திருக்காட்சி பெருவிழாவுக்கு பின் வரும் செவ்வாய்
07.01.2025 - செவ்வாய்க் கிழமை
"பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன்” - ஒசேயா 11:4
இருப்பதை இன்னும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் வருவது இயல்பு. கொடுத்து கொடுத்து தேய்ந்த கரங்களும் உண்டு, பதுக்கி பதுக்கி புழுத்த கரங்களும் உண்டு. (பதுக்கியவை கடைசி காலங்களில் பயன்படாது). பகிர்தலும் பகிர்வும் தான் கடைசிவரை நிலைக்கும்.
பரிவுமிக்கவர் பிறரின் பாரம் குறைப்பார். தன்னலம் பாராது பிறர்நலம் பேணுவார்.
‘பரிவு என்பது பிறரை நம்மை விட தாழ்ந்தவராகவோ அல்லது நம்மை உயர்ந்தவராகவோ மதிப்பிடுவது அல்ல. மாறாக நம்மை போல பிறரையும் எண்ணுவது’ என்பார் திமொத்தி மில்லர். (“உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” – மத்தேயு 19:19). அன்பு செலுத்துவோர் பகிர்வு உடையோர் ஆவார்.
மற்றவர்களை, நான் என்னை போல் நினைக்கும்போது, அவர்களது துன்பத்தில் தூர தள்ளி நிற்க மாட்டேன்; மாறாக அவர்களது துயரத்தில் பங்குக்கொள்வேன்.
இயேசு தன் பணிவாழ்வில் இலக்காக கொண்டிருந்ததே துயரில் துணைநிற்பதும், துயரை துடைப்பதும் தான். அதுதான் அவரது பரிவிரக்க செயல்கள். (“அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6: 34-44) மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்”.
தன் சீடர்களின் இயலாமையிலும் அவர்களை இயங்க வைத்தார். பரிவுமிக்க மனிதனாக மாற்றினார். நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?” என்று கேட்டார்கள் சீடர்கள். வாங்க சொல்லவில்லை பகிர சொன்னார் இயேசு.
பகிரப்பட்ட 5 அப்பங்களும் 2 மீன்களும் கடைசியில் மீதமாகி 12 கூடைகளில் எடுக்கப்பட்டது.
பகிரும் உள்ளம் நிறைய பெற்றுக் கொள்ளும் என்பது நமக்கு உதாரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.
உணவையும் உறவையும் பகிர்வோம். பகிரப்பட்டதற்கு அதிகமாக பெற்றுக் கொள்வோம்.
No comments:
Post a Comment