25_01

அழைத்தவரை பற்றிக் கொள்வோம்...

பொதுக் காலம் 2ஆம் வாரம்

24.01.2025 - வெள்ளிக் கிழமை 

"காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை" - எசாயா 1:3

தாயின் அழைப்புக் குரல் குழந்தைக்கு தெரியும், ஆயனின் அழைப்புக் குரல் ஆடுகளுக்கு தெரியும். ஆனால் படைத்தவரின் அழைப்புக் குரல் தான் படைப்புகளுக்கு தெரியவில்லை.

இன்று முக முகமாய் பார்க்காதவர்கள் கூட பழகியவர்களின் அழைப்புகளுக்கு காத்திருக்கிறார்கள். வேறு ஒருவர் அழைத்தால் கூட நமக்கு தெரிந்தவர்கள் தான் என்று அழைப்பு வரும் இடம் நோக்கி கால்கள் ஓடத் தான் செய்கிறது.

சாதாரண மனிதர்களின் அழைப்புக்கே இத்தகைய ஆற்றல் என்றால் படைத்தவரின் அழைப்புக்கு எத்துனை ஆற்றல்/சக்தி இருக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 3: 13-19) இயேசு பன்னிரு சீடர்களை அழைக்கிறார். தம்மோடு இருக்க, நற்செய்தியை பறைசாற்ற அனுப்பப்பட, பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்க அவர் அவர்களை தேர்ந்துக் கொண்டார்.

அழைத்தவரின் குரலுக்கு அழைக்கப்பட்டவர்கள் செவிமடுத்தார்கள். உடன் நடந்தார்கள், உடனிருந்தார்கள், உறவாடினார்கள், நற்செய்தியை அறிவித்தார்கள்.

நம்மையும் இறைவன் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார். நாம் ஆயனின் குரலுக்கு செவிசாய்கிறோமா? அல்லது உலகின் குரலுக்கு செவிசாய்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

சீடர்கள் அனைவரும் ஒரே பின்னணி/ குடும்ப சூழலை சார்ந்தவர்கள் அல்ல. ஆனால் செவிமடுத்த பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக தகுதியற்ற நிலையை உணர்ந்தார்கள், தகுதியை பெற்றார்கள்.

நாம் நம் அருகில் இருக்கும் நபர்களின் அழைப்புக்கு பதிலிருப்பு செய்வோம். ஏனெனில் தேவையில் இருப்போரின் உடனிருக்கும் அனைவரும் இறைப்பணியை தான் செய்கிறார்கள்.

சிறிய சிறிய வார்த்தைகளால் எளிய உள்ளங்களை தேற்றுவோம். பெற்றுக் கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழ முயல்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...