"வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வர்" - திருப்பாடல்கள் 127:2
பொதுக் காலம் 2ஆம் வாரம்
23.01.2025 - வியாழக் கிழமை
தேவையென்றதும் தான் உறவுகள் தேவைப்படுகிறது. தேவை முடிந்ததும் உறவுகள் கூட உபத்திரம் தான். யார் தேவைக்காக நம்மை பயன்படுத்தவில்லையோ அவர் தான் உண்மையான உறவு கொண்டவர்/உறவினர்.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நாம் ஏதாவது ஒரு தேவைக்காக தான் யாரையாவது சார்ந்து இருக்கிறோம். ஏனென்றால் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழ்ந்தாக வேண்டும். இல்லையென்றால் வனத்திற்கு சென்று தவம் தான் செய்ய வேண்டும்.
தேவைக்காக சார்ந்து இருப்பது தவறல்ல தேவை முடிந்ததும் கழட்டி விடுவது தான் தவறு.
காரியம் முடிந்ததும் பல கதவுகள் மூடப்படுகின்றன. பயன் அடைந்தவர்கள் பகை உணர்வோடு செயல்பட ஆரம்பிக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3:7-12) பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொட வேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்துக் கொண்டிருந்தனர்.
இங்கு ஆதாயம் தேடிய கூட்டத்தை நாம் கண்டுக் கொள்ள முடிகிறது. ஆனால் இக்கூட்டம் காரியம் முடிந்ததும் கடந்து போய்விடும்.
உடன் இருக்க எண்ணுபவர்கள் உடனடி தீர்வை தேட மாட்டார்கள். நம் வேலை முடிந்ததும் நாம் சென்று விடலாம் என்பது தான் அவர்களின் எண்ணமாகவும் இருந்தது.
தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, "இறைமகன் நீரே" என்று கத்தின.
ஆனால் இயேசுவின் நோக்கம் பெயர் எடுப்பது அல்ல. இறையாட்சியை விதைப்பது, இறையாட்சியின் விளைநிலங்களாக மாற்றுவது தான்.
நல்வாழ்வை பெற தேவைக்காக மட்டும் யாரையும் நாடாமல் இருப்போம். தேவை முடிந்ததும் கடந்து செல்லாமல் இருப்போம்.
ஒவ்வொரு மனிதருக்கும் தேவை உண்டு. ஒரு தேவை நிறைவடைந்த பின்னர் மற்றொரு தேவை வரும். மனிதரின் தேவைக்கு நிறைவு என்பது இல்லை. நம் மூச்சு உள்ளவரை நம் தேவைகள் தொடரும்.
நிறைவுள்ள மனிதம் படைக்க இறைவழியில் நடப்போம். நல்வாழ்வை பகிர்வோம்.
No comments:
Post a Comment