பொதுக் காலம் 1ஆம் வாரம்
15.01.2025 - புதன் கிழமை
"உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள்" - 1 பேதுரு 5:2
எல்லோருக்கும் பணி/வேலை உண்டு. எல்லோரும் பரபரப்பாக இவ்வுலகில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அவரவர் வேலை அவரவருக்கு முக்கியம்.
அடுத்தவர் வேலையில் தலையிடாதவரை வரை நாம் நல்லவர்கள் தான். ஆனால் உதவி தேவைப்படும் போது நல்லெண்ணத்தோடு தலையிடுவது தவறில்லை.
முக்கியமான பணிகளுக்கு மத்தியில் சிறு சிறு பணிகளை நாம் செய்ய தவறுவதில்லை.
நம்முடைய வாழ்க்கையில் முக்கிய நபர்களும் இருக்கிறார்கள், நாம் பொழுதுப் போக்கிற்காக பயன்படுத்தப்படும் நபர்களும் இருக்கிறார்கள். நபர்களானலும் சரி பொருட்களானாலும் சரி நாம் முதன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இடையில் வந்தது இடையில் சென்று விடும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 1:29-39) இயேசு இரண்டு வகை பணிகளை கையாண்டார். 1. போதிக்கும் பணி 2. நலமாக்கும் பணி. இரண்டையும் செய்ய இறைவேண்டல் தான் ஆற்றல் கொடுத்தது.
இந்த இரண்டில் அதிக முக்கியத்துவம் பெற்றது போதிக்கும் பணி தான். தான் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்தார், அதன் பின்னர் நோய் நொடிகளை குணமாக்கினார்.
ஒருவேளை அவர் நலமாக்கும் பணிக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இறைவார்த்தை பரவியிருக்காது. வெறுமனே அதிசயங்களை தேடும் மக்களை தான் அவர் உருவாக்கி இருப்பார்.
ஆன்மாவிற்கு ஊட்டம் கொடுத்து உடலுக்கு நலம் கொடுப்பதும் தான் இயேசுவின் முதன்மை பணியாக இருந்தது. இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்து கொண்டே சென்றார்.
இன்று நம்முடைய வேலையை நாம் சரிவர செய்ய அழைக்கப்படுகிறோம். நம்முடைய கடமையை சரிவர செய்ய இயேசுவை போல இறைவேண்டல் வழியாக நாம் கடவுளோடு ஒன்றித்திருக்க வேண்டும்.
நம் வேலையை நாம் பார்த்துக்கொண்டால் நம் வாழ்வு அடுத்தவருக்கு இடையூறாய் இருக்காது. அடுத்தவர் காரியத்திலும் நாம் தலையிட மாட்டோம்.
இருக்கும் வரை நமக்குரியவற்றில் சரியாக இருப்போம். அதனால் நம் வாழ்வும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் அமையும்.
No comments:
Post a Comment