக பற்றை விட்டுவிட வேண்டும் 

இவ்வுலக செல்வத்தை, புகழை விட்டுவிட வேண்டும் 

போலியான வாழ்க்கையை விட்டுவிட வேண்டும் 

ஆடம்பரத்தை விட்டுவிட வேண்டும் 

இவ்வாற்றையெல்லாம் விட்டுவிடவில்லை என்றால் இயேசுவை பின்பற்றுவதை விட்டுவிட வேண்டும்.

எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது...

இயேசுவுக்கு திருமுழுக்கு அவசியமா???

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

12.01.2025 - ஞாயிற்றுக் கிழமை 

"அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது" - 1 பேதுரு 3:21

கத்தோலிக்க திருமறைச் சொல்லி தரும் பாடம் 

1. திருமுழுக்கின் வழியாக நாம் பிறப்புநிலை (ஜென்மப் பாவம்) பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறோம்

2. கடவுளின் பிள்ளை ஆகிறோம்

3. திருஅவையின் உறுப்பினர் ஆகிறோம். 

திருமுழுக்கு பெறாமல் வேறு எந்த அருளைடையாளத்தையும் பெற முடியாது. அருளடையாளத்தின் நுழைவு வாயில் திருமுழுக்கு.

ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் விளைவாக பாவம் இவ்வுலகில் நுழைந்தது. அந்த ஜென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற இவ்வருளடையாளம் கொடுக்கப்படுகிறது. நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற திருமுழுக்கு அவசியம் என்றால் ஏன் இயேசு திருமுழுக்கு பெற்றார் என்ற கேள்வி எழுகிறது.

இயேசு இவ்வுலகில் பிறந்த போது அவரிடம் மனித இயல்பும் இருந்தது இறை இயல்பும் இருந்தது. அவர் மனிதரும் கடவுளுமானவர். மனிதர் என்ற முறையில் பாவமே அறியாத நிலையில் இருந்தாலும், முன்மாதிரி காட்டவே அவர் பாவிகளின் வரிசையில் நின்று திருமுழுக்கு பெற்றார்.

இயேசுவின் திருமுழுக்கில் வெளிப்பட்டவை - வானம் திறந்தது, தூய ஆவியானவர் புறா வடிவில் இறங்கி வந்தார், தந்தை கடவுள் மகனை குறித்து சான்று பகிர்ந்தார்.

இயேசு திருமுழுக்கு பெற்றது நமக்கு முன்னோடியாக இருக்க தான். அவர் பாவத்திலிருந்து விடுதலை பெற திருமுழுக்கு பெறவில்லை.

இன்று நடைமுறை வாழ்வில் இந்த திருமுழுக்கை குறித்து ஒரு சிக்கல்/விவாதம் தொடர்கிறது. எது செல்லுபடியாகும்? குழந்தை திருமுழுக்கா? (Infant Baptism) வயது முதிந்தோர் திருமுழுக்கா? (Adult Baptism) குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கலாமா? 

இயேசு பணிவாழ்வை தொடங்கும் முன் திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கு யோவான் மக்களை இறையாட்சிக்காக ஆயத்தம் செய்தார், அவர் வார்த்தையை நம்பியவர்கள் மனம் மாறினார்கள், திருமுழுக்குப் பெற்றார்கள்.

திருமுழுக்கு புது பிறப்பின் அடையாளம். அது பிறந்த குழந்தைகளுக்கு அக்குழந்தையின் பெற்றோர் ஞானப் பெற்றோர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.

லூக்கா 18:15-17இல் சிறுபிள்ளைகளை இயேசுவிடம் அழைத்து வந்த போது சீடர்கள் தடுத்தார்கள். அவர்களை என்னிடம் வரவிடுங்கள்: அவர்களை தடுக்காதீர்கள் என்றார். குழந்தைகளை கடவுளிடம் அழைத்து வருவது என்பது குழந்தைகளுக்கு நம்பிக்கையை/பக்தியை ஊட்டுவதின் அடையாளம். அந்த பின்னணியில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கும் போது அவர்கள் அறியா நிலையில் இருந்தாலும் இறையருளை பெற்றுக் கொள்கிறார்கள் 

திருத்தூதர் பணிகள் 18:8இல் இவ்வாறு வாசிக்கிறோம், "தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்." வீட்டார் அனைவரும் நம்பிக்கை கொண்டனர் என்பது அவர் பெற்றுக் கொண்ட திருமுழுக்கை குறிக்கிறது. வீட்டார் அனைவரும் என்றால் அதில் குழந்தைகளும் உள்ளடங்குவர்.

திருத்தூதர் பணிகள் 16:33இல்

அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். என்று வாசிக்கிறோம்.

அவரும் அவரை சார்ந்தவர்கள் என்றால் குடும்பத்தினரை குறிக்கிறது. எனவே குடும்பமாக இணைந்து பெரியவர் முதல் சிறியவர் வரை திருமுழுக்கு பெற்றதற்கான சான்று விவிலியத்தில் உள்ளது.

திருஅவை வரலாற்றில் 2ஆம் நூற்றாண்டில் இருந்தே குழந்தை திருமுழுக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

திருமுழுக்கின் வழியாக நாம் புது படைப்பாக மாற வேண்டும். கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு பெற வேண்டும். இது தான் முக்கியம்.

அடுத்தவர் வளர வேண்டும்... நான் குறைய வேண்டும்...


திருக்காட்சிப் விழாவுக்குப்பின் சனி

11.01.2025 - சனிக் கிழமை 

"அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள்" - உரோமையர் 15:2

இன்று வளர்ச்சி என்பது தனிப்பட்ட வளர்ச்சியாக இருக்கிறது. யாரும் அடுத்தவர் நலனை நாடுவதில்லை. ஒருவேளை அடுத்தவர் மீது அக்கறை கொண்டவர் ஒருவர் இருக்கிறார் என்றாலும் அதில் இலாபம் இல்லாமல் இருக்காது. 

எல்லோருடைய எதிர்பார்ப்பும் நான் வளர்ந்தால் போதும்/ என் குடும்பம் முன்னேறினால் போதும் என்ற நோக்கில் தான் இருக்கிறது.

1000 பேர் வசிக்கக் கூடிய ஒரு ஊரில் 999 பேரை பற்றி கவலைப்படாத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் வாழ்ந்து பயன் என்ன? அவர் சீரோடும் சிறப்போடும் இருந்தும் பயன் என்ன? 

என் எல்லையில் உள்ள குப்பை/கழிவுகளை அடுத்தவர் மீது வீசும் போது, நான் சுத்தம் ஆகிவிடுவேன். ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் தூய்மை இழப்பார்கள், அவர்களை நோய் தொற்றும். அது சுழற்சி முறையில் என்னையும் தாக்கும் என்பதைப் நான் அறியாமல் இருப்பது ஏன்?

அதை போல தான் நான் மட்டும் வளர்ச்சியை நோக்கி செல்வது எனக்கு மதிப்பாக இருக்கலாம், என் அயலானின் வீழ்ச்சி அடைந்தால் எனக்கு என்ன என்று எண்ணிக் கொள்ளலாம், எல்லோரும் அழிந்த ஊரில் நான் மட்டும் வாழ்ந்து பயன் என்ன? என்ற கேள்வி எழ வேண்டும்...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 3:22-30) திருமுழுக்கு யோவானிடம் ஒரு முறையீடு வருகிறது. ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்ற முறையீடு தான் அது. 

அதற்கு திருமுழுக்கு யோவான் கூறிய பதில் நமக்கு வியப்பை தருகிறது. அவர் செய்வதை குறித்து மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. "அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்".

முதிர்ச்சி அடைந்தவர்களால் மட்டுமே இத்தகைய பதிலிருப்பு செய்ய முடியும். இறையாட்சியை குறித்து பரப்புரை செய்து, மீட்புக்கான வழியை ஆயத்தம் செய்தவர், நான் ஒன்றுமில்லை என்று சொல்வது முற்றிலும் நம்மிலிருந்து மாறுபட்ட சிந்தனை தான்.

எதையும் செய்யாமல் எல்லாம் செய்தவர்கள் போல காட்டிக் கொள்ளும் மானுடம் மத்தியில் எல்லாவற்றையும் செய்துவிட்டு தன்னை தாழ்த்திய திருமுழுக்கு யோவானின் மனநிலை நம்மில் உருவாக வேண்டும். மற்றவர்களின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு மற்றவர்களை நாம் உருவாக்க வேண்டும்.

நான் வளர்ந்தால் மட்டும் போதாது, நாம் வளர வேண்டும்... 

(தொழு)நோயாளியின் மன்றாட்டு கேட்கப்பட்டது...


திருக்காட்சி விழாவுக்குப்பின் வெள்ளி

10.01.2025 - வெள்ளிக் கிழமை 

"எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்." - எபேசியர் 6:18

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்/பொருத்தனை இருக்கும். சிலருக்கு அவசர தேவையாக இருக்கும் சிலருக்கு மிக அவசர தேவையாக இருக்கும். தேவைகளே இல்லாத மனிதர்கள் இங்கு இல்லை.

அப்பா மகனிடம், அம்மா மகளிடம், கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம் என்று இன்று பல்வேறு தேவைகளுக்காக வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள்/மன்றாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு தேவை தீர்ந்ததும் மற்றொரு தேவை வந்து விடுகிறது. 

தேவைக்காக பயன்படுத்தும் மனிதர்கள் மத்தியில் யார் நமது தேவையை பூர்த்தி செய்வார் என்பது ஒரு கேள்வியே! எது எப்படி இருந்தாலும் ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவை பூர்த்திச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5:12-16) தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் மன்றாடுகிறார். இயேசுவின் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என கெஞ்சிக் கேட்கிறார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் அந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர். குடும்பத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர். அப்படிப்பட்டவரின் அடிப்படை தேவை நோயிலிருந்து விடுதலை தான். இந்த மனிதர் நரக வேதனையை அனுபவித்திருப்பார். இயேசுவின் தொடுதலும் வார்த்தையும் அவருக்கு நலம் அளித்தது.

இன்றும் உள்ளத்திலும் உடலிலும் நோயால் அவதிப்படும் மனிதர்கள் ஏராளம் இருக்கிறார்கள். மருந்தோ/மருத்துவமோ பல வேளைகளில் நலம் கொடுப்பதில்லை. நலமான/ஆறுதலான வார்த்தைகள் தான் நலம் கொடுக்கும். ஒரு மனிதர் மற்றொரு மனிதருடன் உடன் இருக்கும் போது அது நலமளிக்கும். நம்பிக்கையான மனிதர்கள் நலம் அளிப்பார்கள்.

நாம் மறு கிறிஸ்துவாக மாறி மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், நடமாடும் மருத்துவராக மாற வேண்டும். 

சாலமோனின் ஞானம் 16:12 இவ்வாறு சொல்கிறது, "பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை; ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது." 

இயேசுவின் நலமளிக்கும் வார்த்தைகள் நமது வாயிலிருந்து புறப்பட வேண்டும். நம்பிக்கை நிறைந்த வாழ்வு நலனை பெற்றுக் கொடுக்கும். ஆகவே,நாமும் நலம் பெற்று மற்றவர்களுக்கும் நலம் கொடுப்போம்.

வாய்மொழி செயல்வழி...


திருக்காட்சி விழாவுக்குப் பின் வரும் வியாழன் 

09.01.2025 - வியாழக் கிழமை 

"ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை" - திருப்பாடல்கள் 33:4

இருப்பதை மீண்டும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் சொல்லப்பட்டதை எடுத்துச் செய்ய வேண்டும் அது தான் முக்கியம். வார்த்தைகளில் வடை சுடுவது மிக மிக எளிது. ஆனால் சொன்னபடி வாழ்வது/வாழ முயற்சிப்பது மிக கடினம்.

யார் வேண்டுமானாலும் எதையும் பேசிவிட்டு கடந்து செல்லலாம். கடந்து செல்வது முக்கியமல்ல கடத்தி/நகர்த்தி செல்வது முக்கியம்.

சொல்வதை செய்வோம்! செய்வதை சொல்வோம். இது அரசியல் தலைவர்களின் கூற்று. சொன்னதெல்லாம் செய்யப்பட்டதா? என்பது சொல்லியவரின் கைகளில் இருக்கிறது. இங்கு வாய் வழியாக மொழிதல் மட்டுமே இருக்கிறது, செயல் வழி வாழ்வு மிக மிக குறைவே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 4:14-22) தூய ஆவியின் வல்லமை உடையவராய் இயேசு திகழ்ந்தார் என்றும் ஓய்வுநாளில் தொழுகைக் கூடம் சென்று எசாயாவின் சுருளேட்டை வாசித்தார் என்றும் காண்கிறோம்.

ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" (லூக்கா 4:18-19) என்று அவர் வாசித்ததை/சொல்லியதை தனது பணிவாழ்வில் செய்து காட்டினார்.

சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்தார், நன்மையே செய்தார்.

இயேசுவின் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் அல்ல. மாறாக, செயல் வழி தாக்கத்தை ஏற்படுத்தும் கூர்மையான வார்த்தைகள்.

வார்த்தைக்கு ஆற்றல் உண்டு என்பது உண்மை என்றால் வார்த்தையை வாழ்வாக்கும் போது அதற்கு இன்னும் அதிக ஆற்றல் உண்டு தானே!

நம்முடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வாழ்வு தரும் வார்த்தைகளாக பிறரை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் வார்த்தைகளாக இருக்கட்டும். 

இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி நல்லதை சொல்வதோடு மட்டும் நின்று விடாமல் நல்லதையும் செய்வோம்.

வார்த்தைகளை வீணாக்காமல் வாழ்க்கையை சீராக்குவோம்! வாய்மொழி செயல்வழியில் சிறப்பு அடையட்டும்...

துணிவோடு இருங்கள், அஞ்சாதீர்கள்

திருக்காட்சி பெருவிழாவுக்கு பின் வரும் புதன்

08.01.2025 - புதன் கிழமை 

"விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள்" 1 கொரிந்தியர் 16:13

இன்று பலருக்கு தேவைப்படுவது அஞ்சாமை, துணிவோடு இருத்தல். எல்லோரும் தன்னிலே ஆற்றல் நிறைந்தவர்கள் என்றாலும் உடனிருப்போரின் நெருக்கடி, சமூகச் சூழல் ஆகியவற்றால் இன்று பலர் ஆற்றல் இழந்து காணப்படுகிறார்கள். 

ஆற்றல், துணிவு இழந்தவர்கள் அரை மனிதர்கள். சமூகத்தில் செல்லாக் காசாக பார்க்கப்படுவார்கள். துணிவிற்கும் ஆணவத்திற்கும் அதிக வேறுபாடு உண்டு. துணிவு என்னால் இந்த காரியத்தை செய்ய முடியும் என்பது, ஆணவம் இந்த காரியத்தை என்னை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பது.

எவ்வளவு துணிவுள்ள மனிதரும் ஏதாவது ஒரு நிலையில் ஆடி தான் போவார். வாழ்க்கையில் ஒரு நெருக்கடி வரும் போது வாழ்க்கை ஆட்டம் கண்டு விடும். தடுமாற்றம் நிறுத்தப்படவில்லை என்றால் நம்மால் நம்மோடு இருக்கும் பலர் ஆட்டம் காண ஆரம்பித்து விடுவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6: 45-52) இயேசு இறைவனிடம் தனியாக வேண்டி விட்டு தம் சீடர்களை நோக்கி கடலில் நடந்து செல்கிறார். இயேசு தான் தங்களை நோக்கி வருகிறார் என்பதை உணராத சீடர்கள் அஞ்சுகிறார்கள், துணிவை இழக்கிறார்கள். 

இயேசு அவர்களை பார்த்து கூறிய வார்த்தை,  "துணிவோடு இருங்கள்; நான்தான் அஞ்சாதீர்கள்".இயேசுவோடு உடன் இருந்தும் அவர் செய்தவற்றை அறிந்திருந்தும் கூட அவர்கள் அவரை இன்னாரென்று அறிந்துக் கொள்ளவில்லை. பயம் தான் அவர்களுக்குள் குடி கொண்டிருந்தது. 

இயேசு அவர்களின் கலக்கத்தை நீக்குகிறார். கலக்கத்தை நீக்க அச்சத்தை நீக்க மற்றவர்களின் ஊக்கமும் ஆற்றலும், மற்றவர்கள் தரும் திடமும் நமக்கு தேவைப்படுகிறது. ஒரு மனிதரால் நாம் இழந்து நிற்கும் தைரியம் மற்றொரு மனிதரால் கொடுக்கப்படும்.

யாரையும் அச்சுறுத்தி, மிரட்டி எந்த காரியத்தையும் சாதிக்க கூடாது.

அச்சத்தை நீக்கி தைரியத்தை கொடுத்த இயேசுவை போல பலம் இழந்தவரின் வாழ்வில் நம்பிக்கை தரும் வார்த்தைகளால் பலம் கூட்டுவோம்...

மற்றவர்களோடு உடன் இருந்து அவர்களின் அச்சத்தை நீக்குவோம்...

பலம் இழந்தவர்களுக்கு திடமூட்டி திடமுள்ள சமூகத்தை உருவாக்குவோம்.

பரிவும் உணவும் பகிரப்படட்டும்...


திருக்காட்சி பெருவிழாவுக்கு பின் வரும் செவ்வாய்

07.01.2025 - செவ்வாய்க் கிழமை 

"பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்” - ஒசேயா 11:4

இருப்பதை இன்னும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் வருவது இயல்பு. கொடுத்து கொடுத்து தேய்ந்த கரங்களும் உண்டு, பதுக்கி பதுக்கி புழுத்த கரங்களும் உண்டு. (பதுக்கியவை கடைசி காலங்களில் பயன்படாது). பகிர்தலும் பகிர்வும் தான் கடைசிவரை நிலைக்கும்.

பரிவுமிக்கவர் பிறரின் பாரம் குறைப்பார். தன்னலம் பாராது பிறர்நலம் பேணுவார். 

‘பரிவு என்பது பிறரை நம்மை விட தாழ்ந்தவராகவோ அல்லது நம்மை உயர்ந்தவராகவோ மதிப்பிடுவது அல்ல. மாறாக நம்மை போல பிறரையும் எண்ணுவது’ என்பார் திமொத்தி மில்லர். (“உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” – மத்தேயு 19:19). அன்பு செலுத்துவோர் பகிர்வு உடையோர் ஆவார்.

மற்றவர்களை, நான் என்னை போல் நினைக்கும்போது, அவர்களது துன்பத்தில் தூர தள்ளி நிற்க மாட்டேன்; மாறாக அவர்களது துயரத்தில் பங்குக்கொள்வேன்.

இயேசு தன் பணிவாழ்வில் இலக்காக கொண்டிருந்ததே துயரில் துணைநிற்பதும், துயரை துடைப்பதும் தான். அதுதான் அவரது பரிவிரக்க செயல்கள். (“அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார்.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6: 34-44) மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்”. 

தன் சீடர்களின் இயலாமையிலும் அவர்களை இயங்க வைத்தார். பரிவுமிக்க மனிதனாக மாற்றினார். நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள் சீடர்கள். வாங்க சொல்லவில்லை பகிர சொன்னார் இயேசு.

பகிரப்பட்ட 5 அப்பங்களும் 2 மீன்களும் கடைசியில் மீதமாகி 12 கூடைகளில் எடுக்கப்பட்டது.

பகிரும் உள்ளம் நிறைய பெற்றுக் கொள்ளும் என்பது நமக்கு உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.

உணவையும் உறவையும் பகிர்வோம். பகிரப்பட்டதற்கு அதிகமாக பெற்றுக் கொள்வோம்.

இழப்பிற்கு மத்தியிலும் இலக்கை அடைய பணி ஏற்பு...


திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள்

06.01.2025 - திங்கட் கிழமை

"அவர் தமது வில்லை நாணேற்றினார்! அவர் தமது அம்புக்கு என்னை இலக்கு ஆக்கினார்" - புலம்பல் 3:12

இழப்பு இலக்கு இரண்டும் எதிரெதிர் துருவங்கள். இழப்பை கண்ட எல்லோரும் இலக்கை நோக்கி பயணிப்பதில்லை. இலக்கை குறி வைத்தவர்கள் இழப்பை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.

யாருக்கு தொலைவில் உள்ள மலை தெரிகிறதோ அவருக்கு பக்கத்தில் இருக்கும் கடல் ஒரு தடையாக தெரியாது. யாருக்கும் இழப்பு இல்லை என்று சொல்ல முடியாது, இழப்பை கடந்தால் பொது/புது வாழ்வு உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 4:12-17, 23-25) திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின்னர் இயேசு களிலேயாவுக்கு சென்று இறைவாக்கு உரைக்கிறார். மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது எனப் பறைசாற்ற தொடங்கினார். 

நலம் குன்றியோரை நலமாக்கினார், பேய்களை ஓட்டினார். இவ்வாறாக விண்ணரசின் விழுமியங்களை எடுத்துரைத்தார் (நல்வாழ்வு, நோயற்ற வாழ்வு, புது வாழ்வு).

இழப்பைக் கண்டு முடங்கி படுத்தால், நாளை எழுந்து கூட நிற்க முடியாது. எல்லாம் மாறும் என்பது நம்பிக்கை; எல்லாவற்றையும் என்னால் மாற்ற முடியும் என்பது தன்னம்பிக்கை. ஆனால் தன்னம்பிக்கை கர்வத்திற்கு அழைத்துச் செல்ல கூடாது. 

எல்லாரையும் நம்மால் மாற்ற முடியாது, ஆனால் நம் செயல்பாடுகளை யாரும் தடை செய்யாதவாறு பார்த்துக் கொள்ள முடியும்.

இயேசு தனது பணியை தொடங்கினார்; திருமுழுக்கு யோவானை தொடர்ந்து இறையரசை அறிவித்தார். தடைகள் வந்தது, ஆனாலும் தடுமாறவில்லை. இலக்கு தெளிவானால் இழப்பு எதிரியல்ல...

நாமும் இறையரசு என்னும் இலக்கை அடைய இடையூராய் இருக்கும் இழப்புக்களை தூக்கி எறிவோம்.

யாரும் எதுவும் நம்மையும் நம் செயல்களையும் தடை செய்யாதவாறு பார்த்துக் கொள்வோம்.

ஞானிகள் செய்தது சரியா?


ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா

05.01.2025 - ஞாயிற்றுக் கிழமை 

இங்கு தவறு என்று சொல்ல பல நபர்கள் இருக்கிறார்கள். சரி என்று சொல்ல வெகு சிலரே இருக்கிறார்கள். நமக்கு பிடித்திருந்தால் சரி, இல்லையென்றால் தவறு இது தான் நமது வாழ்க்கை. 

நபரை பொறுத்து/இடத்தை பொறுத்து சரியை தவறென்றும் தவறை சரி என்றும் நாம் சொல்லுகிறோம். சரி ஒருபோதும் தவறாகாது, தவறு ஒருபோதும் சரியாகாது.

ஞானிகள் யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? என்று தேடிப் போனார்கள். விண்மீன் மறைந்ததால் ஏரோதுவை நாடி சென்றார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை. விண்மீனை மீண்டும் கண்டார்கள், மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள், கனவில் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாக தங்கள் நாடு திரும்பினார்கள்.

அரசனை ஏமாற்றியது தவறு தான். ஆனால் மனிதருக்கு கீழ்ப்படிவதா? கடவுளுக்கு கீழ்ப்படிவதா? என்று வருகிற போது கடவுளுக்கு அஞ்சுவது தான் நல்லது என்பதன் அடிப்படையில் ஞானிகள் அவ்வாறு நடந்துக் கொண்டார்கள்.

ஞானிகள் வராமல் இருந்திருந்தால் அரசன் கலங்கியிருக்க மாட்டான், மாசற்ற குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அன்னை மரியாவும் யோசேப்பும் குழந்தையை தூக்கிக் கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடி சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

எல்லாம் நிறைவேற இவை யாவும் நிகழ்ந்தன. குழந்தைகளின் இறப்பை நியாயப்படுத்த முடியாது. ஒரு குழந்தைக்காக இத்தனை உயிர்கள் பலியா? அல்லது பழைய ஏற்பாட்டு மோசே பிறப்போடு ஒப்பிட இவையாவும் நிகழ்ந்ததா? என்ற சிந்தனை ஓட்டம் நம்மில் தொடங்குகிறது.

ஒருவரது பிறப்பில் மகிழும் மனிதன் மற்றவரின் இறப்பில் அழுகிறான். இறப்பு எல்லோருக்கும் உண்டு ஆனாலும் காலம் முடியுமுன்னே வாழ்க்கை முடிவதை யாராலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

சாலமோனின் ஞானம் 4:10 இவ்வாறு சொல்கிறது, "நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி, அவருடைய அன்பைப் பெற்றார்; பாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே அவரால் எடுத்துக் கொள்ளப்பெற்றார்."

நம்முடைய பார்வையில் தான் தொடக்கமும் முடிவும். கடவுளே அந்த தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறார். இவ்வுலக இறப்பை கடந்த வாழ்வு உண்டு என்ற நம்பிக்கை இவ்வுலக துயரத்தை மூடி மறைத்து விடும்.

ஞானிகள் இயேசுவை பார்க்க வந்தது, இயேசு சாதாரண குழந்தை அல்ல என்பதை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. அவர்கள் மூன்று ஞானிகளா? மூன்று அரசர்களா? என்ற சிந்தனை ஒருபுறம் இருந்தாலும் அவர்கள் கிழக்கிலிருந்து யூதர்களின் அரசரை பார்க்க வந்தார்கள் என்று நற்செய்திப் பதிவு செய்கிறது.

பொன்னும் சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக கொண்டு வந்தார்கள்.

பொன் - இயேசு அரசர் என்பதை சுட்டிக் காட்டுகிறது

சாம்பிராணி - இயேசுவின் தெய்வத் தன்மையை சுட்டுகிறது

வெள்ளைப்போளம் - இயேசுவின் அடக்கச் சடங்கை சுட்டுகிறது.

அடையாளம் இன்றி எதுவும் இல்லை. சில மனிதர்கள் வாழ்வே அடையாளமாக இருக்கிறது. 

இறைவனை சார்ந்து தீமையை வெறுத்த ஞானிகள் செய்த செயல் சரியானதே! கனவிலும் கடவுளின் வார்த்தையை நம்பி செவிசாய்த்து நடந்த இவர்கள் வாழ்வு நமக்கு முன்மாதிரியே.

நாம் கடவுளுக்கு செவிசாய்ப்பது எப்போது?

இறையனுபவம் பெற வேண்டும்...


கிறிஸ்து பிறப்புக் காலம் 
04.01.2025 - சனிக் கிழமை 

"இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்து கொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு" - 1 யோவான் 5:20

ஒவ்வொரு மனிதனின் அனுபவமும் வித்தியாசமானது. சிலருக்கு வாழ்க்கை பாடமாக அமையும், சிலருக்கு அனுபவமாக அமையும், சிலருக்கு மகிழ்ச்சியாக அமையும்.

கிறிஸ்தவர்களுக்கு இரண்டு வகையான அனுபவம் உண்டு. ஒன்று மண்ணக அனுபவம். இரண்டு விண்ணக அனுபவம்.

மண்ணக வாழ்க்கையே போதும் என்போரும் உண்டு... இந்த மண்ணக வாழ்க்கையே வேண்டாம் என்று எண்ணுவோரும் உண்டு. இந்த உலகில் நல்ல/இனிமையான மனிதர்களை உறவாக பெற்றவர்கள் ஆனந்த களிப்பில் துள்ளிக் குதிப்பர். தெரியாமல் மாட்டிக் கொண்டவர்களோ எப்போது தான் இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்குமோ? என்று அலுத்துக் கொள்வர். 

வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 1:35-42) திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்கள் இறைஅனுபவம் பெற அழைப்பு விடுக்கிறார். "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று திருமுழுக்கு யோவான் சொல்ல, அதைக் கேட்டு சீடர் இருவர் இயேசுவை பின்தொடர்கின்றனர். 

பின்தொடர்ந்தது மட்டுமல்லாமல் இயேசுவோடு தங்கி இறைஅனுபவம் பெறுகிறார்கள். 

அவர்களுக்குள் இரண்டு வகையான மகிழ்ச்சி இருந்திருக்கும். 1. புதிய போதகர் கிடைத்துள்ளார் 2. புதிய அனுபவம்/புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

ஆலயத்தில் எல்லோரும் கடவுளை சந்திக்கிறார்கள். எல்லோரும் இறை பிரசன்னத்தில் அமர்கிறார்கள். ஆனால் எல்லோரும் இறை அனுபவம் பெறுவதில்லை. 

குருவின் பாதத்தின் கீழ் அமரும் எல்லோரும் குருவின் அனுபவம் பெறுவதில்லை. காரணம், அவர்கள் குருவோடு இணைந்து பயணிக்க தவறி விடுகிறார்கள். சிந்தனையும் செயலும் மாறினால் குருவை போல ஆக முடியாது.

இரு சீடர்களுள் ஒருவர் அந்திரேயா, அவர் தான் பெற்ற அனுபவத்தை அறிவிக்கிறார். மெசியாவைக் கண்டோம் என்று சொல்லி தன் சகோதரரான பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார். 

இன்று நாம் அனுபவம் பெற்றால் தானே மற்றவர்களை இயேசுவிடம் அழைத்து வர முடியும்! அனுபவம் பெற ஒரே வழி உலக காரியங்களை ஒதுக்கி வைத்து விட்டு அருள்பொழிவு பெற்றவரை அணுகிச் செல்ல வேண்டும்.

நல்லதொரு வாழ்க்கை போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்...

அவரன்பில் பணியாற்ற

மரியாளின் மாசற்ற இதயம்

பொதுக்காலம் 12ஆம் வாரம் 28.06.2024 - சனிக் கிழமை  பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக...