திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள்
06.01.2025 - திங்கட் கிழமை
"அவர் தமது வில்லை நாணேற்றினார்! அவர் தமது அம்புக்கு என்னை இலக்கு ஆக்கினார்" - புலம்பல் 3:12
இழப்பு இலக்கு இரண்டும் எதிரெதிர் துருவங்கள். இழப்பை கண்ட எல்லோரும் இலக்கை நோக்கி பயணிப்பதில்லை. இலக்கை குறி வைத்தவர்கள் இழப்பை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை.
யாருக்கு தொலைவில் உள்ள மலை தெரிகிறதோ அவருக்கு பக்கத்தில் இருக்கும் கடல் ஒரு தடையாக தெரியாது. யாருக்கும் இழப்பு இல்லை என்று சொல்ல முடியாது, இழப்பை கடந்தால் பொது/புது வாழ்வு உண்டு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 4:12-17, 23-25) திருமுழுக்கு யோவான் கைது செய்யப்பட்ட பின்னர் இயேசு களிலேயாவுக்கு சென்று இறைவாக்கு உரைக்கிறார். மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது எனப் பறைசாற்ற தொடங்கினார்.
நலம் குன்றியோரை நலமாக்கினார், பேய்களை ஓட்டினார். இவ்வாறாக விண்ணரசின் விழுமியங்களை எடுத்துரைத்தார் (நல்வாழ்வு, நோயற்ற வாழ்வு, புது வாழ்வு).
இழப்பைக் கண்டு முடங்கி படுத்தால், நாளை எழுந்து கூட நிற்க முடியாது. எல்லாம் மாறும் என்பது நம்பிக்கை; எல்லாவற்றையும் என்னால் மாற்ற முடியும் என்பது தன்னம்பிக்கை. ஆனால் தன்னம்பிக்கை கர்வத்திற்கு அழைத்துச் செல்ல கூடாது.
எல்லாரையும் நம்மால் மாற்ற முடியாது, ஆனால் நம் செயல்பாடுகளை யாரும் தடை செய்யாதவாறு பார்த்துக் கொள்ள முடியும்.
இயேசு தனது பணியை தொடங்கினார்; திருமுழுக்கு யோவானை தொடர்ந்து இறையரசை அறிவித்தார். தடைகள் வந்தது, ஆனாலும் தடுமாறவில்லை. இலக்கு தெளிவானால் இழப்பு எதிரியல்ல...
நாமும் இறையரசு என்னும் இலக்கை அடைய இடையூராய் இருக்கும் இழப்புக்களை தூக்கி எறிவோம்.
யாரும் எதுவும் நம்மையும் நம் செயல்களையும் தடை செய்யாதவாறு பார்த்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment