25_01

(தொழு)நோயாளியின் மன்றாட்டு கேட்கப்பட்டது...


திருக்காட்சி விழாவுக்குப்பின் வெள்ளி

10.01.2025 - வெள்ளிக் கிழமை 

"எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள்." - எபேசியர் 6:18

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்/பொருத்தனை இருக்கும். சிலருக்கு அவசர தேவையாக இருக்கும் சிலருக்கு மிக அவசர தேவையாக இருக்கும். தேவைகளே இல்லாத மனிதர்கள் இங்கு இல்லை.

அப்பா மகனிடம், அம்மா மகளிடம், கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடம் என்று இன்று பல்வேறு தேவைகளுக்காக வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள்/மன்றாடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு தேவை தீர்ந்ததும் மற்றொரு தேவை வந்து விடுகிறது. 

தேவைக்காக பயன்படுத்தும் மனிதர்கள் மத்தியில் யார் நமது தேவையை பூர்த்தி செய்வார் என்பது ஒரு கேள்வியே! எது எப்படி இருந்தாலும் ஒரு மனிதனுடைய அடிப்படைத் தேவை பூர்த்திச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5:12-16) தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் மன்றாடுகிறார். இயேசுவின் காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என கெஞ்சிக் கேட்கிறார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் அந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர். குடும்பத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர். அப்படிப்பட்டவரின் அடிப்படை தேவை நோயிலிருந்து விடுதலை தான். இந்த மனிதர் நரக வேதனையை அனுபவித்திருப்பார். இயேசுவின் தொடுதலும் வார்த்தையும் அவருக்கு நலம் அளித்தது.

இன்றும் உள்ளத்திலும் உடலிலும் நோயால் அவதிப்படும் மனிதர்கள் ஏராளம் இருக்கிறார்கள். மருந்தோ/மருத்துவமோ பல வேளைகளில் நலம் கொடுப்பதில்லை. நலமான/ஆறுதலான வார்த்தைகள் தான் நலம் கொடுக்கும். ஒரு மனிதர் மற்றொரு மனிதருடன் உடன் இருக்கும் போது அது நலமளிக்கும். நம்பிக்கையான மனிதர்கள் நலம் அளிப்பார்கள்.

நாம் மறு கிறிஸ்துவாக மாறி மற்றவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும், நடமாடும் மருத்துவராக மாற வேண்டும். 

சாலமோனின் ஞானம் 16:12 இவ்வாறு சொல்கிறது, "பச்சிலையோ களிம்போ அவர்களுக்கு நலம் அளிக்கவில்லை; ஆனால், ஆண்டவரே, உமது சொல்லே எல்லா மனிதர்க்கும் நலம் அளிக்கிறது." 

இயேசுவின் நலமளிக்கும் வார்த்தைகள் நமது வாயிலிருந்து புறப்பட வேண்டும். நம்பிக்கை நிறைந்த வாழ்வு நலனை பெற்றுக் கொடுக்கும். ஆகவே,நாமும் நலம் பெற்று மற்றவர்களுக்கும் நலம் கொடுப்போம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...