பொதுக் காலம் 3ஆம் வாரம்
29.01.2025 - புதன் கிழமை
"இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்" - யாக்கோபு 1:22
விதைகள் விதைப்பதன் நோக்கம் வீணாக போவதற்கு அல்ல. ஆனால் விதைகள் மடிந்தாலும் பலன் தான் விதை வளர்ந்தாலும் பலன் தான். மடிந்தால் உரமாக, வளர்ந்தால் மரமாக.
இன்று விதைகள் மண்ணுக்குள் விதைக்கப்பட்டாலும் அவை பலன் தர முடியாமல் போகின்றன. காரணம் விதைக்கும் மண்ணுக்கும் இடையேயான தொடர்பை பாலீதின் பைத் துண்டித்து விடுகிறது.
ஒரு சிறிய பொருள் பெரிய செயல் நடைபெறுவதற்கு தடையாக இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 4:1-20) விதைப்பவர் உவமையும் அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கு வகை நிலங்கள் நான்கு வகையான பலன்களை குறிக்கிறது.
வழியோரம் விழுந்த விதைகள் பறவைகளால் விழுங்கப்படுகின்றன(பறவைகளுக்கு பலன்), மண் ஆழம் இல்லா பகுதியில் விழுந்த விதைகள் கதிரவன் மேலே எழ வேர் இல்லாமையால் கருகி போயின (முளைத்தது ஆனால் யாருக்கும் பலன் இல்லாமல் போனது), முட்செடிகள் நடுவே விழுந்தவை வளர்ந்தன ஆனால் பலன் கொடுக்கவில்லை.
நல்ல நிலத்தில் விழுந்தவை மட்டும் தான் வளர்ந்து பலன் கொடுத்தன. சில 30, 60, 100 மடங்காக விளைச்சலை கொடுத்தன.
இந்த விதையை இறைவார்த்தையோடு ஒப்பிடுகிறார் இயேசு. இறைவார்த்தையை கேட்பவர்களை பற்றியும் அவர்களின் மனநிலையும் பற்றியும் விவரிக்கிறார் இயேசு. இறைவார்த்தையை கேட்கிறவர்கள், இறைவார்த்தையில் நிலைத்துநில்லாதவர்கள், பயன் அளிக்காதவர்கள், இறைவார்த்தையை கேட்டு பயன் அளிப்பவர்கள்.
நம்மில் விதைக்கப்படுகின்ற இறைவார்த்தை என்னும் விதைகளின் நிலை என்ன? நமக்குள் விழுந்தது எழுந்து பலன் கொடுக்கிறதா? அல்லது இறைவார்த்தையை கேட்கிறார்களாக மட்டும் இருந்து நாம் நம்மை ஏமாற்றிக் கொள்கிறோமா?
இறைவார்த்தை ஒரு போதும் வீணாக போகாது. அது பயன்படுத்தப்பட்டாலும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் அது ஒளி வீசிக் கொண்டு தான் இருக்கும்.
இன்று நமக்கும் இறைவார்த்தைக்கும் இடையேயான தொடர்பை உலக காரியங்கள் துண்டித்து விடுகின்றன. கேட்க முடியாதவாறு, செயல்பட முடியாதவாறு நமக்குள் களைகள் முளைத்தெழுகின்றன.
களைகள் களையப்படட்டும், இறைவார்த்தை என்னும் விதை நம்மை தட்டி எழுப்பட்டும்.
No comments:
Post a Comment