ஆண்டவரின் திருமுழுக்கு விழா
12.01.2025 - ஞாயிற்றுக் கிழமை
"அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது" - 1 பேதுரு 3:21
கத்தோலிக்க திருமறைச் சொல்லி தரும் பாடம்
1. திருமுழுக்கின் வழியாக நாம் பிறப்புநிலை (ஜென்மப் பாவம்) பாவத்திலிருந்து விடுதலை பெறுகிறோம்
2. கடவுளின் பிள்ளை ஆகிறோம்
3. திருஅவையின் உறுப்பினர் ஆகிறோம்.
திருமுழுக்கு பெறாமல் வேறு எந்த அருளைடையாளத்தையும் பெற முடியாது. அருளடையாளத்தின் நுழைவு வாயில் திருமுழுக்கு.
ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் விளைவாக பாவம் இவ்வுலகில் நுழைந்தது. அந்த ஜென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற இவ்வருளடையாளம் கொடுக்கப்படுகிறது. நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற திருமுழுக்கு அவசியம் என்றால் ஏன் இயேசு திருமுழுக்கு பெற்றார் என்ற கேள்வி எழுகிறது.
இயேசு இவ்வுலகில் பிறந்த போது அவரிடம் மனித இயல்பும் இருந்தது இறை இயல்பும் இருந்தது. அவர் மனிதரும் கடவுளுமானவர். மனிதர் என்ற முறையில் பாவமே அறியாத நிலையில் இருந்தாலும், முன்மாதிரி காட்டவே அவர் பாவிகளின் வரிசையில் நின்று திருமுழுக்கு பெற்றார்.
இயேசுவின் திருமுழுக்கில் வெளிப்பட்டவை - வானம் திறந்தது, தூய ஆவியானவர் புறா வடிவில் இறங்கி வந்தார், தந்தை கடவுள் மகனை குறித்து சான்று பகிர்ந்தார்.
இயேசு திருமுழுக்கு பெற்றது நமக்கு முன்னோடியாக இருக்க தான். அவர் பாவத்திலிருந்து விடுதலை பெற திருமுழுக்கு பெறவில்லை.
இன்று நடைமுறை வாழ்வில் இந்த திருமுழுக்கை குறித்து ஒரு சிக்கல்/விவாதம் தொடர்கிறது. எது செல்லுபடியாகும்? குழந்தை திருமுழுக்கா? (Infant Baptism) வயது முதிந்தோர் திருமுழுக்கா? (Adult Baptism) குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கலாமா?
இயேசு பணிவாழ்வை தொடங்கும் முன் திருமுழுக்கு பெற்றார். திருமுழுக்கு யோவான் மக்களை இறையாட்சிக்காக ஆயத்தம் செய்தார், அவர் வார்த்தையை நம்பியவர்கள் மனம் மாறினார்கள், திருமுழுக்குப் பெற்றார்கள்.
திருமுழுக்கு புது பிறப்பின் அடையாளம். அது பிறந்த குழந்தைகளுக்கு அக்குழந்தையின் பெற்றோர் ஞானப் பெற்றோர் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.
லூக்கா 18:15-17இல் சிறுபிள்ளைகளை இயேசுவிடம் அழைத்து வந்த போது சீடர்கள் தடுத்தார்கள். அவர்களை என்னிடம் வரவிடுங்கள்: அவர்களை தடுக்காதீர்கள் என்றார். குழந்தைகளை கடவுளிடம் அழைத்து வருவது என்பது குழந்தைகளுக்கு நம்பிக்கையை/பக்தியை ஊட்டுவதின் அடையாளம். அந்த பின்னணியில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கும் போது அவர்கள் அறியா நிலையில் இருந்தாலும் இறையருளை பெற்றுக் கொள்கிறார்கள்
திருத்தூதர் பணிகள் 18:8இல் இவ்வாறு வாசிக்கிறோம், "தொழுகைக்கூடத் தலைவரான கிறிஸ்பு என்பவர் தம் வீட்டார் அனைவரோடும் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டார். கொரிந்தியருள் பலரும் பவுல் கூறிய வற்றைக் கேட்டு கொண்டு திருமுழுக்குப் பெற்றனர்." வீட்டார் அனைவரும் நம்பிக்கை கொண்டனர் என்பது அவர் பெற்றுக் கொண்ட திருமுழுக்கை குறிக்கிறது. வீட்டார் அனைவரும் என்றால் அதில் குழந்தைகளும் உள்ளடங்குவர்.
திருத்தூதர் பணிகள் 16:33இல்
அவ்விரவு நேரத்திலேயே அவர் அவர்களைக் கூட்டிச் சென்று அவர்களின் காயங்களைக் கழுவினார். பின்பு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் திருமுழுக்குப் பெற்றார்கள். என்று வாசிக்கிறோம்.
அவரும் அவரை சார்ந்தவர்கள் என்றால் குடும்பத்தினரை குறிக்கிறது. எனவே குடும்பமாக இணைந்து பெரியவர் முதல் சிறியவர் வரை திருமுழுக்கு பெற்றதற்கான சான்று விவிலியத்தில் உள்ளது.
திருஅவை வரலாற்றில் 2ஆம் நூற்றாண்டில் இருந்தே குழந்தை திருமுழுக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.
திருமுழுக்கின் வழியாக நாம் புது படைப்பாக மாற வேண்டும். கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு பெற வேண்டும். இது தான் முக்கியம்.
No comments:
Post a Comment